Tuesday, February 21, 2017

நாம் பல பழக்கவழக்கங்கள், சடங்கு, சம்பிரதாயாங்களின் உள் அர்த்தத்தை விட்டு விட்டு செயல்களை மட்டும் செய்து வருகிறோம்.

ஒரு ஜென் கதை :
ஜென் குரு ஒரு ஆசிரமம் நடத்திவந்தார். அதில் குறும்புகார பூனை ஒன்று வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் குரு தன் சீடர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த பூனை அங்கும் இங்கும் தாவியது, வித விதமாக சேட்டைகள் செய்து சீடர்களின் கவனத்தை திசைதிருப்பியது. இதை கவனித்த குரு பூனையை விரட்டிவிட்டு பாடத்தை தொடர்ந்தார். இந்த குறும்பு பூனைக்கு மிகவும் பிடித்துபோகவே அடுத்தடுத்த நாட்களில் வகுப்பு ஆரம்பிக்கும் முன்னதாகவே பூனை தவறாமல் ஆஜராகி தொல்லை கொடுத்து வந்தது. இதனால் சிரமப்பட்ட குரு, பூனையை பிடித்து அருகில் உள்ள தூணில் கட்டும்படி தமது சீடர்களுக்கு உத்தரவிட்டார். பூனை தூணில் கட்டப்பட்டு வகுப்பு முடிந்தவுடன் அவிழ்த்து விடப்பட்டது. அடுத்த நாள் பூனை பதுங்கிவிட்டது. வகுப்புக்கு பூனை வராததால் தூணில் கட்டப்படவில்லை. வகுப்பு துவங்கி சிறிது நேரம் கழித்து மெல்ல வந்த பூனை தனது சேட்டையை ஆரம்பித்தது. கடுப்பாகி போன குரு, இந்த பூனையை தூணில் கட்டிபோடும்படி கூறினேனே ஏன்கட்டவில்லை என சீடர்களை கடிந்து கொண்ட குரு வகுப்பை பாதியிலேயே ரத்து செய்து விட்டார். அடுத்தடுத்த நாட்களில் வகுப்பு ஆரம்பிக்கும் முன்பாக பதுங்கியிருந்த பூனையை கண்டுபிடித்து தூணில் கட்டப்பட்டது. சில நாட்களில் இது பூனைக்கு பழகிவிடவே வகுப்பு துவங்கும் நேரம் அது தானாக வந்து தூண் அருகில் அமர்ந்து கொள்ளும், சீடர்களும் சிரமம் இன்றி பூனையை தூணில் கட்டிப்போட்டார்கள். காலங்கள் உருண்டோடின. சீடர்கள் பலர் மாறினார்கள். தூண் அருகில் வந்து அமரும் பூனை பற்றி, "பூனையை தூணில் கட்டிபோடவில்லை எனில் குரு பாடம் நடத்தமாட்டார், கடுங்கோபம் கொள்வார், வகுப்பை ரத்து செய்து விடுவார்" என மற்ற சீடர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது. சில காலங்கள் கடந்தன, பல சீடர்கள் மாறினார்கள், இந்த தகவலும் புதிய சீடர்களிடையே பகிரப்பட்டது.
ஒருநாள் குரு இறந்து விட்டார். அவர் சீடர்களில் ஒருவர் குருவின் பொறுப்பினை ஏற்று சீடர்களுக்கு வகுப்பு நடத்தி வந்தார். தொடர்ந்து பூனை தூணில் கட்டப்பட்டது. இவ்வாறாக சில நாட்கள் கடந்தன்.
ஒருநாள் பூனை இறந்து விட்டது. அடுத்த நாள் வகுப்பிற்கு வந்த குரு தூணில் பூனை கட்டப்படாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் பூனை இறந்த விபரம் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட குரு தமது சீடர்களை பார்த்து கடுங்கோபத்துன் "நமது குரு குலத்தில் வகுப்பு நடைபெறும் போது தூணில் பூனை கட்டப்படவேண்டும் என்ற சம்பிரதாயாம் உங்களுக்கு தெரியாதா? அந்த பூனை இறந்தால் என்ன. வேறு புதிய பூனை பிடித்து வரவேண்டியது தானே. பூனை இல்லாமல் நான் எப்படி வகுப்பு எடுப்பேன். அது குற்றமாகாதா? எனவே தூணில் பூனை கட்டப்படும் வரை வகுப்பை ரத்து செய்கிறேன்" என கூறி சென்று விட்டார். பின்னர் காட்டிலிருந்து ஒரு பூனை பிடித்து வரப்பெற்று பின் வகுப்பு நடைபெற்றது.
கதைக்கரு:- நாம் பல பழக்கவழக்கங்கள், சடங்கு, சம்பிரதாயாங்களின் உள் அர்த்தத்தை விட்டு விட்டு செயல்களை மட்டும் செய்து வருகிறோம். அர்த்தத்தை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

No comments:

Post a Comment