Friday, December 16, 2016

காக்காய் வலிப்பை தடுக்கும் சடா மாஞ்சில் :

காக்காய் வலிப்பை தடுக்கும் சடா மாஞ்சில் :

காக்காய் வலிப்பை தடுக்கும் சடா மாஞ்சிலை பற்றி இன்றைய நாட்டு மருத்துவத்தில் காண்போம்: சடா மாஞ்சில். நத்தோ ஸ்டேட்டிஸ் சடா மாஞ்சி என்பது தாவர பெயர். தபஸ்பினி என்பது  ஆயுர்வேத பெயர். ஸ்பைக்னால்(Spikenard Plant) ஆங்கில பெயர். ஹிப்னாடிக் எனப்படும் புத்தி பேதளித்த  நிலையை போக்கக்கூடியது. காக்காய் வலிப்பு தணிக்கக்கூடியது. மாதவிலக்கு  கோளாறு போக்கும். மாத விலக்கை தூண்டக் கூடியது. இதற்கு சடா மாஞ்சில் தேனீர்  குடிக்கலாம்.

செய்முறை: சடா மாஞ்சில் வேர் பொடி நாட்டு மருந்து கடையில்  கிடைக்கும். ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் விட்டு சடா மாஞ்சில் 1  கிராம் முதல் 2 கிராம் வரை சேர்த்து அரை ஸ்பூன் கருஞ்சீரகம், பனைவெல்லம் 1  ஸ்பூன் போட்டு கொதிக்க விட்டு தேனீர் தயாரித்து வடிகட்டி குடிக்க  வேண்டும். தடைபட்ட மாதவிடாய் சீர்படும். பெண்கள் மென்ட்ஸ்டிரல் பீரியட்  வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன் பயன்படுத்த தொடங்கினால்  ஒருவாரத்துக்குள்ளாகவே குணம் தெரியும். குறைவான ரத்த போக்கு உள்ளவர்கள் சடா  மாஞ்சில்  எடுத்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மாத விலக்கு காலங்களில்  ஏற்படும்  வயிற்று வலி குறையும்.

சடா மாஞ்சில் மூளைக்கு இதமான நிலை தரும்.  நரம்புக்கு பலம் தரக்கூடியது. 1 கிராம் முதல் 3 கிராம் வரை சாதாரணமாக  எடுத்துக்கொள்வதை இந்திய மருத்துவம் பரிந்துரைக்கிறது. அதிகம் எடுத்தால்  தூக்கம் அதிகரிக்கும். ஞாபக சக்தி தூண்டக்கூடியது. வயது ஆவதினால் ஏற்படும்  மறதி போக்கும். சோர்வு நிலை மாற்றும். காக்காய் வலிப்பு வராத வண்ணம்  தடுக்கக் கூடியது. குழந்தைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். சடா  மாஞ்சில் தனிப்பட்ட முறையில் கருப்பை கோளாறு போக்கக்கூடியது.

குறிப்பாக மாத  விலக்கு தூண்டக்கூடியது. மாதவிலக்கு முன் ஏற்படும் தலைவலி, உடல் வலி,  அச்சம் தணிக்கும். மாதர்களுக்கு கழிவுகளை வெளித்தள்ளக்கூடியது. சடா மாஞ்சில் பயன்படுத்தி  இருமல் மற்றும் சளி மருந்து தயாரிக்கலாம். சடாமாஞ்சில் பொடி 500 மில்லி  கிராமிலிருந்து 1 கிராம் எடுத்து தேன்விட்டு கலக்க வேண்டும். இதை எடுத்துக்  கொண்டால் நெஞ்சக சளி கரைக்கும், மூக்கடைப்பு போகும். உயர் ரத்த  அழுத்தம் தணிக்கும். ரத்தம் சுத்தமாகும், ரத்த ஓட்டம் ஒழுங்குபடும். 

சடா மாஞ்சில் இதயத்தை பலப்படுத்தக்கூடியது. சடா மாஞ்சில் 1 கிராம் அல்லது 2  கிராம், 1 துண்டு லவங்க பட்டை, சிட்டிகை பச்சை கற்பூரம் அத்துடன் பனங்கற்கண்டு ஆகியவற்றை நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி உயர் ரத்த  அழுத்தம் இருப்பவர்கள் தொடர்ச்சியாக எடுக்கலாம். நரம்பு கோளாறுக்கு துணை  மருந்தாக குடிக்கலாம். மனச்சோர்வு, தூக்கமின்மை, வயிற்று  கடுப்புக்கு மருந்து: சடா மாஞ்சில் வேர் பகுதி 1 முதல் 2. அத்துடன் சீனா  கற்கண்டு அல்லது பனங்கற்கண்டு சேர்க்கலாம், அரை ஸ்பூன் கசகசா. தேனீராக  வடிகட்டி கடைசியாக காய்ச்சிய பால் சேர்க்க வேண்டும். சடா மாஞ்சில் மேல் பூச்சாக பூசினால் அக்கி சீக்கிரம் குணமாகும்.

No comments:

Post a Comment