Friday, January 6, 2017

இப்படி ஒரு சம்பவம் தன் வாழ்வில் நடக்கும் என அந்த இளம்பெண் எப்போதும் எண்ணியதில்லை !

இப்படி ஒரு சம்பவம் தன் வாழ்வில் நடக்கும் என
அந்த இளம்பெண் எப்போதும் எண்ணியதில்லை !
.
சென்னையை சேர்ந்த அவள் , தான் அடிக்கடி செல்லும் அந்த அனாதை இல்லத்திற்கு  வழக்கம் போல  அன்றும் சென்றிருந்தாள் .

அந்த இளம்பெண்ணின்  பெயர் தனா .
சேவை செய்வதில் ஆர்வம் மிக கொண்டவள் .

அந்த அனாதை இல்லத்தில்தான் ....
தற்செயலாக தனாவின் கண்களில் பட்டாள் அந்த அழகுக் குழந்தை தெரசா .
.
ஆறுமாத குழந்தையாக அங்கே ...அந்த அனாதை இல்லத்தின் ஒரு தொட்டிலில் அழுது கொண்டிருந்தாள் தெரசா .

அவளைப் பார்த்தவுடன் தனாவுக்கு என்னவென்று சொல்ல முடியாத ஏதோ ஒரு புதிய உணர்வு ...
ஒருவேளை ... இதுதான் பூர்வ ஜென்ம உறவோ..?
.
ஓடிப் போய் குழந்தை தெரசாவை தன் கைகளில் அள்ளி அணைத்துக் கொண்டாள் தனா .
தனா கை பட்டதும் தன் அழுகையை நிறுத்தி விட்டாள் தெரசா.
.
உருகிப் போனாள் தனா .

அந்த அனாதை இல்ல சகோதரிகள் , தனாவுக்கு நன்கு பழக்கமானவர்கள்தான் . அவர்களிடம் தனா கேட்டாள் : “ சிஸ்டர் ... யார் இந்தக் குழந்தை ..?
இவளுடைய அம்மா ....?”

“ இருக்கிறாள் .. ஆனால் இந்தக் குழந்தையை இங்கே விட்டு விட்டு அவள் எங்கோ போய் விட்டாள்.”

“காரணம் ...?”

“... அவள் எய்ட்ஸ்சால் பாதிக்கப்பட்டு .....”

“ஓ .. அப்படியானால் இந்தக் குழந்தைக்கும் ...?”

“இல்லை . நல்ல வேளையாக இந்தக் குழந்தைக்கு HIV பாதிக்கவில்லை ..”
.
பெருமூச்சுடன் அந்தக் குழந்தையை மீண்டும் தொட்டிலில் கிடத்தினாள் தனா .

வீறிட்டு அழுதது அந்தப் பிள்ளை . அந்த அழுகை தனாவை என்னவோ செய்தது . மீண்டும் அள்ளி எடுத்து மார்போடு அணைத்துக் கொள்ள ... அமைதியானாள் குழந்தை தெரசா .
.
சில நிமிடங்களுக்கு பின் .. தனாவின் அரவணைப்பில் , குழந்தை தெரசா நிம்மதியாக உறங்கிப் போக ....

அமைதியாக அவளை அங்கே உள்ள தொட்டிலில் விட்டு விட்டு , வீட்டுக்கு வந்து விட்டாள் தனா .
.
ஆனால் ... வீட்டுக்கு வந்த பின்னும் ...
விடாமல் திரும்ப திரும்ப குழந்தை தெரசாவின் நினைவு ....
“ஒருவேளை ... இதுதான் தாய்மை உணர்வு என்பதோ ..?”
.
இரவு முழுவதும் உறங்காமல் புரண்டு புரண்டு படுத்த தனா ... இறுதியில் அந்த முடிவை எடுத்து விட்டாள் .
.
அதிகாலையிலேயே எழுந்து அந்த அனாதை இல்லத்துக்கு கிளம்பி விட்டாள் .

“ சிஸ்டர் ...”

”சொல்லுங்கள் தனா ..”

“நான் குழந்தை தெரசாவை தத்து எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.”
.
அனாதை இல்ல சகோதரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் .
“ஏன் சிஸ்டர் ..? என்ன யோசிக்கிறீர்கள் ? நான் இவளை நன்கு பார்த்துக் கொள்வேன் ..”

“அது எங்களுக்கு தெரியும் தனா ... ஆனால் அரசாங்க விதிகளின்படி தனிப்பட்ட நபர்களை விட .... தம்பதிகளுக்குத்தான் , தத்து எடுப்பதற்கு முதல் உரிமை”
.
தனா தனியாக அமர்ந்து சிந்தித்தாள் : “ இந்தக் குழந்தை தெரசாவை நான் எப்படியாவது தத்து எடுத்தாக வேண்டும்.. அதற்கு என்ன வழி ?”
.
உடனடியாக புறப்பட்டு தன் நீண்ட கால நண்பர் திலக்கை சந்தித்தாள் தனா .
திலக் – தனா ... இருவருக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு சென்று சேவை செய்வதில் நீண்ட கால பழக்கம் .

“என்ன தனா ? திடீர் என்று தேடி வந்திருக்கிறாய் ?”

