Tuesday, February 28, 2017

ஊழலுக்கு எதிரான உன்னத போராளி.

ஊழலுக்கு எதிரான உன்னத போராளி. செய்யாத தவறுக்கு சிறை சென்று, அந்த வழக்கில் தன்னை நிரபராதி என நிரூபித்துக்காட்டிய நிமிர்ந்த நெஞ்சம். யார் இவர். இணையதளங்களில்'சவுக்கு' சங்கர் என்றும், துப்பறியும் சங்கர் என்றும் அழைக்கப்படுபவர். தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்டாலும் தஞ்சமடைந்தது சென்னையில் தான். அப்பா ஆச்சிமுத்து சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு உதவியாளராக பணியாற்றிய போது மாரடைப்பால் காலமானார். அப்போது பத்தாம் வகுப்பு முடித்த சங்கருக்கு,கருணை அடிப்படையில் அதே துறையில் இளநிலை உதவியாளராக பணி கிடைத்தது. சிறப்பு உதவியாளராக பணியாற்றிய போது, 2008 ல் அந்த சம்பவம் நடந்தது.

அது என்ன… இனி நேர்காணலாய்…
போலீஸ் உயரதிகாரிகளின் தொலைபேசி உரையாடலை வெளியிட வேண்டிய நோக்கம் என்ன
1991 - 96 மற்றும் அதன் பிறகு தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் அ.தி.மு.க., அரசு மீது ஏகப்பட்ட ஊழல் வழக்குகள் தொடரப்பட்ட போது ஆர்வமாக பணியாற்றினேன். 2001ல் அ.தி.மு.க., அரசு மாறிய பிறகு, 1996ல்தொடரப்பட்ட ஊழல் வழக்குகள் எல்லாமே அதே அதிகாரிகளால் விசாரணையின்றி மூடப்பட்டது. அந்தநேரத்தில் அண்ணா பல்கலைகழகத்தில் நடந்த ஊழலை வெளிப்படுத்த முயற்சி எடுத்தேன். அப்போது இருந்த கோட்டா படி, முதல்வரிடம் ஒரு கடிதம் வாங்கி வந்தால், எந்த மதிப்பெண் எடுத்திருந்தாலும் யாராக இருந்தாலும் பிரைமரி கோர்ஸில் சீட் கிடைத்திருக்கும். ஜெயலலிதா மேல் இருக்கும் ஊழல் வழக்கை கையாண்டு, அந்த வழக்கை மூடிய இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஜெயலலிதா கையாலேயே அவர்களது பிள்ளைகளுக்கு அண்ணா பல்கலையில் சீட் வாங்கிய விவரம் தெரியவந்தது. அந்த ஆதாரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சேகரித்தேன். அந்த நேரத்தில் எனக்கு பத்திரிகையாளர்களுடன் நிறைய பழக்கம் ஏற்பட்டிருந்தது. அப்போதுதான் இரண்டு ஐ.பி.எஸ்., உயரதிகாரிகளின் தொலைபேசி உரையாடலை, நான் ஒரு பத்திரிகைக்கு வெளியிட்டதாக என் மேல் குற்றம் சுமத்தினர். அது உண்மையில்லை என தீர்ப்பு நிரூபித்தது.

அரசு உயர்அதிகாரிகளை பகைத்துக் கொண்டதற்காக வருத்தப்பட்டீர்களா

தவறு செய்யும்அதிகாரிகள், ஊழல் அதிகாரிகளை தான் அம்பலப்படுத்தினேன். அதற்கான ஆவணங்களை வெளியிட்டேன்.அதனால் வருத்தப்பட்டதும் இல்லை.

காவல்துறையினர் உங்களை சந்தேகப்பட்ட போது

முதன்முதலில் விசாரணை ஆணையம் அழைத்தபோது, வியப்பாக இருந்தது.தொலைபேசி உரையாடல் நடந்த இடத்திற்கும், நான் பணியற்றிய இடத்திற்கும் சம்பந்தம் இல்லை. நான் பத்திரிகையாளர்களுடன் தொடர்பு வைத்திருந்த தொலைபேசி ஆதாரங்களை கொண்டு, என்னை சந்தேகப்பட்டனர். விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 3வது நாளில் கைது செய்த போது தான், என்னை 'பிக்ஸ்' செய்தது தெரியவந்தது.

தவறு செய்யாமல் சிறைசென்ற போது...

கைது, இரண்டு மாதசிறைவாசம், அதன்பிறகு நீதிமன்ற வழக்கு என அரசு அதிகாரி, அதிகார மையங்களுக்கு எதிராக போராடினால் இப்படிப்பட்ட நெருக்கடி வரும். சந்தித்து தான் ஆகவேண்டும் என்ற திடமானமனநிலை ஏற்பட்டது.

சிறையில் உங்களை நடத்திய விதம் ...

