Tuesday, January 31, 2017

நாம் ஏன் கிராம சபையில் பங்கேற்க வேண்டும்...?

நாம் ஏன் கிராம சபையில் பங்கேற்க வேண்டும்...?

நமது அரசியல் அமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் மன்றம்தான் நம் கிராம சபை. கிராம சபை நமக்கான இடம். நம் கிராமத்தை பற்றி நாம் பேசவும் அதற்காக அரசை வேலைசெய்ய வைக்கவும் நமக்குள்ள களம் கிராம சபை.

உதாரணமாக, நமது கிராமத்தில் மரபு கால்நடைகள் எத்தனை உள்ளன அவற்றைப் பெருக்க  என்ன செய்ய வேண்டும் என நாம் பேச வேண்டிய இடம் கிராம சபை. நமது கிராமத்தின் ஏரி எப்படி இருக்கிறது, அதை மேம்படுத்த நாம் என்ன செய்ய போகிறோம் என முடிவெடுக்க வேண்டிய இடம் கிராம சபை. அதனால் தான் நாம் கிராம சபையில் பங்கேற்க வேண்டும்.

நமது கிராமத்தை பற்றி நாம் பேசவில்லை என்றால் அரசியல் கட்சிகளா பேசும் ? நமக்குள்ள இவ்வாய்ப்பை நாம்தானே பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நமது ஊரைப் பற்றி பேசியாகவேண்டும். கிராம சபையில் பேசியாக வேண்டும். கிராம வளர்ச்சி சார்ந்து நாம் விவாதிக்கும் விடயங்களில் நமக்கு விளக்கம் தேவைப்பட்டால், சம்மந்தப்பட்ட அரசு அலுவலரைக் கிராமசபைக்கு அழைக்க முடியும். அவர் மக்களுக்கு விளக்கம் அளிக்கக் கிராம சபை கோர முடியும்.

கிராம பஞ்சாயத்துக்கள் தன்னாட்சி அமைப்புகள். அரசியல் கட்சிகளுக்கோ மத்திய மாநில அரசுகளுக்கோ கட்டுப்பட்டதல்ல கிராம பஞ்சாயத்துக்கள். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் சுயாட்சி அமைப்புதான் கிராம பஞ்சாயத்துக்கள். நாம் அடிமைகளாக இருப்பதும் சுயாட்சி அமைப்பின் குடிகளாக வாழ்வதும் நம் கையில். நம் கிராம சபைகளை வலுப்படுத்த வலுப்படுத்த நம் அடிமைச் சங்கிலியின் ஒவ்வொரு கன்னியும் உடைக்கப்படுகிறது என்றுதான் பொருள்.

நாளை நடக்கவிருக்கும் கிராம சபையில் பங்கெடுப்போம். நன்றி

Poster Courtesy: Pradeep Raj

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலைக் கட்டிய சிற்பியின் பெயர் குணவன். தஞ்சைப் பெரியகோயிலைக் கட்டிய ராஜராஜ சுந்தரமல்லப் பெருந்தச்சனின் மாணவன். தஞ்சை பெரிய கோயில் கட்டுமானத்தில் குணவனின் திறமையையும் திட்டமிடலையும் கண்டு வியந்து ‘நித்த வினோத பெருந்தச்சன்’ என்ற பட்டத்தைச் சூட்டி மகிழ்ந்தான் ராஜராஜன். அந்த நித்த வினோத பெருந்தச்சன்தான் கங்கை கொண்ட சோழீச்சுவரத்தின் தலைமைச் சிற்பி. இலத்திச் சடையன், சீராளன் போன்ற தேர்ந்த கலைஞர்கள் வினோதனுக்கு துணை நின்றார்கள். கங்கை கொண்ட சோழபுரத்தின் நடுவில் கிழக்கு நோக்கி 6 ஏக்கர் பரப்பில் விரிந்துள்ளது இந்தக் கற்றளி. மொத்தம் இரண்டு வாயில்கள் உண்டு. சிதைவுக்குள்ளாகி சரிந்து கிடக்கும் மொட்டை கோபுர பாதையே இக்கோயிலுக்கான பிரதான வழியாக இருந்தது.

சுமார் 86-க்கு 86 அடி அடிபீடமிட்டு 214 அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டது தஞ்சை பெரிய கோயில். இக்கோயிலைக் காட்டிலும் பெரிதாக எழுப்பத் திட்டமிட்டே 100-க்கு 100 அடி என இக்கற்றளிக்கான அடிபீடம் அமைக்கப்பட்டது. ஆனால் 186 அடியே கோபுரம் உயர்த்தப்பட்டது. தான் எழுப்பும் கோயில், தன் தந்தை எழுப்பியதை விட பெரிதாக இருந்தால், வரலாற்றில் அவரின் புகழ் மங்கிவிடும் என்ற நோக்கிலேயே இக்கற்றளியின் உயரத்தைக் குறைத்தான் ராஜேந்திரன் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கோபுரத்தின் உயரத்தைக் குறைத்த ராஜேந்திரன், சோழீஸ்வரரை தன் தேடலுக்கு ஏற்றவாறு பிரமாண்டமானவராக அமைத்தான். 13 அடி, 3 அங்குலம் உயரம். இந்த ஈசனின் உடல் போர்த்த 9 முழ அங்கவஸ்திரம் வேண்டும். இந்தக் கற்றளிக்கான கற்கள் பெரம்பலூருக்கு அருகில் உள்ள சிற்றளி, பேரளி கிராமங்களில் இருந்து பெயர்த்து கொண்டுவரப்பட்டுள்ளன.

ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோயிலுக்கும், கங்கை கொண்ட சோழீச்சுவரத்துக்கும் கட்டமைப்பில் சில வேறுபாடுகள் உண்டு. தஞ்சைக் கற்றளி நான்கு பக்க கோபுர விமான அமைப்பைக் கொண்டது. கங்கை கொண்ட சோழீச்சுவரம், எண் பக்க வடிவ திராவிட கட்டடக் கலை நுட்பத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது. கோயிலின் சிற்பங்கள் அனைத்தும் சைவத் திருமறைகள் சொல்லும் செய்திகளைக் காட்சிப்படுத்துகின்றன.

