Saturday, December 17, 2016

சொட்டுநீர்ப் பாசனம்...

சொட்டுநீர்ப் பாசனம்... சொட்டுச் சொட்டாக நீர்... கட்டுக் கட்டாக லாபம்!

சிறு, குறு விவசாயிகளுக்கு 100% சொட்டுநீர் மானியம்!

தண்ணீருக்காக ‘மூன்றாம் உலகப்போர் மூளும்’ என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். ஆனால், நம் நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலேயே தண்ணீருக்காகப் போர் மூண்டு கொண்டிருக்கிறது. இந்தச் சம்பவங்களெல்லாம் நாம் விழித்துக் கொள்வதற்கான சமிக்ஞைகள்தான். இனியாவது தண்ணீரைப் பணத்தைப் போல எண்ணி எண்ணிச் செலவழிக்க வேண்டும்.

அதற்கு முறையான சொட்டுநீர்ப் பாசனம், அதற்கான கருவிகள், கருவிகளைப் பராமரிக்கும் முறைகள் போன்றவை குறித்து அலசப்போகிறது, இக்குறுந்தொடர். சொட்டுநீர்ப் பாசன முறைகள் குறித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த வேளாண் பொறியாளர் இளமுருகு பகிர்ந்துகொண்ட தகவல்கள் தொடர்கின்றன.

காய்ச்சலும் பாய்ச்சலுமாகப் பாசனம்!

“விவசாயம் என்பது ஒருவகை விஞ்ஞானம். அதை எடுத்தேன், கவிழ்த்தேன் எனச் செய்துவிட முடியாது. ஒவ்வொரு பருவத்திலும், அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ற பயிர்களைத்தான் சாகுபடி செய்ய வேண்டும். பயிருக்குப் பட்டம் மட்டுமல்ல... பாசனம் செய்யப்படும் தண்ணீரின் அளவும் முக்கியம். பயிருக்குத் தண்ணீர் பாய்ச்சுவது எத்தனை முக்கியமோ, அதேபோல போதுமான காய்ச்சலும் (நிலத்தைக் காய விடுவது) முக்கியம். இளம் பயிராக இருக்கும்போது, தண்ணீர் குறைவாகக் கொடுக்க வேண்டும். வளர வளர வளர்ச்சிக்கேற்றாற்போல, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீரை அதிகப்படுத்தவேண்டும். இதை, வாய்க்கால் பாசனத்தில் முறைப்படுத்த முடியாது. ஆனால், சொட்டுநீர் முறையில் இதை முழுமையாக முறைப்படுத்த முடியும். பொதுவாகச் சொட்டுநீர்க் குழாயை அமைத்துக் கொடுக்கும் நிறுவனத்தினர், நாம் பயிர் செய்யவிருக்கும் பயிருக்குத் தேவையான அளவில்தான் அமைத்துக் கொடுப்பார்கள். அதனால் நாமாக எக்காரணம் கொண்டும் குழாய்களில் துளையிடக்கூடாது. இது சீரான பாசனத்துக்குத் தடை ஏற்படுத்திவிடும்” என்ற இளமுருகு, மானியம் குறித்த தகவல்களைச் சொல்ல ஆரம்பித்தார்.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம்!

“நவீன நீர்ப் பாசனத் திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானியத் திட்டங்களை அறிவித்துள்ளன. ஐந்து ஏக்கர் அளவு மற்றும் அதைவிடக் குறைவாக நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சொட்டுநீர்க் குழாய்களை அமைக்க 100 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது. ஐந்து ஏக்கர் பரப்புக்கு அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒருவர் 12 ஏக்கர் அளவு நிலத்துக்கு மட்டுமே மானியம் பெற முடியும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை அணுகினால், மானியம் பெறுவதற்கான ஆலோசனைகளைச் சொல்லி வழிகாட்டுவார்கள்.

விலையைத் தெரிந்துகொள்ள வேண்டும்!

ஒவ்வொரு பயிருக்கும் நடவு செய்யும் இடைவெளி மாறும் என்பதால், இடைவெளிக்கேற்ற அளவில், சொட்டுநீர்க் குழாய்களை அமைப்பதற்கான செலவுத்தொகையை நிர்ணயம் செய்துள்ளது, அரசு. அந்தத் தொகையின் அடிப்படையில்தான் மானியம் வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட சில நிறுவனங்களும் சொட்டுநீர்க் குழாய்கள் அமைப்பதற்கான செலவுத்தொகையை நிர்ணயித்துள்ளன. விவசாயிகள் மானியத்துக்கு விண்ணப்பித்த பிறகு விவசாயி தேர்ந்தெடுக்கும் நிறுவனம் நிர்ணயித்துள்ள தொகை, அரசு நிர்ணயித்துள்ள தொகை ஆகிய இரண்டையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றில் எது குறைவோ அந்தத் தொகைக்கேற்ப மானியம் வழங்கப்படும். அதனால், விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட விலை நிலவரங்களைக் கவனத்துடன் பரிசீலிக்க வேண்டியது அவசியம்” என்ற இளமுருகு, கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைச் சொன்னார்.

