Sunday, January 8, 2017

தமிழ்க்குடிகளின் வழிபாடு

தமிழ்க்குடிகளின் வழிபாடுகளைப் பற்றி ஓலைச்சுவடிகள்,கல்வெட்டுகள்,செப்புப்பட்டையங்கள் போன்றவற்றில் மட்டுமே தேடுவது என்பது இல்லாத ஊருக்கு வழிதேடுவது போன்றதாகும்.

ஆலய நுழைவுப் போராட்டம் நடப்பதற்கு முன் ஓரிரு சாதிகளைத் தவிர மற்ற குடிகள் யாரும் பெருங்கோவில்கள் என்ற நிறுவனங்களுக்குள் சென்றேதேயில்லை.

நாட்டின் குடிமக்கள் அவரவர்களின் குலதெய்வ வழிபாட்டை(கிராமப்புற முன்னோர் வழிபாடு) மட்டுமே செய்துவந்தனர். பெருங்கோவில்களில் உள்ள கல்வெட்டுக்கள் பெரும்பாலும் முடியரசர்களின் வரலாற்றை மட்டுமே நமக்குச் சொல்கின்றன.அரசன் கோவிலுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினான், கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் யாவை,கோவில் நிர்வாகப் பொறுப்பில் யார் யார் இருந்தனர் போன்ற தகவல்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கின்றன.அந்த நாலு சுவற்றுக்குள் உண்மையில் என்ன நடந்தன என்று இன்றும் மர்மமாகவே உள்ளது.

தமிழ் மொழியில் இருக்கும் சமய இலக்கியங்களில் வரும் சில தகவல்களை வைத்துகொண்டு இதுதான் தமிழர் சமயம் என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது.நின்றசீர் நெடுமாறன், மகேந்திரவர்மப் பல்லவன் போன்ற அரசர்கள் தான் சமயமாற்றம் செய்யப்பட்டார்களே தவிர, அந்நாட்டின் குடிமக்களும் சமயம் மாறினார்கள் என்பதற்கு எந்தவிதச் சான்றுகளும் கிடையாது. குடிமக்களுக்கும் நிறுவனப்படுத்தப்பட்ட சமயங்களுக்கும் சிறிதும் தொடர்பு கிடையாது. சமயத்தை வைத்து அரசனை இயக்குவோர் எப்போதும் ஒரு தனிக்குழுவாகவே இருந்துள்ளனர்.

அரசனை தன்வசப் படுத்திக்கொண்டு, நில புலன்களை எழுதி வாங்கிவிட்டு உழைப்பே இல்லாமல் தின்று வயிறு வளர்ப்பவர்கள் அவர்கள் அவர்கள்.

அனால் குடிமக்களோ காலங்காலமாய் அவர்களது கிராமப்புற முன்னோர் வழிபாட்டில் இருந்து சிறிதும் விலகியது கிடையாது.இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது நெல்லைச் சீமை(திருநெல்வேலி).

நெல்லையில் புகழ்பெற்ற காசிவிசுவநாதர் கோவில்,நெல்லையப்பர் கோவில்,நவ திருப்பதி கோவில்கள்,அருக சமயக் குடவரைக் கோவில்கள்,ஆசீவகப் பாழிகள் போன்றவை அச்சீமையை ஆண்ட அரசர்கள் எந்த சமயத்தைக் கடைப்பிடித்தனரோ அச்சமயம் வளர நிதியுதவி(மக்களின் வரிப்பணம் ! ) செய்து கட்டிக்கொடுக்கப்பட்ட சமய நிறுவங்களே தவிர பொதுமக்கள் வணங்கும் இசக்கியம்மன்,சுடலைமாடன்,மாரியம்மன் போன்ற வழிபாடுகள் ஆதிகாலம் முதல் இன்று வரை மாறாமல் உள்ளது.

அந்நியச் சமயங்களின் தாக்கம் அரசனுக்குத்தானே தவிர குடிமக்களுக்கு இல்லை.ஐயனாரின் சிலை வழிபாடு மூலம் பலியிடலைத் தடை செய்ய என்னதான் முயன்றாலும் அது இன்றுவரை தொடந்து கொண்டுதான் வருகிறது.ஆங்கிலயேர் காலக் குறிப்புகளில் தமிழ்நாட்டின் குடிமக்களில் ஒரு சில உயர் வகுப்பினரைத் தவிர பெரும்பாலான மக்கள் குலதெய்வத்தை மட்டுமே வணங்கியதாகப் பதியப்பட்டுள்ளது.

தமிழர் வரலாற்றைத் தேடுவோர்,கிராமியக் கோவில்களுக்குச் செல்லாமல் புத்தகப் புழுபோல கல்வெட்டுக்களை மட்டும் ஆராய்ந்து கொண்டிருந்தால்
முட்டுச்சந்தில் போய் முட்டிக்கிட்டு கிடக்கவேண்டியது தான்.