அக்காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றியடையும் தருணத்தில், வெற்றிச் சின்னமாக சிற்பங்களையும் மணிமுடிகளை யும் கொண்டு வருவது வழக்கம். ராஜேந்திரன் வெற்றி பெற்ற தேசங்களில் இருந்து கொண்டு வந்த அற்புத சிற்பங்கள் பலவும் கங்கை கொண்ட சோழீச்சுவரத்தில் நிறுவப்பட்டுள்ளன. சாளுக்கியத்தில் இருந்து போர் வெற்றிச் சின்னமாகக் கொண்டு வரப்பட்ட 20 கரங்கள் கொண்ட துர்கை, ஒரே கல்லிலான நவகிரக சிற்பங்கள் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சூரியனை தாமரை வடிவில் சித்திரித்து, சுற்றிலும் கிரகங்கள் அமர்ந்திருக்கும் இச்சிற்பத்தை போன்ற வடிவம் இந்தியாவில் வேறெங்கும் இல்லை. இங்கு வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களில் திறன் வாய்ந்த சிற்பிகளின் கரங்கள் நர்த்தனமாடியுள்ளன. ஒவ்வொரு சிற்பத்திலும் ஒவ்வொருவித தனித்தன்மை.

சிற்ப சாஸ்திரம் குலையாமல் வடிவமைக்கப்பட்ட தில்லை ஆடவல்லான் சிற்பம் கலையின் உச்சம். முப்பரிமாணத்தில் எங்கிருந்து பார்த்தாலும் நம்மைப் பார்த்து புன்னகைத்தவாறு  நிற்பதைப் பார்க்கும்போது, உடம்பு சிலிர்க்கிறது. இங்கிருக்கும் நர்த்தன விநாயகர் தன் ஏழு பாகங்களிலும் ஏழு விதமான ஒலியாக எழும்புகிறார்.

அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தின் நளினம் வியக்கவைக்கிறது. அச்சிற்பத்தில் உயிர்ப்பும் உணர்ச்சியும் ததும்புகிறது. கருவறை யின் உள்ளே, சுற்றுப்புற பிராகாரத்தில் கோடையில் குளிர்ச்சியாக வும் குளிர்காலத்தில் வெப்பமாகவும் இருக்குமாறு சந்திரகாந்தக் கற்கள் கொண்டு வடிவமைத்துள்ளார்கள். சிற்பக்கலையின் உச்சமென இக்கோயிலை அடையாளம் காட்டலாம்.

இந்தக் கோயில் முழுதும் அற்புதம் ததும்பும் பதுமைகள் காட்சியாகி இருக்கின்றன. விமானத்தில் உச்சியில் 34 அடி குறுக்களவு கொண்ட பெருங் கல் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. விமானமே லிங்கத்தின் வடிவில் அமைந்திருக்கிறது.
600 அடி நீளம், 450 அடி அகலத்தில் இக்கோயிலின் மதில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நின்றபடி எதிரிகளோடு போரிட முடியும். இரண்டடுக்கு மாட வரிசையுடன் திருச்சுற்று அமைக்கப்பட்டுள்ளது.

இக்கோயிலில் உள்ள நந்தி, செங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் செய்நேர்த்தி யிலும், அளவிலும் தஞ்சை பெரியகோயில் நந்தியை போன்றிருக்கிறது.

நந்திக்கு வலது புறத்தில் 27 அடி குறுக்கள வுள்ள சிங்கமுகக் கிணறு ஒன்று அமைந்துள்ளது. சிங்கத்தின் வயிற்றுக்குள் நுழைகிறது வாயில். 50 படிக்கட்டுக்களைக் கொண்ட இந்த கிணற்றையும் கங்கை நீரைக் கொண்டு புனிதப் படுத்திய பிறகே நீர் நிரப்பினான் ராஜேந்திரன்.

உட்கோயிலின் நீளம் 340 அடி. 100 அடி அகலம். இதன் உள்ளே பிரமாண்டமான மகா மண்டபமும் அர்த்த மண்டபமும் அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் மட்டும் 140 தூண்கள் நிறுத்தப் பட்டுள்ளன. இக்கோயிலின் தூண்கள், விமானங்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டதாக இருக்கின்றன. சிற்ப மேன்மையில் தஞ்சை பெரிய கோயிலை விஞ்சி நிற்கிறது கங்கை கொண்ட சோழீச்சுவரம்.

உலகின் பாரம்பர்யமிக்க கலைக் கோயில்களில் ஒன்றாக கருதப்படும் கங்கை கொண்ட சோழீச்சு வரத்திற்கு 1931-ல், உடையார்பாளையம் ஜமீன் ஸ்ரீகச்சி நல்லப்ப காலாட்கள் தோழ உடையார் காலத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இப்போது, 86 ஆண்டுகளுக்குப் பிறகு, வருகிற பிப்ரவரி 2-ம் தேதி மீண்டும் குடமுழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதுவும், ராஜேந்திரன் காலத்தில் எப்படி நடந்ததோ, அதைப்போல கங்கை நதியில் இருந்து நீர் கொண்டு வந்து குடமுழுக்கு நடக்க இருக்கிறது.

கங்கை வரை வென்று வந்த ராஜேந்திரனின் படை திருப்பனந்தாளை ஒட்டியுள்ள திருலோக்கியில் ஒருங்கிணைந்து, கங்கை கொண்ட சோழபுரத்துக்கு கங்கை நீரை பொற்குடங்களில் சுமந்து வந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. அதுபோன்றே, இப்போதும் கங்கை நீர் திருலோக்கி தலத்துக்கு வந்துசேர, அங்கிருந்து 108 குடங்களில் கங்கை நீரைச் சுமந்து ஊர்வலமாக வந்து, கங்கைகொண்ட சோழீச்சுவரத்துக்கு குடமுழுக்கு நடக்க உள்ளது.
- சக்தி விகடன்

வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள்



வெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள்..!

பொதுவாக நமது இந்துமத கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்க ளிலும் முன்னிலை வகிக்கும் இன்றியமையாத ஒரு மங்கள பொருட்கள்தான் வெற்றிலை, பாக்கு ஆகும்.வெற்றிலையில் ஐந்து தெய்வங்கள் உறைந்துள்ளன.

