Tuesday, February 21, 2017

கொடுக்கும் கை கீழே – வாங்கும் கை மேலே

கொடுக்கும் கை கீழே – வாங்கும் கை மேலே

அக்பர் சபையில் அமர்ந்து ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கும் போது ஒரு விநோதமான எண்ணம் தோன்றியது.

உடனே அமர்ந்திருந்த அமைச்சர்களை நோக்கி, பொதுவாக ஒருவர் தானம் கொடுக்கின்றார் என்றால் அவரது கை உயர்ந்தும், வாங்குபவரின் கை தாழ்ந்தும் இருப்பது உண்மை!

ஆனால் தானம் தரும் சமயத்தில் கை தாழ்ந்தும் பெறுபவரின் கை உயர்ந்தும் இருப்பது எந்த சமயத்தில்?

இதற்கு சரியான விளக்கம் கூறுங்கள் என்றார் அக்பர்

சக்ரவர்த்தி கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் எவ்வளவு யோசித்தும் விடை சரியாகக் கிடைக்கவில்லை. ஆதலால் மன்னனின் கேள்விக்கு பதில் சொல்லாது மவுனமாக இருந்தனர்.

அச்சமயம் பீர்பால் சபையில் வந்து அமர்ந்தார் மற்ற அமைச்சர்களிடம் கேட்ட அதே கேள்வியை பீர்பாலிடம் அக்பர் கேட்டார்.

பீர்பால் சிரித்துக் கொண்டே சக்ரவர்த்தி அவர்களே எல்லோரும் எளிதாகப் பதில் சொல்லி விடுவார்கள்.

இதற்கு விடையளிக்க வேண்டும் என்பதினால் விடையளிக்கிறேன்.

ஒருவர் மூக்குப் பொடி டப்பியைத் திறந்து மூக்குக்குப் பொடி போடும்போது மற்றொருவர் கொஞ்சம் மூக்குப் பொடி தாருங்கள் என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அச்சமயம் அவர் அந்த டப்பியை அவர் முன் நீட்டுவார்.

மூக்குப் பொடியை எடுப்பவர் கொடுப்பவரின் கையைவிட எடுப்பவரின் கை சற்று மேலே இருக்கும்.

ஆகையினால் மூக்குப் பொடி தானம் தரும் சமயம் கொடுப்பவரின் கை கீழேயும் – வாங்குபவரின் கை மேலேயும் உயர்ந்திருக்கும் என்றார் பீர்பால்.

இந்த சின்ன விஷயம் கூட நமது அறிவுக்கு எட்டவில்லை என்று மற்ற அமைச்சர்கள் வருத்தப்பட்டனர்.

No comments:

Post a Comment