Monday, February 27, 2017

பனங்கிழங்கு: சாகுபடி முறையும்.. மருத்துவ மகிமையும்..

பனங்கிழங்கு: சாகுபடி முறையும்.. மருத்துவ மகிமையும்..

‘கற்பக விருட்சம்’ என்று அழைக்கப்படுகின்ற பனை மரம் அதிக காலம் உயிர் வாழும் அதிசயம் நிறைந்தது. இயற்கை, மனித குலத்துக்கு கொடுத்த அரிய கொடை இது. அதில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட் களும் பயன்தரக்கூடியது. பனை ஓலையில் கைவிசிறி தயாரிக்கலாம். கைவினை பொருட்கள் உருவாக்கலாம். வீட்டிற்கு கூரை வேயலாம். அந்த வீட்டுக்குள் வசித்தால் மழைக்காலத்தில் வெதுவெதுப்பாகவும், வெயில் காலத்தில் குளுமையாகவும் இருக்கும். பனை நாரில் கயிறு திரிக்கலாம். கட்டில் பின்னலாம். கூடை பின்னலாம்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீர் உடல் ஆரோக்கியத்தை காக்கும் ஊட்டச்சத்து பானம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும், உணவு ஆராய்ச்சி கழகமும் 1984 முதல் 1986-ம் ஆண்டு வரை நடத்திய ஆய்வில் பட்டியலிடப்பட்ட பதனீரில் உள்ள சத்துக்கள் ஆச்சரியப்பட வைக்கும் ரகம். 8 அவுன்ஸ் பதனீரில் காரத்தன்மை 7.2 கிராமும், சர்க்கரை சத்து 28.8 கிராமும், சுண்ணாம்பு சத்து 35.4 மில்லி கிராமும், இரும்பு சத்து 5.5 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 32.4 மில்லி கிராமும், தயாமின் 82.3 மில்லி கிராமும், ஆஸ்கார்பிஸ் அமிலம் 12.2 மில்லி கிராமும், புரதசத்து 49.7 மில்லி கிராமும் இருப்பதுகண்டறியப்பட்டிருக் கிறது. மேலும் இதில் நிகோடிக் அமிலமும், வேறு சில சத்துக்களும் கலந்திருக்கிறது. இதனால் பதனீரை குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் இல்லாமல் நீண்ட காலம் வாழலாம்.

பதனீரை இறக்கி அதை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கிறார்கள். கருப்பட்டியிலும் பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. 100 கிராம் கருப்பட்டியில் புரோட்டின் 1.04 கிராமும், சுண்ணாம்பு சத்து 0.86 கிராமும், சுக்ரோஸ் 76.86 கிராமும் உள்ளது. பெண்களுக்கு கர்ப்பகாலத்திலும், குழந்தை பிறந்த பிறகு லேகியம் தயாரிக்கவும் கருப்பட்டி பயன்படுகிறது.

பனை மரத்தில் இருந்து கிடைப்பதில் நாவிற்கு சுவை சேர்க்கும் மற்றொரு பொருள் நுங்கு. இதில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. நுங்கை பதனீரில் போட்டு குடித்தால் உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்படாது. சுண்ணாம்பு சத்தும், இரும்பு சத்தும் அதிகரிக்கும். பனை மரத்தில் கொத்து கொத்தாக காய்க்கும் நுங்கை வெட்டாமல் விட்டுவிட்டால் நன்றாக பழுத்து பனம்பழமாகிவிடும். இதுவும் மிகுந்த சுவையுடையது. ஏராளமான சத்துக்களையும் கொண்டிருக்கிறது.

மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். இது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. தென்மாவட்டங்களில் பரவலாக பனங்கிழங்கு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பனங்கிழங்கு எப்படி விளைவிக்கப்படுகிறது, அதில் எத்தகைய மருத்துவகுணம் இருக்கிறது என்பதை திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பை சேர்ந்த மகாராஜன் கூற கேட்போம்.

“சாகுபடி செய்யும் இடத்தில் பத்து அடி நீளம், பத்து அடி அகலத்துக்கு பாத்தி கட்டிக்கொள்வோம். அதனுள் ¼ அடி ஆழத்துக்கு குழி தோண்டி அதற்குள் பனையில் இருந்து வெட்டி எடுத்து கொண்டு வந்த பனம்பழ விதைகளை நெருக்கமாக அடுக்கி வைப்போம். அடுக்குக்கு மேலேயே ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிவைப்போம். பின்னர் பாத்தி ஓரங்களில் மண்ணை அணைத்து விடுவோம். மேல் பரப்பிலும் பரவலாக மண்ணை தூவி தண்ணீர் தெளிப்போம். பின்னர் அவ்வப்போது தண்ணீர் தெளித்து வந்தால் போதும். மழை காலத்தில் பூமிக்குள் புகும் நிலத்தடி நீரை உறிஞ்சி தானாகவே கிழங்கு விளையும். பனங்கிழங்கு நன்றாக விளைச்சல் ஆவதற்கு 90 நாட்களாகும். 75 நாட்களில் முக்கால் பகுதி விளைச்சல் ஆகி இருக்கும். புரட்டாசி, ஐப்பசி மாதங் களில் பனம்பழத்தை விதைத்தால் மார்கழி, தை மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.