வெற்றிலையின் நுனியில் மூதேவியும் 
வெற்றிலையின் காம்பில் மகாலட்சுமியும் 
வெற்றிலையின் நரம்பில் பிரம்மாவும் 
வெற்றிலையின் முன் பகுதியில் சிவனும் 
வெற்றிலையின் பின் பகுதியில் சக்தியும் 
என ஐம்பெரும் தெய்வங்கள் உறைந்துள்ளனர்.

எனவே வெற்றிலை போடும்போது நுனியையும்,காம்பையும், நரம்பையும் நீக்கி விட்டு சுண்ணாம்பு தடவி போடுதல் நன்று. 

40 - வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை,பாக்கு சேர்தது உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகும்.ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு செரிமான சக்திகள் குறைய தொடங்கும்.

நாம் உண்ணும் உணவு முறையாக செரிக்கப் பட்டு சத்துக்கள் உடலில் முழுமை யாய் சேருவதற்கும், உடலின் அனைத்து எலும்புகளுக்கு தேவையான சுண்ணாம்பு [Calcium] சத்தை சமன் செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவை யாகும்.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது.கலோரி அளவு 44.

தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

வெற்றிலைக்கு முன்னம் பெறும் பாக்கை வாயிலிட்டால்
குற்றமுறும் உறவோர் கூட்டம்போம்-வெற்றிலையை
முன்னிட்டுப் பாக்கருந்த மூதறிவோர் தம் மார்பின்
மன்னிட்டு வாழும் பூ மாது..

வெற்றிலை, பாக்கு போடும்போது முதலில் பாக்கை மட்டும் போடக் கூடாது.இது குற்றமாகும்.பாக்கை மட்டும் வாயிலிட்டு மென்று உமிழ்நீரை விழுங்கும் போது இதன் துவர்ப்பினால் கழுத்துக் குழல் சுருங்கி நெஞ்சு அடைக்கும்.மயக்கம், மூர்ச்சை அடைய ஏதுவாகும். மேலும் சொந்த பந்த உறவினர்கள் பிரிந்து விடுவர் என சாஸ்திர விதிகள் கூறுகிறது.அதனால் முதலில் வெற்றிலையை மென்று பின்பு பாக்கை வாயிலிட்டு மெல்ல மகா விஷ்ணுவின் இடது மார்பில் வாழும் பூமகள் மகாலட்சுமியின் அருள் கிட்டும்.

அடைக்காய் தின்பதில் ஊறுமுதல் நீர் நஞ்சாம் அதி பித்தம் 
இரண்டாவதூறு நீரே கடையமிர்தம் மூன்றாவதூறு நீர் தான்
கனமதுர நான்காவதூறு மந்நீர் மடையெனவே ஐந்தாறிற்
சுரந்துள் ஊறி வருநீர் களைச் சுகித்து தடையுருப் பித்தமொடு
மந்த நோயும் தளர்பாண்டு நோயும் உண்டாம் தரம் சொன்னோம்.

வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு சேர்த்து உண்ணும் போது முதலில் வாயில் ஊறும் உமிழ்நீர் நஞ்சாகும் இதனை உமிழ்ந்துவிட [துப்பி விட]வேண்டும். இரண்டாவது மெல்லும் போது ஊறும் உமிழ்நீர் அதிக பித்தமாகும். இதனையும் உமிழ்ந்து விட வேண்டும்.மூன்றாவது மெல்லும் போது வாயில் ஊறும் உமிழ்நீர் அமிர்தமாகும். இதனை மட்டும் விழுங்க வேண்டும். நான்காவது ஊறும் உமிழ்நீர் அதிக இனிப்பாக இருக்கும் இதனை விழுங்கலாம்.இதன் பிறகு ஊறும் உமிழ்நீரை விழுங்கக்கூடாது அதனால் மந்தம்,பித்தம்,பாண்டு போன்ற நோய் உண்டாகும்.

வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால் இதனை நாக இலை என்றும் அழைக்கின்றனர்.

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

பெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு!

குறைந்த செலவில் அதிக சத்துக்களைத் தருபவை கீரைகள். உயிர் சத்துக்களும், இரும்பு சத்தும் அதிகம் கொண்டவை. கீரைகளை சமைத்து உண்ணும் பலரும் தண்டினை எரிந்து விடுகின்றனர். கீரைகளின் நிறம் பச்சையாக இருந்தாலும் அவற்றின் தண்டுகள் சிவப்பு, பச்சை,நீலம் வெள்ளை பலவகை நிறத்துடன் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் பலவித மருத்துவ குணங்களை கொண்டுள்ளன.

பச்சைத்தண்டு

கீரைத்தண்டினை பருப்பு சேர்த்து சாம்பார் வைத்தோ, தனியோ பொறியல் செய்தோ சாப்பிடலாம். ரத்தமாக போகும் பேதியை நிறுத்தும் தண்மை இதற்கு உண்டு. காரம் சேர்க்காமல், உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம். சீக்கிரம் குணமாகும்.

செங்கீரைத்தண்டு

பச்சைக் கீரைத் தண்டினைப் போலவே செங்கீரைத்தண்டினை சமைத்து சாப்பிடலாம். இது பித்தம் தொடர்புடைய அனைத்து நோய்களையும் போக்கும். உடல் சூட்டினை கட்டுப்படுத்தும்.
பெண்கள் நோய் குணமாகும்
பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய நோயான பெரும்பாடு நோய்க்கு செங்கீரைத்தண்டு சிறந்த மருந்தாகும். அதிக ரத்தம் வெளியேறி சத்துக்கள் குறைந்து காணப்படுபவர்களுக்கு, செங்கீரைத்தண்டினை சமைத்து தர பெரும்பாடு நோய் குணமடையும். செங்கீரைத் தண்டானது மாதவிடாய் காலத்தில் மிகுதியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். எரிச்சல் வலி வேதனைகளைப் போக்கும்.

வெண்கீரைத் தண்டு

வெண்கீரைத் தண்டினை சமைத்து சாப்பிட நீர்க்கடுப்பும், மூலக்கடுப்பும் குணமடையும்.
யார் சாப்பிடக்கூடாது.கீரைத்தண்டில் பெருமளவு இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன. இது குளிர்ச்சியைத் தரக்கூடியது. எனவே சீதள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது.