கைது செய்யப்பட்ட அன்று மாலை முதல் மறுநாள் காலை வரை சி.பி.சி.ஐ.டி., கஸ்டடியில் கடுமையான சித்ரவதை அனுபவித்தேன். மறுநாள் வழக்கறிஞரை சந்தித்தபின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். அடுத்த நாள் மாலை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

உங்களை நிரூபித்தது எப்படி ?
சிபிசிஐடி சரியானஆதாரங்களை காட்டாமல் ஜோடித்ததால் சாட்சிகள் மாறிவிட்டன. வழக்கறிஞர்கள் துணையோடு ஜெயித்தேன்.

இனி அரசுப் பணிக்கு செல்வீர்களா

பணி கிடைப்பதற்கான சாத்தியக்கூறு குறைவு. இனிமேல் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை உள்ளது. அதையும் சந்திக்கவேண்டும்

'சவுக்கு' இணையதளம் துவங்கக் காரணம்

பெரிய அதிகார மையங்களுக்குஎதிராக எந்தவித செய்திகளை வெளியிடுவதற்கும் ஊடகங்கள் தயாராக இல்லாத சூழலில், இணையதளம்மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த ஆவணங்களை அம்பலப்படுத்த நினைத்தேன். ஊழலுக்கு எதிராக சமுதாயத்தை மாற்ற முடிந்ததா ஊழலை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்; வெளிப்படுத்த முடியும். அதைத்தாண்டி சமுதாயத்தில் பெரியளவுக்கு மாற்றம் கொண்டு வரமுடியும் என நினைக்கவில்லை.

அரசியலுக்கு வருவீர்களா.

எந்த அரசியல் கட்சியில் சேர்ந்தாலும் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு நானும் வரையறுக்கப்பட வேண்டும். அதனால் நிச்சயமாக அரசியலுக்கு வரமாட்டேன்.

திசை மாறிய பயணம் கற்றுத்தந்த பாடம்

அரசுப் பணியில் சேர்ந்த போது 58 வயதில் நல்ல பதவி உயர்வோடு நிம்மதியான மனநிலையில் ஓய்வுதிட்டம். நடந்த சம்பவங்கள் வாழ்க்கையை புரட்டி போட்டு இங்கு நிறுத்தியுள்ளது. எதிர்காலத்தில் பெரிய திட்டம் எதுவும் இல்லை.

மக்கள் பார்வையில்…ஊழல்

2ஜி ஸ்பெக்ட்ரம்வழக்கிற்கு பிறகு, ஊழல்கள் எதுவுமே மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல், எல்லாவற்றையும் சமரசம் பண்ணிக் கொண்டு போவோம் என்று மக்கள் மனநிலை மாறிவிட்டதோ என நினைக்கத் தோன்றுகிறது.

உங்கள் பார்வையில்அதிகாரிகள்

அரரசியல்வாதிகள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மக்களை சந்தித்து காலில் விழுந்து கெஞ்சி ஓட்டு கேட்கின்றனர். தோல்வியை சந்திப்பதற்கும் வாய்ப்புள்ளது. அதிகாரிகள் 30 - 35 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் தவிர வேறெந்த தண்டனையும்பெறுவதில்லை. புதிதாக மந்திரி வந்தால் இந்த துறையில் இந்த திட்டத்திற்கு இப்படி சம்பாதிக்கலாம் என சொல்லிக்கொடுத்து வழிகாட்டுவது அதிகாரிகள் தான். ஊழலுக்கு அரசியல்வாதிகளை விட அதிகாரிகள் தான் காரணம்.

இப்போதைய அரசியல்

ஜெயலலிதா இறக்காமல் இருந்திருந்தால் 2021 வரை எந்த மாற்றமும் இன்றி தமிழகத்தில் தேக்கநிலை இருந்திருக்கும். தற்போது அ.தி.மு.க., நெருக்கடி, அரசு தொடருமா தொடராதா என விறுவிறுப்பான சூழ்நிலைஇருக்கிறது. ஜெயலலிதா கூடவே இருந்த சசிகலா மீதான மக்களின் மிகக் கடுமையான எதிர்ப்பு, மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்கள் மீதான நம்பிக்கை

ஒரளவுக்கு அரசியல்வாதிகள்மீது அழுத்தத்தை கொடுத்து முடிவுகள் மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் வலிமை உள்ளது.இளைஞர்களும் அதை நம்புகின்றனர். நீங்கள் சாதித்தது எனக்கு சரியெனபட்டதை, வரக்கூடிய எதிர்ப்புகளை சமாளித்து ஊழல்களை அம்பலப்படுத்தியது, மனதுக்கு நிறைவாகஉள்ளது.

அடுத்த கட்ட பயணம்

சமரசம் செய்யாமல் தொடர்ந்து புலனாய்வு கட்டுரைகள் எழுதுவதற்கு பலதரப்பு ஆதரவு தான் காரணம். சரியாக நேர்மையாக ஒரு பணியை செய்தால் மக்கள் ஆதரவு இருக்கும் என்பது தான் நான் கற்ற பாடம்.

இணையதளத்தில் பேச: jayajayakanthan@gmail.com

நன்றி : தினமலர் நாளிதழ் - 01.03.2017

No comments:

Post a Comment