இசக்கியம்மனாக வழிபடும் தென்பாண்டி இயக்கியம்மன் :
தென்பாண்டி மண்ணான கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பரவிக்கிடக்கும் கிராமிய வழிபாட்டு தெய்வம் இயக்கியம்மன் ஆவாள்.பேச்சுத் தமிழில் இசக்கியம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.
தனது இடது கையில் ஒரு ஆண் குழந்தையை ஏந்தியவாறு காட்சி தரும் இவ்வம்மன் பெரும்பாலும் நாடார்,கோனார் மற்றும் பள்ளர் சாதிகளுக்குக் குல/குடும்ப தெய்வமாக விளங்குகிறாள். அம்மண்ணின் இதர சாதிகளும் இவ்வம்மனை வழிபாடு செய்துவருகின்றனர்.
பார்ப்பதற்கு கிராமியச் சிறுதெய்வ வழிபாடு போலத்தான் தெரியும்.ஆனால் இதன் பின்னால் இருக்கும் உண்மைகள் நம்மை அதிரவைக்கின்றன.
இசக்கியம்மனின் உருவத்தை ஒத்தவாறு உலகின் பல இடங்களில் வழிபாடுகள் நடந்துள்ளமைக்கு நமக்குச் சான்றுகள் கிடைத்துள்ளன.பண்டைய எகிப்தில் ஐசிசு – குழந்தை ஓரசு , கிருத்துவத்தில் மேரி – குழந்தை இயேசு, வைணவத்தில் யசோதை – குழந்தைக் கண்ணன் , சைவத்தில் பார்வதி-குழந்தை முருகன் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறாள் இசக்கியம்மன்.
நிறுவனப்படுத்தப்பட்ட மதங்களிலெல்லாம் இயக்கியம்மன் வழிபாட்டின் நுட்பம் மறைக்கப்பட்டு கட்டுக்கதைகள் எழுதப்பட்டன.
எகிப்தியக் கன்னி ஐசிசுவின் குழந்தை தான் ஓரசு என்றும்,பெத்தலகேம் கன்னி மேரியின் குழந்தை தான் இயேசு என்றும் கதைகளை கட்டினர் மேற்கத்திய மதவாதிகள்.
நம் மண்ணில் இருந்த இயக்கியம்மன் வழிபாட்டை குழிதோண்டிப் புதைக்க உருவான சுரண்டல் நிறுவனங்களான வைணவமும் ,சைவமும் தங்கள் பங்குக்கு புராண நஞ்சைக் கக்கின.
வைணவத்தில் யசோதை -கண்ணனாகவும், சைவத்தில் பார்வதி-முருகனாகவும் சித்தரிக்கப்பட்டாள் இயக்கியம்மன்.
ஆனால் நம் தமிழ் குடிகளின் நெஞ்சுரத்தால் மத நிறுவனங்கள் நம் வீட்டிற்குள் நுழைவதற்குத் திண்டாடின. சாதிய வழிபாட்டுக் கட்டுப்பாடுகளாலும், இசக்கிமுத்து, இசக்கியப்பன், இசக்கியம்மாள்,இசக்கிராசன்,இசக்கியாத்தாள் என்று குலதெய்வப் பெயரை இணைத்து குழந்தைகளுக்குச் சூட்டுவதன் வாயிலாகவும், இயக்கியம்மன் வழிபாடு இன்றும் தென்பாண்டி மண்ணில் தொடர்ந்து வருகிறது.பேச்சுத் தமிழில் இசக்கியம்மன் எனத் திரிந்த மாற்றத்தைத் தவிர வேறு பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பரவியிருந்த இயக்கியமம்ன் வழிபாட்டைச் சிதைத்த மத நிறுவங்கள் இன்று தென்பாண்டி மண்ணையும் குறிவைத்துள்ளன.குழந்தைப் பேறு அடையவும்,மாதவிடாய்ப் பிரச்சனைகளைப் போக்கவும் மட்டுமே இசக்கியம்மன் வழிபாடு செய்யப்படுவதாக சில பார்ப்பனீய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அடப் பாவீங்களா, அப்போ பண்டைய எகிப்திலும்,பெத்தலகேமிலும் வாழ்ந்த பெண்கள் மாதவிடாய் பிரச்சனைக்காகவா இயக்கியம்மனை வழிபட்டார்கள்??
மதவாதிகள் என்போர் பச்சை அயோக்கியர்கள். மக்களைச் சுரண்டித் தின்னும் ஈனப் பிறவிகள்.
