விவசாய வேலைகளை எளிமையாக்கும் தம்பதி!
தமிழக விவசாயத்துக்கு பின்னடைவை உருவாக்கியுள்ள பிரச்னைகளில் முதன்மையானது, தொழிலாளர் பற்றாக்குறை. மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு இந்தப் பிரச்னை பூதாகரமாகி விட்டது. இதற்குப் பயந்தே பல விவசாயிகள் நிலங்களை தரிசாகப் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு எளிதான தீர்வைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் கும்பகோணத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்-உமா தம்பதி. களை எடுப்பதில் தொடங்கி, அடியுரம் இடுவது வரைக்கும் எல்லா வேலைகளுக்கும் எளிமையான கருவிகளை கண்டு பிடித்திருக்கிறார்கள். மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த கருவிகளை தமிழக வேளாண்துறை வாங்கி விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.
கார்த்திகேயன் பொறியியல் படித்து இடைநின்றவர். சகோதரர் நடத்திய வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழிற்சாலையில் பணியாற்றினார். குடும்பத்துக்கு 30 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டார் கார்த்திகேயனின் அப்பா. அப்பாவின் அவஸ்தையே அருகில் இருந்து பார்த்த கார்த்திகேயன், அதற்கு தீர்வு காண தீர்மானித்தார்.
‘‘வருஷம் முழுக்க விவசாயம் நடந்த எங்க கிராமங்கள்ல இப்போ ஒருபோகம் பாக்கக்கூட ஆளில்லை. ஆள் பஞ்சத்தால பல பேர் விவசாயத்தை விட்டுப் போயிட்டாங்க. பெரிய விவசாயிகள் இயந்திரங்களை வச்சோ, வெளியூர்கள்ல இருந்து ஆட்களை அழைச்சோ வேலையை முடிச்சிருவாங்க. சிறு, குறு விவசாயிகளால அப்படிச் செய்ய முடியாது. அதனால, அவங்களும் காசு போட்டு வாங்குற அளவுக்கு எளிமையான விவசாயக் கருவிகளை உருவாக்க முடிவு செஞ்சேன். அண்ணனோட கம்பெனியில வேலை பார்த்த அனுபவம் கைகொடுத்துச்சு.
2006ல திருந்திய நெல் சாகுபடி திட்டத்தைக் கொண்டு வந்தாங்க. ஒரே நேர்க்கோட்டுல சீரான இடைவெளி விட்டு நடுவாங்க. களை எடுக்கும்போது மண்ணைக் கிளறி விடணும். அப்போதான் தூர் நிறைய கிளைக்கும். ஆட்கள் களையெடுக்கும்போது மண்ணைச் சரியா கிளறி விடமாட்டாங்க. அதனால் கிளை பிடிக்காது. என் மாமனார் இதுபத்தி சொல்லி வருத்தப்பட்டார். முதல் வேலையா அதுக்காக ஒரு கருவி உருவாக்கினேன். கோன் டைப்புல ஒரு ரோலர். செடிக்குப் பக்கத்துல வச்சு அழுத்துனா 2 இஞ்சுக்கு மண்ணைக் கிளறிவிடும். களையையும் மண்ணோட சேத்து அமுக்கிடும். அந்தக் களையே உரமா மாறிடும். இதுக்கு ‘கோனேவீடர்’னு பேரு வச்சேன். சில விவசாயிகள்கிட்ட கொடுத்து சோதிச்சுப் பாக்கச் சொன்னேன். எல்லாருமே நல்லவிதமா சொன்னாங்க. விவசாயத்துறை அதிகாரிகளைச் சந்திச்சு ‘டெமோ’ காட்டுனேன். அவங்க இதை அங்கீகரிச்சதோட, 40 ஆயிரம் கருவிகள் செய்யச் சொல்லி விவசாயிகளுக்கு வாங்கிக் கொடுத்தாங்க. இதோட விலை 900 ரூபாய்தான்.