எண்ணெய் தேய்த்து குளித்த நாள் அன்று இதனை சாப்பிட சளி பிடிக்கும்.

தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும்

தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும்
======================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன்
சிறப்புக் கட்டுரை!
======================================

தைப்புரட்சி என்று போற்றப்படும் தமிழர் புரட்சி வழங்கியுள்ள பாடங்கள்:

1. இக்கால இளைஞர்களும் - மாணவர்களும் - ஆண்களும் பெண்களும் - சமூகச் சிந்தனை இன்றி நுகர்வு வாழ்வில் தோய்ந்து உதிரிகளாக இருக்கிறார்கள் என்ற வசையைத் தைப்புரட்சி புரட்டிப் போட்டு விட்டது.

சமூகப் பொறுப்பு, தமிழினப் பொறுப்பு ஆகிய வற்றில் பெரியவர்களுக்கே வழிகாட்டும் அளவிற்கு இளைஞர்கள் இலட்சோப இலட்சமாய்த் தமிழ் நாடெங்கும் களத்தில் இறங்கி விட்டார்கள்! அவர்கள் பொறுப்பற்ற உதிரிகளுமல்லர்; விவரம் அறியாதவர் களுமல்லர்! எல்லாம் தெரிந்தவர்களே!

2. ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்டுள் ளோம்; ஒன்றரைக் கோடி உறுப்பினர்களைக் கொண்டுள்ளோம் என்று கூறிக் கொள்ளும் கட்சிகள், தன்னலப் பூதங்களே தவிர, தமிழர்களுக்கான தற்காப்புத் தலைமைகள் அல்ல என்பதைத் தைப்புரட்சி உணர்த்தி விட்டது.

அவற்றின் தலைவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் சுமந்து கொண்டிருக்கும் புகழ்ச்சிப் பட்டங்கள் செல்லப் பிராணிகளுக்கு சூட்டப்பட்ட பெயர்களை விடவும் பொருத்தமற்றவை என்பதைக் காட்டி விட்டது!

3. இந்தியன், திராவிடன் என்ற போலி இனப் பெயர்களைத் தைப்புரட்சிப் புயல், வரலாற்றின் குப்பைக் கூடையில் வீசி விட்டது.

“தமிழன்டா!” என்ற முத்திரை முழக்கத்தைத் தைப்புரட்சி நமது பதாகைகளுக்கு வழங்கியுள்ளது.

“தமிழன்டா” முழக்கத்தில், ஆண்களும் பெண்களும் அடக்கம்; அனைத்து மதங்களும் சாதிகளும் அடக்கம்!

4. இந்தியத் தேசியவாதக் கட்சிகள் - தமிழ் நாட்டில் வெகுமக்கள் கட்சிகளாக - இனி ஒரு பொழுதும் எழ மாட்டா! இந்தியத்தேசியவாதிகள் பெயருக்குக் கட்சி நடத்திக் கொண்டிருக்கலாம் என்ற வரலாற்றுப் பாதையை வரையறுத்து விட்டது.

5. பெரும் பெரும் நாளிதழ்கள் வார ஏடுகள், பெரும் பெரும் தொலைக்காட்சிகள் முதலிய ஊடகங்களைவிட வலிமை மிக்க ஊடகம் ஒவ்வொரு தமிழன் - தமிழச்சி கையிலும் பையிலும் இருக்கின்றது, அது சமூக வலைத்தளம் என்று காட்டிவிட்டது!

அவற்றின் வழியாக நடந்து வரும் கருத்துப் பரிமாற்றங்கள், திறனாய்வுகள், அழைப்புகள் ஆகியவற்றால்தான் தைப்புரட்சி ஏற்பட்டது.

வெள்ளம்போல் தமிழர் கூட்டம்
வீரங்கொள்கூட்டம்; அன்னார்
உள்ளத்தால் ஒருவரே மற்று
உடலினால் பலராய்க் காண்பார்
கள்ளத்தால் நெருங்கொணாதே;
எனவையம் கலங்கக்கண்டு
துள்ளும்நாள் எந்நாள்? உள்ளம்
சொக்கும் நாள் எந்தநாளோ?

என்று ஏங்கிக் கேட்டார் பாவேந்தர். அந்நாள் இந்நாள் என்று மெய்ப்பித்தார் அவர் பேரப்பிளைகள்!

எச்சரிக்கைகள்
==============
1. இசவாதிகள்
------------------------
தமிழர் எழுச்சியைத் திசை திருப்பிட “இசவாதிகள்” (Isamists) கடுமையாக முயல்வார்கள். “இசவாதிகள்” என்பவர் யார்? வெளிநாட்டில், வடநாட்டில், தமிழ்நாட்டில் முந்தியத் தலைமுறையினர் அவரவர் வாழ்ந்த காலத்தில், அவரவர் எடுத்துக் கொண்ட சிக்கலுக்கேற்ப தயாரித்த சிந்தனைத் தொகுப்புகளை அப்படியே இப்போதும் ஏந்திக் கொண்டு, அந்த சிந்தனைகளுக்கேற்ப தமிழ்ச் சமூகத்தை மாற்றிட முயன்று தோற்போர் ஆவர்!

நோயாளியை ஆய்வு செய்து அவருக்கு வந்திருக்கும் தனித்துவமான நோயை அறிந்து அதற்கான மருத்துவ முறையைக் கையாண்டு, மருத்துவம் பார்ப்பவர் சிறந்த மருத்துவர்! என்னிடம் உள்ள ஒற்றை மருந்து எல்லா நோய்களையும் தீர்த்து விடும் என்று கூறுபவர் மருத்துவர் பெயரில் உள்ள மந்திரவாதி! தமிழ்நாட்டில் மந்திரவாத இசங்களுக்குப் பஞ்சமில்லை!

ஒட்டுமொத்தத் தமிழர்களின் எழுச்சியைக் கூறுபோட்டுப் பங்கிட்டுக் கொள்ள இசவாதிகள் ஓடி வருவார்கள்!

