"பதவிக் கர்வம் அந்த நிமிடத்தில் வேண்டுமானால் ஒரு சுகத்தைக் கொடுக்கலாம். பின்னர் அது ஒரு கட்டத்தில் அவமானத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்.
மகாபாரதத்தில் வரும் துருபதனே இதற்கு ஒரு நல்ல உதாரணம். துருபதன் பாஞ்சால தேசத்து அரசன். துரோணர் ஏழை. பரத்வாஜ ஆச்சிரமத்தில்தான் இருவரும் சேர்ந்து படித்தார்கள். நல்ல நண்பர்களாக இருந்தனர்.
குருகுல வாசம் முடிந்தது. துருபதன் பாஞ்சால தேசத்தின் ராஜாவாகி விட்டார். ஆனால் துரோணரோ வறுமையால் மிகவும் கஷ்டப்பட்டார். தங்கள் குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு ஒரு பசுகூட இல்லாத நிலையில் தவித்தார்.
அவரின் மனைவி "ஏன் இப்படி கவலைப்படுகிறீர்கள்? துருபத ராஜாதான் உங்கள் சிநேகிதர் என்று சொல்கிறீர்களே. அவரைப் போய் பார்த்துவிட்டு வாருங்கள்." என்று அனுப்பிவைத்தார்.
துரோணரும் சரி என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார். துருபதனைப் பார்த்தார். "நண்பா என்னை உனக்கு ஞாபகம் இருக்கிறதா?" என்றார். அப்பொழுது பதவிக்கர்வம் துருபதனின் கண்ணை மறைத்துவிட்டது.
"மூடரே! ஏழை- பணக்காரரோடும், மூடன்-அறிவாளியோடும், பயந்தாங்கொல்லி-சுத்த வீரனோடும் நட்பாக இருக்க முடியுமா?" என்று சொல்லி அவரை அவமானப்படுத்தி விட்டார்.
அதன் விளைவு என்ன ஆயிற்று தெரியுமா? காலம் மாறிவிட்டது. துரோணர் அஸ்தினாபுரம் அரச குமாரர்களுக்கு ஆசிரியரானார். அர்ச்சுனன் அவருடைய சிறந்த மாணவன் ஆனான். அவன் துருபதனை ஜெயித்து, அவனைத் தேர்க்காலில் கட்டி, துரோணரிடம் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறான்.
அர்ச்சுனன் துரோணருக்கு கொடுத்த குருதட்சனை இது. இவர் கேட்டதும் இதைத்தான். பழைய நட்பை மறந்து துருபதன் இப்பொழுது தனது இராட்சியத்தை இழந்து அவமானத்தால் தலைகுனிந்து நிற்கிறான். அப்பொழுது துரோணர் சொல்கிறார், "உனது இராட்சியத்தில் அரைவாசியை நான் எடுத்துக்கொண்டேன். இதனால் இப்பொழுது நாம் இருவரும் சமம் ஆகிவிட்டோம். இனிமேல் நாம் நண்பர்களாக இருக்கலாம்." என்கிறார்.
இந்தப் புராணக்கதை வெறுமனே படிப்பதற்கோ-கேட்பதற்கோ மட்டுமல்ல. நம்மை பக்குவபடுத்திக் கொள்வதற்கே ஆகும்.
பஜ கோவிந்தத்தில் ஆதிசங்கரர் "மா குரு தன ஜன யௌவன கர்வம்" என்கிறார்.
அதாவது உன்னுடைய பணத்தைப் பற்றியோ, ஜன ஆதரவைப் பற்றியோ, உன் இளமைப்பருவத்தைப் பற்றியோ கவலைப்படாதே. ஏனெனில் "காலம் எல்லாவற்றையும் ஒரு நொடியில் அழித்துவிடும்". என்கிறார்.
இது புரியாமல் நடப்பதால்தான் பல சந்தர்ப்பங்களில் நாம் கஷ்டப்படவேண்டியிருக்கிறது."
No comments:
Post a Comment