செம்மை நெல் சாகுபடியில நாத்து நடும்போது ஒவ்வொரு தூருக்கும் 25 இஞ்ச் இடைவெளி விடணும். வழக்கமா ஒரு நைலான் கயிறை கட்டிட்டு நடுவாங்க. அதுல முன்னப்பின்ன போயிடும். என் மனைவி இதுக்கு ஒரு கருவியை கண்டுபிடிச்சாங்க. அதுக்குப் பேரு ‘மார்க்கர்’. அதுவே எங்கே நடணும்னு மார்க் வச்சுக் காமிச்சிடும். 15 பேர் செய்யிற வேலையை 3 பேர் வச்சு முடிச்சிடலாம். இதோட விலை 700 ரூபா. வேளாண்துறை மூலமா 10 ஆயிரம் கருவிகள் சப்ளை பண்ணியிருக்கோம். ஐ.ஐ.டி. அவார்டும் இந்தக் கருவிக்குக் கிடைச்சுச்சு.
அடுத்து ‘பாய் நடவு’க்கு ஒரு மெஷின். இன்னைக்கு மார்க்கெட்ல இருக்கிற மெஷினோட விலை ஒன்னரை லட்சம் ரூபாய். நாங்க கண்டுபிடிச்ச ‘சீடிங் மெஷின்’ வெறும் 10 ஆயிரம் ரூபாய்தான். இதேமாதிரி விதைக்கரும்பு வெட்டுறதுக்கும் ஒரு மெஷினைக் கண்டுபிடிச்சிருக்கோம்’’ என்று வியக்க வைக்கிறார் கார்த்திகேயன். இவர்களின் லேட்டஸ்ட் கண்டு பிடிப்பு ‘பெர்டிலைசர் மெஷின்’. கரும்பு, வாழை, சோளம், பருத்தி, காய்கறிகளுக்கு, 5 இஞ்ச் ஆழத்தில் அடியுரம் போடவேண்டும். வழக்கமாக, ஒருவர் குச்சியை வைத்து குழிதோண்ட, மற்றொருவர் உரத்தைப் போட்டு குழியை மூடிச்செல்வார். அதிலும், உரம் சரியாக குழிக்குள் விழாது. பாதிக்கும் மேல் வீணாகும். இந்த பெர்டிலைசர் மெஷினை இயக்க ஒருவரே போதும். செடிக்கு அருகில் வைத்து அழுத்தினால் 5 இஞ்ச் குழி ரெடி. ஒரு லீவரை இழுத்தால் சரியாக 20 மில்லிகிராம் உரம் அந்தக் குழிக்குள் விழும். இழுத்த லீவரை மேலே தூக்கினால், குழியை மூடிவிட்டு வெளியே வந்துவிடும். துளி உரம் வீணாகாது. ஒரு செடிக்கு 15 வினாடிகள் போதும். விலை 2500 ரூபாய். இந்த மெஷின் ஏராளமான விவசாயிகளைக் கவர்ந்துள்ளது.
அண்மையில் இஸ்ரேல், சீன நாடுகளுக்குப் பயணித்து விட்டுத் திரும்பியிருக்கிறார்கள் கார்த்திகேயனும் உமாவும். அங்குள்ள தொழில்நுட்பத்தையும், கருவிகளையும் நம் மண்ணுக்குத் தகுந்தவாறு மாற்றும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். இவர்களது கனவு.. ‘தொழிலாளர்களையோ, அரசாங்கத்தையோ நம்பாமல் தன்னை மட்டுமே நம்பி விவசாயி விவசாயம் செய்ய வேண்டும். விவசாயப் பணிகள் அனைத்தையும் எளிதாக்கும் கருவிகளை உருவாக்க வேண்டும்!’
கார்த்திகேயனிடம் பேச: 9789618131
No comments:
Post a Comment