2. ஆரிய இந்துத்துவா வாதிகள்
--------------------------------------------------
ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா வாதிகள் - தமிழர் அடையாளங்களை இந்துத்துவா அடையாளங்களாகத் திரித்துக் காட்டித் திருதராட்டிர ஆலிங்கனம் செய்து தமிழர் எழுச்சியைச் சீர்குலைக்க வருவார்கள். எதிரி மீது பாசம் காட்டுவது போல் பாவனை செய்து கட்டித் தழுவி இறுக்கிக் கொன்று விடுவதுதான் திருதராட்டிர ஆலிங்கனம்!

ஆரியப் பார்ப்பனிய இந்துத்துவா வாதிகள், புராணக் கதைகளற்ற தமிழர் பொங்கல் விழாவை, கருங்கிராந்தி நோய் என்பது போல் சங்கராந்தி என்பார்கள்! தமிழரின் ஏறுதழுவல் “ரிஷப வைபவம்” என்பார்கள்! ஆனால் ஆரியவர்த்த மாநிலங்களான உ.பி., ம.பி., பீகார் போன்றவற்றில் தமிழரின் பொங்கல் விழாவைப் போல் போகி தொடங்கி ஏறுதழுவல் வரை நான்கு நாள் நிகழ்வுகள் இல்லை.

3. இந்திய ஏகாதிபத்திய அரசு
-----------------------------------------------
இந்திய ஏகாதிபத்தியத்தின் நடுவண் அரசு தமிழர்களின் தைப்புரட்சி எழுச்சியைப் பழிவாங்கும் வெறியுடன் குறுகுறு என்று பார்த்துக் கொண்டுள்ளது. என்னென்ன வகைகளில் தமிழர்களை ஒடுக்கி, அடக்கி வைக்கலாம் என்று கருவிக் கொண்டுள்ளது.

காலம் காலமாக நடந்துவந்த காளை விளை யாட்டான சல்லிக்கட்டை நடத்திட அனுமதி கோரி, தமிழ்நாடெங்கும் இந்தியாவில் எங்குமே காணாத அளவிற்கு, கோடிக்கணக்கான மக்கள் அங்கங்கே குவிந்து, ஆறு நாட்கள் தொடர்ந்து அறப்போராட்டம் நடத்தினார். மோடி அரசு மக்களின் குரலுக்கு செவி சாய்த்து, தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டி யலிலிருந்து காளையை நீக்கியிருக்க வேண்டும். தானே முன்வந்து விலங்குகள் துன்புறுத்தல் தடைச் சட்டம் - 1960-ஐ திருத்தியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.

மாணவர் போராட்டத்தின் நெருக்கடி காரணமாக செயல்பாட்டில் இறங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பி.எஸ். தில்லிக்குச் சென்று, நரேந்திர மோடியிடம் நேரடியாகக் கோரிக்கை வைத்தபோதுகூட, தம்மால் எதுவும் செய்ய முடியாது என மறுத்துவிட்டார் மோடி!

தமிழினத்தின் மீதுள்ள நிரந்தரக் காழ்ப்புணர்ச்சி யால், பா.ச.க. நடுவண் ஆட்சி குறிப்பாக தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, “தமிழர்களின் ஞாயத்தை ஏற்றுக் கொண்டால், அவர்களுக்குப் பணிந்து போவதுபோல் ஆகும்” என்று கருதி, தமிழ்நாடு அரசே சட்டத்திருத்தத்துடன் அவசரச்சட்டம் இயற்றிக் கொள்ளுமாறு கூறிவிட்டது.

காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபடி, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அதைத் தட்டிப் பறித்தது மோடி அரசு! தொடர்ந்து இனப்பாகுபாடு பார்த்துதான் தமிழர்களை இந்தியா வஞ்சிக்கிறது. நம் பண்பாட்டு விழாவான ஏறுதழுவலை தடை செய்வதிலும் அதே அணுகுமுறையைத்தான் இந்தியா கொண்டுள்ளது.

“தமிழ்நாட்டின் போராட்டங்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டுள்ளோம். நடுவணரசின் உளவுத்துறை விவரங்களைத் திரட்டிக் கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசு உதவி கேட்டால், உடனடியாக துணை இராணுவப் படைகளை அனுப்பி வைப்போம்” என்று தில்லி உள்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக இந்து ஆங்கில நாளோடு (24.01.2017) செய்தி வெளி யிட்டுள்ளது.

4. இனப் பெயரில் போலிகள்
---------------------------------------------
தமிழினம், தமிழ்த்தேசியம் என்ற பெயரிலேயே பதவி வேட்டையாடும் போலிகள் புகுவார்கள்; புதிதாகவும் உருவாவார்கள்!

5. தைப்புரட்சியைப் புகழ்ந்து அல்லது திறனாய்வு செய்து கட்டுரை எழுதுவோரில் பலர், கடைசியில் திராவிடவாதத்துக்கு ஆதரவாகவோ அல்லது இந்தியத் தேசியத்திற்கு ஆதரவாகவோ எழுதி முடிப்பர். இவ்வாறு தமிழின எழுச்சியை மடைமாற்றுவர்.

தைப்புரட்சியில் பங்கு கொண்ட - தைப்புரட்சியை ஆதரித்த தமிழர்கள் அனைவரும் இந்த எச்சரிக்கை களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அ.இ.அ.தி.மு.க. அரசு
====================
சென்னைக் கடற்கரை, மதுரை, கோவை, திருச்சி, அலங்காநல்லூர் மற்றும் தமிழ்நாடெங்கும் ஆறு நாட்கள் வரை மக்கள் திரள்7 அறப்போராட்டத்தை அ.தி.மு.க. அரசு அனுமதித்ததும், வன்முறை ஏவாமல் இருந்ததும் ஓர் அரசியல் உத்திதான்!

ஆனால் அதற்கு முன், அவனியாபுரத்தில் 14.01.2017 அன்று அறவழியில் சாலை ஓரமாக இயக்குநர் வ. கவுதமன் தலைமையில் அமர்ந்து, சல்லிக்கட்டு தடை நீக்கிட முழக்கமிட்ட இளைஞர்கள் மீது கடுமையாகத் தடியடி நடத்திக் காயப்படுத்திக் கூட்டத்தைக் கலைத்து, அவர்களைத் தளைப்படுத்தினார்கள். அதனால் அ.தி.மு.க. அரசுக்குப் பெரிய அளவில் கெட்ட பெயர் ஏற்பட்டது.

