Thursday, January 5, 2017

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் ஆமணக்கு, கீழாநெல்லி :

மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் ஆமணக்கு, கீழாநெல்லி :

ஆமணக்கு, கீழாநெல்லியை பயன்படுத்தி மஞ்சள் காமாலையை குணப்படுத்துவது குறித்தும், ஆமணக்கு இலை, விதைகளை பயன்படுத்தி வயிற்று வலி, கழுத்து வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகளை போக்குவது பற்றி நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். ஆமணக்கு பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இது பால் பெருக்கியாக விளங்குகிறது. மலச்சிக்கல் பிரச்னையை போக்குகிறது. வலி நிவாரணியாக விளங்குகிறது. பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்குகிறது. ஆமணக்கு பித்தத்துக்கு எதிரான மருத்துவ குணத்தை பெற்றுள்ளது.

ஆமணக்கின் துளிர் இலைகளை பயன்படுத்தி மஞ்சள் காமாலைக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆமணக்கு இலை, கீழாநெல்லி, புளிப்பில்லாத மோர். ஆமணக்கு செடியின் துளிர் இலை பசை, கீழாநெல்லி பசை ஆகியவற்றை சம அளவு எடுக்கவும். இரண்டையும்  பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். இதை புளிப்பில்லாத மோரில் கலந்து சாப்பிடவும். தொடர்ந்து 7 நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் இதை எடுத்துக் கொண்டால், ஈரல் நோய்கள் விலகிப்போகும். ஈரலை பலமாக்கும். மஞ்சள் காமாலை குணமாகும்.

இது மிகவும் பாதுகாப்பான மருந்தாகும். ஆமணக்கை பயன்படுத்தி அடிவயிற்றில் ஏற்படும் வலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆமணக்கு இலை, விளக்கெண்ணெய். ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி தடவவும். இதன்மீது ஆமணக்கு இலைகள் வைத்து வதக்கவும். மாதவிலக்கு சமயத்தில் இந்த இலைகளை அடி வயிற்றில் பற்றுபோன்று சிறிது நேரம் வைத்திருந்தால் வலி மறைந்து போகும். பல்வேறு நன்மைகளை கொண்ட ஆமணக்கு கடுப்பை அகற்றும் தன்மை உடையது.

சிறுநீர் தாரையில் ஏதேனும் தொற்று ஏற்பட்டு அடி வயிறு வலி, எரிச்சலுடன் கூடிய சிறுநீர் பிரச்னை இருந்தால் ஆமணக்கை வதக்கி பற்றாக போடும்போது வலி சரியாகும். வயிற்று வலி இருக்கும்போது தொப்புளை சுற்றி இரண்டு சொட்டு விளக்கெண்ணை விட்டு தேய்த்தால் வலி குணமாகும். ஆமணக்கு விதைகளை பயன்படுத்தி கழுத்து, முதுகு வலிக்கான மருந்து தயாரிக்கலாம். ஆமணக்கு விதைகளை நீர்விடாமல் அரைத்து எடுத்து லேசாக சூடு செய்யவும். இதை துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கும்போது இடுப்பு, கழுத்து, முதுகு வலி குணமாகும். வீக்கம் வற்றிப்போகும்.

ஆமணக்கு விதைகளின் மேல்பகுதி சித்திரம் வரைந்தது போன்று இருக்கும். இது எண்ணெய்யை உள்ளடக்கியது. வலியை போக்க கூடியதாக இருக்கிறது.
தொண்டையில் ஏற்படும் சதை வளர்ச்சிக்கான மருத்துவ முறைகள் குறித்து பார்க்கலாம். தொண்டையில் சதை வளர்ச்சி இருந்தால் காய்ச்சல் வரும். வலி ஏற்படும். உணவுகளை விழுங்குவது சிரமமாக இருக்கும். இப்பிரச்னைக்கு பூண்டு மருந்தாக பயன்படுகிறது. பூண்டுவை நசுக்கி அதனுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து தடவுவதால் வெகு சீக்கரத்தில் வீக்கம் வற்றிப்போகும். தொண்டையில் ஏற்படும் வலி மறைந்து போகும்.

No comments:

Post a Comment