மெய்->உடல்;
இயல்->இயக்கம்;
மெய் + இயல் -> மெய்யியல் -> உடலின் இயக்கம் ;
மனித உடல் எவ்வாறு இயங்குகிறது என்று தெரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர் பண்டைய தமிழர்கள்.
அதிலும் குறிப்பாக ஒரு பெண்ணுடலில் தான் ஆண் கருவும் வளரமுடியும்,பெண் கருவும் வளரமுடியும்.
ஆண்,பெண் என இரு பாலரையும் தாங்கிச் சுமந்து பெற்றெடுத்த பெண்ணுடலின் இயக்கத்தை குறிக்கும் ஒரு குறியீடு தான் இயக்கியம்மன்.
பெண்ணுடலின் இயக்கமும் அண்டத்தின் இயக்கமும் ஒன்றுதான் என்பதை நமக்கு உணர்த்தவே இயக்கியம்மன் சிலையை கிராமங்களில் வைத்துள்ளனர்.
மற்றபடி அக்கற்சிலையின் மேல் பாலூற்றி, மலர் தூவி, பக்திப் பாடல்கள் பாடுவதற்காக அல்ல.
தமிழன் ஒரு போதும் ஒரு கற்சிலையை வழிபாடு செய்தது கிடையாது.நுட்பங்களைக் கடத்தவே ஆங்காங்கே சில சின்னங்களையும், குறியீடுகளையும் வைத்தான்.முக்கியமாக குழந்தைகளுக்கு தூய தமிழில் குலதெய்வப் பெயரை வைத்தான்.
தனது தந்தையிடமிருந்து வழிபாட்டு முறைகளைக் கற்றுக் கொண்ட மகன் , சமய நுட்பங்களை மிகத் துல்லியமாக அடுத்த தலைமுறைக்குக் கடத்துவான்.இது தான் நம் கிராமங்களில் சென்ற நூற்றாண்டுவரை நடந்துவந்தது.
நம் வரலாறைக் கடத்த வேதங்களையோ, புராணங்களையோ நாம் ஒரு போதும் பயன்படுத்தியது கிடையாது.
முடி வரலாறு வேறு,குடி வரலாறு வேறு!!
இதுநாள் வரை தமிழர் வரலாறு என்று நமக்குச் சொல்லப்பட்டது தமிழ் முடியரசர்களின் வரலாறுகள் மட்டுமே!
குடிவரலாறை எழுதியெல்லாம் வைக்கமுடியாது.நாம் வாழும் வாழ்வியலின் மூலம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தமட்டுமே முடியும்.அது தான் நிரந்தரமானதும் கூட.காரணம் நம்மைக் கொன்றால் மட்டுமே நம் மரபணு அழியும்.மற்றபடி நம் மரபணுவை எவராலும் கலப்படம் செய்ய முடியாது.
இயக்கர்கள் என்ற பழங்குடிகள் நம் மண்ணில் வாழ்ந்தார்களே,அவர்கள் வேறு யாருமில்லை. அண்டத்தின் இயக்கத்தைப் புரிந்து கொண்டு இயக்கியம்மனை வழிபாடு செய்த நம் முன்னோர்கள் தான் என நான் கருதுகிறேன்.
தென்பாண்டி நாட்டில் இயக்கியம்மன் வழிபாடு இவ்வளவு அடர்த்தியாக இருப்பதைப் பார்க்கும் பொழுது, மெய்யியல் கோட்பாட்டின் பிறப்பிடமாக தென்பாண்டி மண்ணே இருந்துள்ளது என நான் கருதுகிறேன்.
ஒரு புறநானூற்றுப் பாடலில்
“ வடதிசை யதுவே வான்தோய் இமயம்
தென்திசை ஆய் குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே !! “
தென்பாண்டி மண்ணின் இயக்கம் இல்லாவிடில் இவ்வுலகம் பிறழும் என்று புலவர் முடமோசியார் பாடுகிறார்.இவர் எதனை மனதில் வைத்துப் பாடினார் என்று சரியாகத் தெரியவில்லை.அனால் இன்று உலகின் இயக்கம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் உள்ளது.இக்கார்ப்பரேட் நிறுவனங்களுக்கெல்லாம் அப்பனான கிழக்கிந்தியக் குழுமம் கி.பி.1800 களில் பூலித்தேவனை வீழ்த்தி தென்பாண்டி மண்ணைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகுதான் இந்தியாவே அதன் அடிமையானது என்று சொன்னால் அது மிகையாகாது என நான் கருதுகிறேன்.
வாழ்க தமிழ்!!!
Friday, February 10, 2017
இசக்கியம்மன் வரலாறு
Labels:
ஆன்மீக சிந்தனை,
தமிழர் வரலாறு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment