Tuesday, January 31, 2017

தமிழ் பீறிட்டுத் தெறித்ததில் ஒரு புரட்சிப் பாடல்

தமிழ் பீறிட்டுத் தெறித்ததில் ஒரு புரட்சிப் பாடல்

72) நெஞ்சுரம் கொடுப்போம்
============================
திமில் ஏறுவோம்.
தமிழ் கூறுவோம்.
அமிழாமல் கவிழாமல்
தலை தூக்குவோம்.

மொழி போற்றுவோம்.
வழி காட்டுவோம்.
அழியாத ஒழியாத
நிலை ஆக்குவோம்.

(1)
மூளையை சேர்த்தோம்
காளையை மீட்டோம்
நாளைய தினம்
கோழைகள் இல்லை
துணிவைக் கொடுத்தோம்.

தலைவனை தவிர்த்தோம்.
தலைகளை நிமிர்த்தோம்.
கிளைகளை போல்
இளையவர் கை
முளைக்கச் செய்தோம்.

உரிமைகள் மீட்டோம்.
உரியதை கேட்டோம்.
சரியென மனம்
அறிந்ததை பெற
போரிட முனைந்தோம்.

(2)
சரித்திரம் படைப்போம்.
தரித்திரம் துடைப்போம்.
நரித்தனம் கொல்ல
வெறித்தனம் கொள்ள
குறியை வைப்போம்.

புரட்சிகள் செய்வோம்.
வறட்சியை கொய்வோம்.
மிரட்டிடும் பயம்
விரட்டிட ஜெயம்
புரட்டியே வெல்வோம்.

படைகளை சேர்ப்போம்.
விடை பல காண்போம்.
தடை நேரிடில்
உடைத்தே எறி
குடைந்தே செல்வோம்.

(3)
சளைத்தவர் அல்ல.
இளைத்தவர் அல்ல.
இளைஞர்கள் முன்
விளைந்திடும் மண்
களை போக்குவோம்.

நெஞ்சுரம் கொடுப்போம்.
அஞ்சுதல் தடுப்போம்.
வஞ்சகர் தனை
பஞ்சென நினை
கொஞ்சமும் தளரோம்.

கொள்கைகள் கொள்வோம்.
நம் கைகள் கோர்ப்போம்.
வெல்கையில் புகழ்
செல்கையில் புகழ்
நல்வழி நடப்போம்.

எழுதியவர்
- ஜெயராஜ் மணி

No comments:

Post a Comment