ஏமாற்று முகவர்களிடம் உஷார்!

“ஒரு ஏக்கர் நிலத்தில் 10 அடிக்கு 10 அடி இடைவெளியில் பயிர்கள் இருந்தால், அதற்குச் சொட்டுநீர்க் குழாய்கள் அமைக்க ரூ.14,277 செலவாகும்.  இந்த விலையில் கிடைக்கவிருக்கும் பொருட்கள் குறித்த பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், அவற்றில் சில பொருட்கள் நமக்குத் தேவைப்படாது எனும்பட்சத்தில் அவற்றுக்குப் பதிலாக, நமக்குத் தேவைப்படும் வேறு பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இதை மறைத்து சொட்டுநீர்க் குழாய்களை அமைத்துக் கொடுக்கும் முகவர்கள், நாம் கேட்கும் பொருட்களுக்குத் தனியாகப் பணம் கேட்பார்கள். அதனால் சுதாரிப்பாகக் கணக்குப் பார்த்துதான் பணத்தைக் கொடுக்க வேண்டும்.

இனி விவசாயிகளின் கையிலேயே மானியம்!

இதுவரை சொட்டுநீர் அமைக்கும் முகவர்கள் மூலமாகத்தான் மானியத்தொகை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது, மானியங்கள் விவசாயிகளுக்கு நேரடியாகக் கிடைக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது, அரசு. இனி விவசாயிக்குத் தெரியாமல், நிறுவனத்தினர் மானியத் தொகையை எடுக்க முடியாது. ஆன்லைன் மூலமாகவே, சொட்டு நீர் மானியத்துக்கு விவசாயிகள் நேரடியாக விண்ணப்பிக்கும் முறை, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய முறையில் மானிய விவரங்கள் சம்பந்தப்பட்ட விவசாயியின் செல்போன் எண்ணுக்குக் குறுஞ்செய்தியாக வந்துவிடும். அதனால் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்” என்றார்.

அரசு நிர்ணயித்துள்ள செலவுத்தொகை!

ஒரு ஏக்கர் நிலத்தில் சொட்டுநீர்க் குழாய்கள் அமைக்க இடைவெளி அடிப்படையில் அரசு நிர்ணயித்துள்ள விலைப்பட்டியல் படமாக கீழே இணைக்கபட்டுள்ளது...

ஐந்து ஏக்கர் அளவு மற்றும் அதைவிடக் குறைவாக நிலம் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குச் சொட்டுநீர்க் குழாய்களை அமைக்க 100 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது. ஐந்து ஏக்கர் பரப்புக்கு அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியம் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒருவர் 12 ஏக்கர் அளவு நிலத்துக்கு மட்டுமே மானியம் பெற முடியும்.

குறிப்பு: இது ஒரு ஏக்கர் நிலத்துக்கான அளவு. நிலத்தின் பரப்பு கூடும்போதோ, குறையும்போதோ இத்தொகையின் மடங்கில் கூட்டி, குறைத்துக்கொள்ளக் கூடாது. பரப்பளவுக்கேற்ப குழாய்களின் தேவை வித்தியாசப்படும் என்பதால், நிலத்தின் அளவைப்பொறுத்துச் செலவுத்தொகை மாறும். அதுகுறித்த விவரங்களைத் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் தெரிந்துகொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதும் தெரிந்துகொள்ள முடியும்.

ஆன்லைனில் தோட்டக்கலைத் துறை குறித்து அறியவும், சொட்டுநீர் மானியம் பெற

http://www.tanhoda.gov.in/

என்ற இணையதளத்துக்கு சென்று பார்க்கவும்.

தண்ணீர் அளவு!

சில பயிர்களுக்குத் தினமும் தேவைப்படும் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச தண்ணீர் அளவு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது (அளவு லிட்டர் கணக்கில்)...

திராட்சை  -  20-32

மாதுளை  -  50-60

கொய்யா  -  70-80

சப்போட்டா   -  70-80

மா  -  70-80

நெல்லி   - 70-80

தென்னை  -  80 -120

எலுமிச்சை  -   80-120

ஆரஞ்சு  -  80-120

முந்திரி  -  80-120

வாழை  -  16-20

பப்பாளி -   16-20

No comments:

Post a Comment