Monday, February 27, 2017

குடையின் கீழ் மனிதன் கவிதை

குடை

குடையின் கீழ் மனிதன்
குடையின் மேல் மழை என்றால் ....

குடையின் உள்ளே பொழியும்
குற்ற உணர்வில் நனையும் போது
குடை ஒன்று விரியுமா ?

மேகத்தின் சேர்க்கையால்
சோகத்தின் வடிவமாய்
பொழியுமந்த மழையின் போது
பதுங்குகிறோம் குடையின் கீழ்

சொந்தத்தின் சேர்க்கையால்
விளையும் சோகத்துக்கு
குடை எங்கே வாங்குவீர்
உமைத்தானே கேட்கிறேன் ?

நியாயம் என்னும் குடையின் கீழ்
நிம்மதி என்னும் நிழலை
நிறுத்து வாங்கும் சமுதாயம்
நின்று பார்த்தால் பரிதாபம்

தன் குடையை பகிர்ந்தளிக்கும்ம் தரமான மனிதன் ஒரு புறம்..
இரவல் குடையினுள் பகிர்ந்தவனை
இடித்துத் தள்ளித் தனதாக்கிக் கொள்ளும்
பேராசைக்கார மனிதன் மறுபுறம்

வாழ்க்கை இதுதான் தோழனே
வாழ்ந்து பார்த்ததும் ஏனோ
மழை பெய்யும் போது
மனம் குடையைத் தேடவில்லை

No comments:

Post a Comment