“திலக் ..நாம் உடனடியாக திருமணம் செய்து கொள்ளலாமா ..?”
.
திடீர் என்று தனா இப்படி கேட்டதும் திகைத்துப் போனார் திலக் : “ தனா .. என்ன ஆயிற்று உனக்கு ?”
.
நெகிழ்ச்சியோடு குழந்தை தெரசா பற்றி கூறினாள் தனா : “நாம் கல்யாணம் செய்து தம்பதிகளாகி விட்டால் , அந்த அழகுக் குழந்தை தெரசாவை நாமே தத்து எடுத்துக் கொள்ளலாம் அல்லவா..?”
.

“ஓ .... ஒரு நல்ல காரியத்திற்காக நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறாய் . ஓகே..எனக்கு சம்மதம் ..”
.
ஆனால் ...
தனாவின் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை . “தத்து எடுப்பதற்காக கல்யாணமா ? அவசரப்படுகிறாய் தனா . கொஞ்சம் பொறு .யோசிக்கலாம் .”
.
யோசித்தார்கள் ... யோசித்தார்கள் ..நிறைய யோசித்தார்கள்...!
.
அதற்குள் ஆறு மாதங்கள் ஓடி விட்டன.
அதன்பின் பெற்றோர் சொன்னார்கள் :
“ஓகே தனா ..உன் விருப்பம் போல செய் ..”
.
உடனடியாக திலக்கை இழுத்துக் கொண்டு அந்த அனாதை இல்லத்துக்கு ஓடினாள் தனா : “வாருங்கள் திலக் ..கல்யாணத்துக்குப் பின் நாம் தத்து எடுக்கப் போகும் அந்தக் குழந்தை தெரசாவை இப்போதே நேரில் சென்று பார்த்து வரலாம் ..”
.
ஆனால் .... அங்கே .. அந்த அனாதை இல்லத்தில் ...
.
“சிஸ்டர் ... எங்கே அவள் ..?”
“யார்..?”
“என் குட்டி தேவதை தெரசா ..”
.
சில நிமிட அமைதிக்குப் பின் ..
சிஸ்டர்கள் சொன்னார்கள் :” ஸாரி தனா ... குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன் அவளை தத்து கொடுத்து விடுவது வழக்கம் .. அதனால் அவளை ...”

“அவளை..?”

“வேறு ஒரு பெற்றோருக்கு சட்டபூர்வமாக தத்து கொடுத்து விட்டோம் ... சில நாட்களுக்கு முன்தான் ..”
.
“ஓ”வென்று கதறி அழுதாள் தனா  : “நோ ..கடவுள்  என்னை ஏமாற்றி விட்டார்  .”

திலக் ஆறுதல் சொன்னார் : “இல்லை தனா ..ஆண்டவன் யாரையும் ஏமாற்றுவதில்லை .”

“இல்லை திலக்... இனி என் வாழ்வில் நான் அனாதைக் குழந்தைகளுக்கு சேவை செய்யப் போவதும் இல்லை. கல்யாணம் செய்து கொள்ளப் போவதும் இல்லை .”

“தனா .. உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறாய் நீ ... நான் ஒன்று சொல்லட்டுமா ?”

கண்ணீருடன் திலக்கை நிமிர்ந்து பார்த்தாள் தனா .

“தனா .. கொஞ்சம் யோசித்துப் பார். நாம் ஒரு குழந்தை தெரசாவுக்கு பதிலாக , ஆயிரம் குழந்தைகளை இனி தத்து எடுக்கப் போகிறோம்.. அதுதான் ஆண்டவனின் திட்டம் .”

“என்ன சொல்கிறீர்கள் திலக்..?”
.
அடுத்த சில மாதங்களில் ...
தனா – திலக் கல்யாணம் நடந்து முடிந்தது ... மிக மிக எளிமையாக ..!
.
பரிசுப் பொருட்கள் தவிர்க்கப்பட்டன .
.
ஆனால் .. கல்யாண அரங்கத்தின் நடுவில் ... நன்கொடைகளுக்காக ஒரு சிறப்பு பெட்டி மட்டும் வைக்கப்பட்டிருந்தது ; அது ஏழைக் குழந்தைகளுக்கான கல்வி நிதிக்காக ... !
.
“தெரசா கல்வி நிதி”
.
புன்னகையும் கண்ணீரும் சேர்ந்து வர சொல்கிறாள் தனா : “ எப்படி மறப்பேன் அந்த குட்டி தேவதையை..? என் உயிர் உள்ளவரை அவளை என்னால் மறக்க முடியாது. அதனால்தான் இந்த அனாதைக் குழந்தைகள் கல்வி நிதி திட்டத்திற்கு தெரசாவின் பெயரையே வைத்தேன். இப்போது திலக் சொன்னபடியே ஆயிரம் குழந்தை தெரசாக்களை நாங்கள் தத்து எடுத்து படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்..”
.
இந்த நல்ல காரியத்துக்கு காரணமாக இருந்த அந்த குட்டி தேவதை தெரசா ...
.
இப்போது அவள் எங்கே இருக்கிறாள் என்று யாருக்குமே தெரியாது .
.
ஆனாலும் .. யாரோ ஒரு அனாதைக் குழந்தையின் பெயரால் நிதி திரட்டி ,
அந்த நிதி உதவியால் பல அனாதைக் குழந்தைகள் படிப்பது என்பது ...
உலக வரலாற்றில் ஒரு அதிசயம்தான் ..!
.
“அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி..”
.
வாழ்க வளமுடன் குட்டி தேவதை தெரசா !

.

No comments:

Post a Comment