முதல் படத்தில் இருப்பது நெல்லைச் சீமையெங்கும் பரவிக்கிடக்கும் சுடலைமாடன் வழிபாட்டில் இருக்கும் வழிபாட்டுப் பீடம்.சிற்பக் கலைஞர்களால் செத்துக்கப்ட்ட சிலைகள் கிடையாது,வேத மந்திரங்கள் கிடையாது,கல்லைக் கழுவிக் குடிப்பது கிடையாது. குலதெய்வம் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டுகொள்ள ஒரு சிறிய மேடை,அதன் மீது நடுகல் போல தூண்வடிவில் கற்கள்.விளக்கு ஏற்ற விளக்கு மாடங்களும் உள்ளன.

ஆண்டுக்கு ஒருமுறை அங்கே சென்று, சேவல்/கிடாய் பலியிடுதலை மட்டும் தவறாமல் கடைப்பிடிக்கின்றனர்.

இரண்டாவது படத்தில் இருப்பது தென்காசியில் உள்ள காசி விசுவநாதர் கோவில்.வானுயரக் கட்டப்பட்ட கோபுரங்கள்,உலகம் மெச்சும் கட்டிடக்கலை,உள்ளே இருப்பவர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சுத்துவட்டாரத்தில் வாழும் மக்களைக் காக்கும் காவற்கருப்புகளைக் கட்ட கலசங்கள் போன்றவை இடம்பெற்றுள்ள இந்நிறுவனம் பிற்காலப் பாண்டியர்களுள் ஒருவரான பராக்கிரமப் பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகும்.அரசனின் புகழ் பாடும் கல்வெட்டுக்களும் ,ஒரு சில தமிழ் சாதிகளைச் சேர்ந்த முக்கியமான ஆட்களின் பெயர்களும் அக்கோவிலின் உள்ளே உள்ளன.

பெருமேடு வடிவில் உள்ள கோபுரம் சூரிய வழிபாட்டின் ஒரு சின்னம் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.சூரியன் உச்சமடையும் நாளான மேட ஞாயிறு ஒன்றாம் நாள் இக்கோவில் திருவிழா நடக்கும்.

ஆனால் சுடலை மாடன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள நடுகல்லில் மூன்றாம் பிறையின் சின்னம் உள்ளது. அனைத்து அம்மன் கோவில்களிலும் சூலம் உள்ளது. இவை சந்திர வழிபாட்டின் சின்னங்களாகும். பொதுவாகவே சந்திர வழிபாடு செய்வோர் புதைக்கும் வழக்கத்தையும், சமாதிக்குச் சென்று மரியாதை செய்யும் ( நடுகல் ) வழக்கத்தையும் கொண்டவர்கள் ஆவர்.

சுடலை மாடன் கோவிலில் உள்ள பிறையின் சின்னம் தான் அரேபியாவில் உருவான இசுலாமிய சமயத்தின் சின்னமாகவும் உள்ளது.அரேபியப் பழங்குடிகளும் சந்திர வழிபாடு செய்பவர்கள்.

சேரன் செங்குட்டுவன் பிறையைப் பார்த்து மாதக்கணக்கை உறுதி செய்ததும்,துளுநாட்டுப் பாண்டியர்களின் கொடியில் இரட்டை மீனோடு இரட்டைப் பிறை இருப்பதும் முந்தைய கால தமிழ் அரசர்கள் சிலர் சந்திர வழிபாடு செய்யும் அரசர்களாக இருந்தமைக்கு அசைக்கமுடியாத சான்றுகளாகும்.

இன்று முற்காலச் சேரனும் இல்லை,முற்காலப் பாண்டியனும் இல்லை.இன்றைய திருவாங்கூர் அரசன் ஒரு வந்தேரியாவான்.பிற்காலப் பாண்டியர்கள் சூரிய வழிபாடு செய்த சமயத்தைக் கடைப்பிடித்தவர்களால் இயக்கப்பட்டவர்களாவர். .சோழர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.அவர்களின் பெயரிலே உள்ளது அவர்கள் எந்த வழிபாடு செய்தவர்கள் என்று.

மூன்றாம் பிறை பார்ப்பவன் எல்லாம் அரேபியன்,இசுலாமியன் என்று தற்குறித்தனமாக பேசுவோர் மதவாதக் கட்சியைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

இசுலாமுக்கும் பாண்டிய மண்ணுக்கும் நீண்ட நெடிய தோடர்பு உள்ளது.இரண்டுக்கும் பாலமாக இருப்பவர் சுடலை மாடன் ஆவார்.

No comments:

Post a Comment