Saturday, November 26, 2016

சாதத்துடன் பிசைந்து சாப்பிடக்கூடிய பொடி - Part II

Varieties of podi - பொடி வகைகள் by Chitra

சாதத்துடன் பிசைந்து சாப்பிடக்கூடிய பொடி - Part II

சீரக பருப்புப்பொடி:

ஒரு கப் துவரம்பருப்பை மட்டும் எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். பிறகு ரொம்ப கொஞ்சமாக எண்ணெய் விட்டு, ரெண்டு மிளகாய் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே ரெண்டு ஸ்பூன் சீரகத்தை வறுத்து எடுத்துக்கொண்டு (அதிக சூட்டில் சீரகம் அதிகம் வறுபட்டு மருந்து வாசனை வந்துவிடும்)உப்பு பெருங்காயப்பொடியுடன் அரைக்கவும்.
சாப்பிடும் விதம்: சூடான சாதத்தில் நெய் விட்டுப் பிசைந்து இந்த பொடியையும் சேர்த்துப் பிசையவும்.

தேங்காய்ப் பொடி:

கால் கப் உளுத்தம்பருப்பு, கால் கப் கடலைப்பருப்பு எடுத்து மிகக் குறைவான நல்லெண்ணெயில் சிவக்க வறுக்கவும். (ரெண்டும் வறுபடும் நேரம் வித்தியாசப்படும் என்பதால் தனித்தனியாக வறுப்பது நல்லது) அடுத்து தேவையான மிளகாய் வறுத்து, ஒரு கப் முற்றிய தேங்காய் துருவலையும் ஈரப்பசையின்றி பொன்னிறமாக வறுக்கவும். எல்லாம் நன்கு ஆறியதும் உப்பு பெருங்காயப்பொடியுடன் சற்றே கொரகொரவென்று அரைக்கவும்.

முற்றிய தேங்காய் இல்லாவிட்டால் இளம் தேங்காயை துருவி ரெண்டு மணி நேரம் freezer வைத்து பிறகு வறுக்க ஈரப்பதம் குறையும். இந்த பொடியை சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம், மோர் சாதத்துக்கு தொட்டுக்கவும் செய்யலாம், காய்கறிகள் செய்யும்போது வதக்கி இது ரெண்டு ஸ்பூன் தூவிவிட, தேங்காய் போட்டு செய்தது போலவே இருக்கும்.

எள்ளு சாதப் பொடி:

கருப்பு எள் இதற்கு பெஸ்ட். வெள்ளை எள்தான் பிடிக்கும் என்றாலும் அதுவும் ஓகேதான்.
எள்ளும் உளுத்தம்பருப்பும் தான் வேண்டும். எள்ளை (அதிலேயே எண்ணெய் இருப்பதால்) வறட்டாகத்தான் வறுக்கணும். எவ்வளவு பருப்பு எடுக்கிறோமோ அதைவிட மூன்று பங்கு அதிகம் எள் வேண்டும். முதலில் எள்ளை பட படவென்று வரும்வரை வறுக்கவும். அடுத்து கொஞ்சம் எண்ணெய் விட்டு பருப்பை சிவக்க வறுக்கவும். (சிலர் எள்ளிலேயே எண்ணெய் இருப்பதால் உளுத்தம்பருப்பையும் வறட்டாகவே வறுப்பார்களாம்)
தேவையான மிளகாய் உப்பு பெருங்காயத்தையும் வறுத்துக்கொள்ளவும்.

எள்ளை தனியாகதான் அரைக்கணும். மிக்சியை நிறுத்தி நிறுத்தி அரைக்கணும். (இல்லாவிட்டால் அதிலேயே எண்ணெய் வந்து பொடி taste கெட்டுவிடும்) அரைத்த எள்ளை எடுத்துவிட்டு பருப்பு மிளகாய்களை அரைக்கவும். சன்ன ரவை பதத்துக்கு அரைப்பது நல்ல சுவை தரும். இந்த பருப்புப்பொடியுடன் அரைத்த எள்ளையும் சேர்த்து ஒரேயொரு முறை மிக்சியை ஓட்டி எடுக்கவும்.

சாப்பிடும் விதம்: சூடான சாதத்தில் நெய் மட்டும் விட்டு இந்தப் பொடியும் போட்டு கிளறினாற்போல் பிசைந்து மேலே ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, வேர்கடலை அல்லது முந்திரி வறுத்துப் போடவும்.

இன்னொரு முறையில் எள்ளுப்பொடி:

கருப்பு எள்ளை மட்டும் வறட்டாக பட படவென்று வறுத்து, தேவையான மிளகாயை எண்ணையில் வறுத்து உப்பு பெருங்காயத்துடன் அரைப்பது. இது பார்க்க கொஞ்சம் டார்க் கலரில் எள் வாசனையுடன் இருக்கும். சாப்பிடும் விதம் மேலே சொன்னபடியே.
(புரட்டாசி சனிக்கிழமை இந்த எள் சாதத்தை வீட்டில் விசேஷமாக செய்வார்கள்)

No comments:

Post a Comment