இப்பின்னணியில் 17.1.2017 அன்று சென்னை மெரினா கடற்கரையில், வெள்ளம் போல் திரளத் தொடங்கிய தமிழர்கள் மீது அ.தி.மு.க. அரசு கைவைக்கத் தயங்கியது. மாணவர்களும் இளைஞர் களும் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந் தெல்லாம் வந்து குவிந்தார்கள்.

தமிழ்நாட்டின் பிற பெரு நகரங்கள், நகரங்கள், பேரூர்கள், சிற்றூர்கள் என எல்லா இடங்களிலும் மக்கள் வெள்ளம் அங்கங்கே கூடிப் பெருகியது. இரவு பகலாகக் கூட்டம் தொடர்ந்தது.

சல்லிக்கட்டு உரிமையுடன், காவிரி உரிமை, உழவர் உரிமை, கச்சத்தீவு, பாலாறு, முல்லைப்பெரியாறு எனப் பல உரிமைகள் பேசினர். மீத்தேன் எதிர்ப்பு, கெயல் குழாய் எதிர்ப்பு, வியோ பால் புட்டி - பெப்சி - கோகோ கோலா பாட்டில்கள் உடைப்பு, பன்னாட்டு வேட்டை நிறுவனங்கள் எதிர்ப்பு, பீட்டா வெளியேற்றல் எனத் தமிழ்நாட்டின் முகாமையான வாழ்வியல் உரிமை முழக்கங்களை எழுப்பினர். இயற்கை வேளாண்மை, தமிழர் மரபு உணவு பற்றியெல்லாம் உரையாடினர்.

கட்டுக்கோப்பாகவும், தன்னொழுங்குடனும், கண்ணியத்துடனும், ஆண்களும் பெண்களும், மாண வர்களும் இலட்சக்கணக்கில் ஒரே இடத்தில் இரவு பகலாக இருந்து முழக்கமிட்டனர். சுற்றுப்புற தூய்மை பேணினர்.

தாராள மனம் படைத்த தமிழ்ப் பெருமக்கள் உணவு, தின்பண்டம், கழிவறை வசதி எனப் பல உதவிகள் செய்தனர். பொங்குமாங்கடலென மக்கள் குவிந்தனர்.

எனவே வன்முறையை ஏவினால், 1965 மொழிப் போரில் காங்கிரசு காவல்துறையையும் இராணுவத் தையும் ஏவி இரத்தக்குளியல் நடத்தியதுபோல் ஆகிவிடும்; தமிழ்நாட்டில் காங்கிரசு அத்தியாயம் முடிவுக்கு வர அதுவே தொடக்கமாக இருந்தது என்ற வரலாற்றை உணர்ந்த அ.தி.மு.க. அரசு, தமிழர் உரிமைக்கான அறப்போராட்டம் நடத்திய மக்களுக்கு உதவியாக இருந்தது.

சல்லிக்கட்டு உரிமை வழங்கும் அவசரச்சட்டம் கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு! அந்தச் சட்ட நகலை வெளியிடாமல் மூடு மந்திரமாக வைத்துக் கொண்டு, மக்கள் வெள்ளத்தைக் கலைந்து போகச் சொல்லி 23.01.2017 அன்று விடியற்காலையிலிருந்து நெருக்கடி கொடுத்தனர் காவல்துறையினர்.

சென்னைக் கடற்கரையில் ஆயிரக்கணக்கில் காவல்துறையினரைக் கொண்டு வந்து இறக்கினர்; சரக்குந்துகளில் தடிகளையும் கொண்டு வந்தனர்.

பிடித்து இழுத்தும், தள்ளியும், தூக்கி எறிந்தும், அடித்தும், விரட்டியும் மக்களைக் கலைத்தனர். பெண்கள், பெரியவர்கள், மாணவர்கள், மாணவிகள் என எல்லாரும் அடிக்கப்பட்டனர். காவல்துறையினரே, தானி வண்டிக்குத் தீ வைத்தனர்; காவல் நிலையத் திற்கும் தீ வைக்கப்பட்டது.

சல்லிக்கட்டு உரிமையை மீட்டிடும் சட்டம் கொண்டு வந்த பின் தடியடி நடத்தியது ஏன்? அடிபட்டு கடற்கரையில் சூழ்ந்து நின்ற மக்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிய மீனவ மக்களைத் தாக்கியது ஏன்? இதுதான் அரசின் வன்மம்! காவல்துறையின் பொது உளவியல் இதுதான்!

காட்சிப்படுத்தத் தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை இந்திய அரசு நீக்க வில்லை. தமிழ்நாடு அரசு போட்ட சட்டத்தை எதிர்த்து, எதிர்த்தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தால் - தடைப் பட்டியலில் காளை தொடர்வது ஒரு வினாக் குறியே!

இந்த ஒன்றைத் தவிர, மற்றபடி தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திருத்தச் சட்டம் வரவேற்கத்தக்கதே!

இவ்வாறு இருக்கும்போது, பொறுமையாக இந்த உண்மைகளை விளக்கி, கூட்டத்தைப் பதற்றமின்றி விடை பெறச் செய்திருக்கலாம்.

வரலாறு காணாத அளவிற்கு உலகமே வியக்கும் வகையில் நடந்த தமிழ்நாடு தழுவிய மாபெரும் மக்கள் திரள் எழுச்சியை அமைதியாகக் கலைய விட்டால், மீண்டும் போராட அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்று கருதி, உடலில் மட்டுமின்றி நெஞ்சத்திலும் காயத்தோடு அனுப்ப வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கருதியிருக்கலாம்.

அடுத்து வரும் காலங்களில், சனநாயகப் போராட் டங்களை வழமைபோல் அனுமதிக்காமல் கெடுபிடிகள் செய்யலாம். அதேவேளை தமிழர்களை அண்டிப் பிழைக்கும் நுகர்வோராக மாற்றுவதற்கு மேலும் சில இலவசங்களையும் வழங்கலாம். இவ்வாறான இரு வழிகளில்தான் அ.இ.அ.தி.மு.க. அரசு தமிழர் எழுச்சிக்குப் பிந்திய செயல்முறையை வகுத்துக் கொள்ளும்.

