நாம் ஏன் கிராம சபையில் பங்கேற்க வேண்டும்...?
நமது அரசியல் அமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் மன்றம்தான் நம் கிராம சபை. கிராம சபை நமக்கான இடம். நம் கிராமத்தை பற்றி நாம் பேசவும் அதற்காக அரசை வேலைசெய்ய வைக்கவும் நமக்குள்ள களம் கிராம சபை.
உதாரணமாக, நமது கிராமத்தில் மரபு கால்நடைகள் எத்தனை உள்ளன அவற்றைப் பெருக்க என்ன செய்ய வேண்டும் என நாம் பேச வேண்டிய இடம் கிராம சபை. நமது கிராமத்தின் ஏரி எப்படி இருக்கிறது, அதை மேம்படுத்த நாம் என்ன செய்ய போகிறோம் என முடிவெடுக்க வேண்டிய இடம் கிராம சபை. அதனால் தான் நாம் கிராம சபையில் பங்கேற்க வேண்டும்.
நமது கிராமத்தை பற்றி நாம் பேசவில்லை என்றால் அரசியல் கட்சிகளா பேசும் ? நமக்குள்ள இவ்வாய்ப்பை நாம்தானே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமது ஊரைப் பற்றி பேசியாகவேண்டும். கிராம சபையில் பேசியாக வேண்டும். கிராம வளர்ச்சி சார்ந்து நாம் விவாதிக்கும் விடயங்களில் நமக்கு விளக்கம் தேவைப்பட்டால், சம்மந்தப்பட்ட அரசு அலுவலரைக் கிராமசபைக்கு அழைக்க முடியும். அவர் மக்களுக்கு விளக்கம் அளிக்கக் கிராம சபை கோர முடியும்.
கிராம பஞ்சாயத்துக்கள் தன்னாட்சி அமைப்புகள். அரசியல் கட்சிகளுக்கோ மத்திய மாநில அரசுகளுக்கோ கட்டுப்பட்டதல்ல கிராம பஞ்சாயத்துக்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் சுயாட்சி அமைப்புதான் கிராம பஞ்சாயத்துக்கள். நாம் அடிமைகளாக இருப்பதும் சுயாட்சி அமைப்பின் குடிகளாக வாழ்வதும் நம் கையில். நம் கிராம சபைகளை வலுப்படுத்த வலுப்படுத்த நம் அடிமைச் சங்கிலியின் ஒவ்வொரு கன்னியும் உடைக்கப்படுகிறது என்றுதான் பொருள்.
நாளை நடக்கவிருக்கும் கிராம சபையில் பங்கெடுப்போம். நன்றி
Poster Courtesy: Pradeep Raj
No comments:
Post a Comment