120 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் கிழங்கில் பீலி வளர்ந்து விடும். இந்த கிழங்கு சாப்பிடுவதற்கு வழு, வழுப்பாக இருக்கும். சுவை குறைவாக இருக்கும். 90 நாட்கள் முதல் 100 நாட்கள் வரை விளைந்த கிழங்குகளே சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். அதுவும் தேரி மணல் பகுதியான செம்மண் பகுதியில் விளையக்கூடிய பனங்கிழங்கு மிகவும் சுவையாக இருக்கும். இந்த கிழங்கை பிடுங்கி அதில் உள்ள தோலை நீக்கி, பாத்திரத்தில் நீர் நிரப்பி வேகவைக்க வேண்டும். சுவைக்காகவும், கிருமிகள் ஏதும் பாதிப்பு ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவும் வேகவைக்கும்போது மஞ்சள் சேர்க்க வேண்டும். மஞ்சள் பனங்கிழங்கிற்கு சுவை சேர்ப்பதுடன் கிருமி நாசினியாகவும் பயன்படும்.

நன்கு வேகவைத்த கிழங்கின் மேல் தோல் பகுதியையும், நடுப்பகுதியில் உள்ள தும்பையும் நீக்கி சாப்பிட வேண்டும். பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

இதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம். வாயுத்தொல்லை நீங்கும். மிக்சியில் போட்டும் மாவாக்கி வைத்துக் கொள்ளலாம்.

வேகவைக்காத பனங்கிழங்கை நறுக்கி காயப்போட்டு மாவாக்கி அதை சுவைக்கு ஏற்ப கூழாக தயாரித்தோ, உப்புமா செய்தோ, தோசையாக தயாரித்தோ சாப்பிடலாம். பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால் இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் பனங்கிழங்கை வேகவைத்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு இடித்து சாப்பிட்டால் உடனடி தீர்வு கிடைக்கும். பனங்கிழங்கை மாவாக்கி ஓட்ஸ் தயாரித்து குடித்தால் பசி தீரும். சில நோய்களும் கட்டுப் படும்.

பூமியில் இருந்து பனங்கிழங்கை பிரித்தெடுக்கும்போது விதையில் இருந்து தவின் கிடைக்கும். இது சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.

பனங்கிழங்கை வேகவைத்து மாவாக்கி ஓட்ஸ் தயாரித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தால் அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இந்த தொழிலை பெண்கள் குடிசை தொழிலாகவும் செய்யலாம்.

பனை மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாக இருந்தாலும் அழியும் நிலையில்தான் இருக்கிறது. பெரும்பாலான பனைமரங்களை வெட்டி அழித்து விட்டார்கள். பனை ஏறுவதற்கு தொழிலாளர்கள் கிடைக்காததும், பனை ஏறும் தொழிலை மக்கள் கவுரவ குறைச்சலாக நினைப்பதுமே இதற்கு காரணம். மேலும் செங்கல் சூளை வைத்து இருப்பவர்கள் பனையை வெட்டி செங்கல் தயாரிப்பதும் பனை மரத்தின் அழிவுக்கு வித்திடுகிறது. தற்போது தன்னார்வ தொண்டர்கள் பனை மரம் வளர்க்க முன் வந்து சில பகுதிகளில் பனங்கொட்டைகளை நடவு செய்து வருகிறார்கள்.

பனங்கிழங்கு, பதனீர், நுங்கு, பனம்பழம், பனை ஓலை, பனை நார் என பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்தும் மனித குலத்திற்கு பயன் தரக்கூடியதாகும். பனம்பழத்தில் இருந்து ஜூஸ் தயாரித்து வெளிநாட்டிற்கு அனுப்பினால் நல்ல வருவாய் கிடைக்கும். எனவே அரசு பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களில் உள்ள மருத்துவகுணம் குறித்தும், இதன் நன்மைகள் குறித்தும் ஆய்வு செய்து பொதுமக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்கிறார்.

பனைமரம் வளர்ப்பு குறித்து வள்ளிவிளையை சேர்ந்த இயற்கை விவசாயி சக்திகுமார் கூறுகையில், “பராமரிப்பு ஏதுமின்றி தானாகவே வளரக்கூடிய பனையின் அடி முதல் முடி வரை அனைத்தும் மக்களுக்கு பயன்படக் கூடியதாகும். இந்த பலன்களை பெறுவதற்கு தேவையான தொழிலாளர்கள் இல்லாததால் தான் பனைகள் அழிந்து வருகிறது. தற்போது பதனீர் இறக்குவதற்கும், பனங்காய் வெட்டுவதற்கும் கூட தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. இதனால் பனையை செங்கல் சூளை அதிபர்களிடம் விற்று விடுகிறார்கள். பனை தொழிலை பாதுகாக்க, பனை வளர்க்கவும், பனை ஏறுகிறவர்களை ஊக்குவிக்கவும் அரசு முன்வர வேண்டும். ஒரு பனையை நடவு செய்து நன்றாக பராமரித்தால் 10 ஆண்டுகளில் பலன் கிடைக்கும். பராமரிப்பு இல்லாமல் இருந்தால் பலன் கிடைப்பதற்கு 15 வருடங்கள் ஆகலாம். பனை ஏறுவதற்கு தொழிலாளர்கள் கிடைக்காததால், ராட்சத எந்திரத்தின் மூலம் மின்கம்பத்தில் பணி செய்வது போல் பனை மரத்தில் பதனீர் இறக்குவது, பனங்காய் வெட்டுவது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும். இப்படி செய்தால் தான் இந்த தொழிலை பாதுகாக்க முடியும்” என்கிறார்.

No comments:

Post a Comment