இவ்வாறான அரசின் போக்கை எதிர் கொள்ளும் சிந்தனைத் தெளிவும், மன உறுதியும் இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவை.

தி.மு.க.
========
தைப்புரட்சியாக விளங்கிய தமிழர் எழுச்சியையும், அதில் பங்கேற்றோர் தாக்கப்பட்டதையும் பயன்படுத்தி, மக்கள் செல்வாக்குப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் உத்திதான் தி.மு.க.வுக்கு இருக்கும். உண்மையான தமிழின உரிமை மீட்பு நடவடிக்கைகளில், தி.மு.க. இறங்குவதற்கு வாய்ப்பில்லை. திருந்துவதற்கும் வாய்ப்பில்லை. அக்கழகத்தின் ஆட்சியில்தான் பல்வேறு உரிமைகளைத் தமிழ்நாடு இழந்தது.

சிங்கள அரசு இந்தியாவின் துணையோடு ஈழத்தமிழர்கள் மீது இன அழிப்புப் போர் நடத்தி, ஒன்றரை இலட்சம் தமிழர்களை படுகொலை செய்த காலத்தில், அதைக் கண்டித்து 2008 - 2009 ஆண்டுகளில் மேடையில் பேசியவர்கள் மீது “தேசியப் பாதுகாப்புச் சட்டம்” (N.S.A.), அரசுக் கவிழ்ப்புப் பரப்புரை (Sedition – 124A) போன்ற சட்டங்களின் கீழ் வழக்குகளைத் தொடுத்து சிறையில் அடைத்தது கலைஞர் ஆட்சி.

போர் நிறுத்தம் கோரி போராடிய வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் சுற்றி வளைத்து, அடித்து நொறுக்கி எலும்புகளை உடைத்துப் படுகாயப்படுத்தியது காவல்துறை (17.02.2009). ஒரு நீதிபதி எலும்பும் முறிக்கப்பட்டது.

அரசு அமைத்த விசாரணை ஆணையம், குற்றம் இழைத்த காவல்துறை அதிகாரிகளை அடையாளம் கண்டு அறிக்கை கொடுத்தது. ஆனால், அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்தார் அன்றைய முதலமைச்சர் கருணாநிதி.

இது அண்மைக்கால தி.மு.க. அரசியலுக்கான ஒரு சான்று! அதற்கும் முந்தைய கால சான்றுகள் ஏராளம்! ஏராளம்!

காங்கிரசு கூட்டணி அரசில் தி.மு.க. அமைச்சர் பதவி வகித்தபோதுதான், “காளை” தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது (2011).

எனவே, அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் இனத்துரோக அரசியல் என்ற நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்!

மாணவர்களின் வரலாற்று
முன்னெடுப்பும் மக்களின் பங்களிப்பும்
===================================

ஆதிக்க இந்தியை விரட்டிட 1965-இல் மாணவர்கள் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க மொழிப் போருக்குப் பின், ஈழத்தமிழர் விடுதலைப்போர் உள்ளிட்ட தமிழர் உரிமைகளுக்கு பலப் போராட் டங்கள் தமிழ் மாணவர்கள் நடத்தியிருந்தாலும், “தைப்புரட்சி” என்ற தமிழர் புரட்சியை முன்னெடுத்த மாபெரும் வரலாற்றுப் பாத்திரம் இன்றையத் தமிழ் மாணவர்களுக்கே இருக்கிறது.

அடையாளப் போராட்டம் நடத்தாமல், விளம்பரப் போராட்டம் நடத்தாமல், பிரமுகத்தனம் காட்டாமல், இலட்சியத்தை மட்டுமே முன்னிறுத்திப் போராடிய மாணவர்களின் நேர்மையும் ஒழுக்கமும் தமிழ் மக்களை ஈர்த்தது. மாணவர் போராட்டமாக முகிழ்த்தது, பெற்றோரும் பங்கேற்ற மாபெரும் தமிழர் வெள்ளமாக மலர்ந்தது.

மக்களின் ஆற்றலுக்கு எல்லையில்லை. அவர்கள் நடத்தும் போராட்ட வடிவங்களுக்கும், ஆதரவுச் செயல்பாட்டு வடிவங்களுக்கும் அளவில்லை என்பதை இப்போராட்டத்தில் மாணவர்களும் மக்களும் காட்டினார்கள்.

தலைமை இல்லாப் போராட்டமா?
===============================
இம்மாபெரும் தைப்புரட்சியைத் தலைமை இல்லாப் போராட்டம் என்று ஊடகத்தார் குறிப்பிட்டனர். வெளித்தோற்றத்திற்கு அப்படித்தான் தெரிந்தது. ஆனால் தான் பெற்ற பிள்ளைகளின் போராட்டத் திற்குத் தமிழன்னைதான் தலைமை தாங்கினாள்; அதாவது தமிழ்மொழி வழி பெற்ற தமிழின உணர்வுதான் தலைமை தாங்கியது.

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் ஆசான்கள், சான்றோர்கள், வீரர்கள், மாமன்னர்கள் நடத்திய வாழ்வும் வழங்கிய சிந்தனைகளும் வாழையடி வாழையாய் தமிழர்களுக்கு இன உணர்ச்சியையும், அறச்சிந்தனைகளையும், போர்க் குணத்தையும் வழங்கி வருகின்றன. வற்றாத அந்த வரலாற்றுத் தொடர்ச்சியே இன்றைய தைப்புரட்சிக்குத் தலைமை தாங்கியது!

தைப்புரட்சியில் எழுந்த தமிழர் எழுச்சி காட்டாற்று வெள்ளமாய்க் காணாமல் போய்விடும் என்று சிலர் கணிக்கிறார்கள். அப்படிக் காணாமல் போய்விட வேண்டும் என்று தமிழினப் பகைவர்களும் வஞ்சகர்களும் ஆசைப்படுகிறார்கள்.

ஒரு சமூக நெருக்கடியில் எழுந்த மக்கள் கொந்தளிப்பு அலை சாதாரண காலத்திலும் அப்படியே நீடிக்கும் என்று எதிர்பார்ப்பது கற்பனைவாதம்! அது பின்வளர்ச்சியின்றி அடிச்சுவடு தெரியாமல் மறைந்து விடும் என்று கருதுவது அகநிலைவாதம்! அல்லது எதிரிகளின் எதிர்பார்ப்பு!

தைப்புரட்சி இளைஞர்களே, மாணவர்களே! உங்களைச் சுற்றி வளைக்கப் பலர் வட்டமிடுவார்கள்! நீங்கள் உங்கள் சொந்த அறிவாற்றல் கொண்டு தேர்வு செய்யுங்கள்!

நீங்கள் யாரையோ பின்பற்றுவதற்கு மட்டுமே பிறந்தவர்கள் அல்லர். வழிகாட்டவும் பொறுப்புடைய வர்கள்; உரிமை உடையவர்கள்!

இசவாதிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்! எந்த இசத்திலும் உள்ள முற்போக்கான கருத்துகளை, சமகாலத்திற்குத் தேவையான கருத்துகளை தமிழர் உளவியல் ஏற்கும்; ஆனால் அதில் தன்னைக் கரைத்துக் கொள்ளாது.

தத்துவம் வழிகாட்டவும் செய்யும், வழி மறிக்கவும் செய்யும்!

தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சி, சிறு சிறு தேசிய இனங்களின் அடையாளங்களை உலக அரங்கில் கொண்டு வந்துள்ளது. பெருந்தேசிய இன ஆதிக்கத்தில் சிக்கிக் கொண்ட சிறு தேசிய இனங்கள் விடுதலை பெற உந்துவிசை அளித்து வருகிறது தகவல் தொழில்நுட்பப் புரட்சி!

இரசியப் பேராதிக்கக்திடமிருந்து 14 தேசிய இனங்கள் பிரிந்தன. பிரித்தானியாவில் ஆங்கிலேயப் பேராதிக்கத்திலிருந்து பிரிந்திட அயர்லாந்தும் ஸ்காட்லாந்தும் நேரம் பார்த்துக் கொண்டுள்ளன. இந்தோனேசியாவிலிருந்து கிழக்குத் திமோர், எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரியா பிரிந்தன. கனடாவிலிருந்து கியூபெக், ஸ்பெயினிலிருந்து கட்டலோனியா, பாஸ்க், சீனாவிலிருந்து திபெத், உய்கூர் ஆகிய தேசிய இனங்கள் விடுதலை கோருகின்றன.

நாம் தமிழ்நாட்டில் மட்டும் எட்டுக்கோடி பேர் இருக்கிறோம் இந்தியாவின் இதர மாநிலங்களில் இரண்டு கோடிப் பேர் இருக்கலாம். உலகில் மொத்தம் 12 கோடித் தமிழர்கள் மக்கள் தொகை வாழ்கிறோம். பிரித்தானியா, பிரான்சு தமிழ்நாட்டு மக்கள் தொகையைவிட அதிகம்!

உலகத்தின் இன்றையப் போக்கு தேசிய இன இறையாண்மையை உறுதிப்படுத்துவதுதான். உலகமயம் என்ற பெயரில் வேட்டையாடும் பன்னாட்டு நிறுவனங்களை எல்லை கட்டி வெளியே தள்ள தேசிய இனத் தாயக உரிமையும், தாயக வரலாற்று - பண்பாட்டு உளவியல் உணர்ச்சியும் மிகமிக இன்றியமையாதவை!

தமிழ்த்தேசிய இறையாண்மையே, பன்னாட்டு வேட்டை நிறுவனங்களை வெளியேற்றும்; தடுக்கும்! தமிழ்த்தேசிய இறையாண்மையே, தமிழ்நாட்டைத் தமிழர்களின் வாழ்வுரிமைத் தாயகமாக மாற்றும்! வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்தி மண்ணின் மக்களாகிய தமிழர்களை தமிழ்நாட்டிலேயே இரண்டாம் தரக் குடி மக்களாக மாற்ற வருகிறார்கள். வெளியாரை வெளியேற்றினால் தமிழர் வாழ்வுரிமை பாதிக்கப்படும்.

தமிழ்த்தேசிய இறையாண்மையே, ஆரிய மொழிகளான சமற்கிருதம், இந்தி ஆதிக்கத்திலிருந்து தமிழைக் காக்கும்!

தமிழ்த்தேசிய இறையாண்மையே, பொங்கல் விழா, திருவள்ளுவர் நாள், ஏறுதழுவுதல் போன்ற தமிழ்ப் பண்பாட்டுரிமைகளைக் காக்கும்.

தமிழ்த்தேசிய இறையாண்மையே, கச்சத்தீவு, கடல் உரிமை, காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி உரிமைகளை மீட்கும்!

தமிழ்த்தேசிய இறையாண்மையே, பெப்சி - கோக்கோ கோலா, வியோ உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங் களை விரட்டும்; உள்நாட்டு மரபு உற்பத்திகளை வளர்க்கும்! மண்ணுக்கேற்ற புதுமைகளைப் படைக்கும்!

தமிழர் அறம் மனித சமத்துவத்தை நிலைநாட்டும்!

தைப்புரட்சியில் தமிழர்களாக ஒருங்கிணைந்த இந்து, முசுலிம், கிறித்துவ மக்கள் ஒற்றுமையைத் தமிழ்த்தேசியமே வளர்க்கும்; சாதியைப் பின்னுக்குத் தள்ளி தமிழராய் ஒருங்கிணைந்த இன உணர்ச்சியைப் பெருக்கும்!

ஆணும் பெண்ணும் சமமாய்க் களம் கண்ட தைப்புரட்சியில் சமத்துவத்தைத் தமிழ்த்தேசியமே தொடரும்; தலைவன் - தலைவி என்ற சங்ககால சமத்துவத்தை மேலும் மேன்மைப்படுத்தும்!

இந்தியன், திராவிடன் என்ற அயல் இன ஆதிக்கப் புனைவுகளைப் புறந்தள்ளுங்கள்! தமிழராய்த் தலை நிமிருங்கள்!

“தமிழன்டா!”

==========================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்