Monday, November 28, 2016

பொடி வகைகள - III

Varieties of podi - பொடி வகைகள் by Chitra

கறிவேப்பிலைப் பொடி:

முதலில் ஒரு பெரிய உருண்டை புளியை கொட்டை நார் நீக்கி எண்ணையில் வறுத்து தனியாக வைக்கவும். அடுத்து அரை கப் உளுத்தம்பருப்பு எடுத்து அதை நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் தனியாவையும் அடுத்து வறுத்துக்கொள்ளவும். அடுத்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகையும் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகத்தையும் வறுக்கவும். கடைசியில் தேவையான மிளகாயும் சேர்த்து வறுத்து உப்பு பெருங்காயம் சேர்த்து ஆறவிடவும். நன்றாக ஆறியதும் மிக்சியில் பொடிக்கவும். இது இரத்த விருத்திக்கு உதவும், இள நரை போகவும் பசியைத் தூண்டவும் செய்யும்.

கொத்தமல்லி / புதினா பொடி:

அரை கட்டு கொத்தமல்லி / புதினாவை நன்றாக கழுவி ஒரு kitchen paperல் ஆறவிடவும். மைக்ரோவேவ் இருந்தால் ஒரு tissue பேப்பர் இல் வைத்து நிறுத்தி நிறுத்தி காய வைக்கலாம். கலர் மாறாமல் வரும். அது இல்லாதவர்கள் வீட்டிலேயே நிழலில் உலர்த்தி வைக்கவும்.

வாணலியில் ஒரு சிறு உருண்டை புளியை எண்ணையில் பொறித்து ஆறவிடவும். ஒரு பிடி கடலைப்பருப்பு, ஒரு பிடி உளுத்தம்பருப்பு ரெண்டையும் தனித்தனியாக நல்லெண்ணெய் விட்டு பொன்னிறமாக வறுக்கவும். அடுத்து தேவையான மிளகாய், பெருங்காயம் வறுத்து உப்பு சேர்த்து ஆற விடவும். கடைசியாக காய வைத்த கொத்தமல்லி/ புதினாவையும் நன்றாகப் பிரட்டி எல்லாவற்றையும் கொரகொரப்பாக அரைக்கவும்.

கறிவேப்பிலையையும் இந்த முறையில் செய்யலாம். இது சாதத்துடன் சாப்பிட மட்டுமின்றி தயிர் சாதத்துக்கும் தொட்டுக்க ஏற்றது.

சாப்பிடும் விதம்:

சூடான சாதத்தில் நெய் எண்ணெய் கலந்து ஊற்றி இந்தப் பொடியை தூவிப் பிசைந்து சாப்பிடலாம்.

(குறிப்பு: புளி போட்டால் மிக்சியில் மாட்டிக்கொள்ளும் என்பவர்கள் கடையில் விற்கும் புளி பவுடர் சேர்க்கலாம். ஆனால் அது இந்த taste வராது, மேலும் கட்டி தட்டிப்போகும். எனக்கும் இந்த problem உள்ளது என்பதால் நான் புளியைத் தவிர்த்து மீதியைப் பொடி செய்து வைத்துக்கொண்டு சாதம் கலக்கும் போது புளிக்கு பதில் லெமன் ஜூஸ் சேர்ப்பேன். இது புளிப்புச் சுவை தருவதோடு சாதம் உதிரி உதிரியாக இருக்கும்படியும் செய்யும்.)

இஞ்சி சாதப் பொடி:

இதற்கு நூறு கிராம் இஞ்சி தேவை. இஞ்சியை கழுவி தோல் சீவி வில்லை வில்லையாக வெட்டி வைக்கவும். கொஞ்சம் ஈரப்பசை போகும்வரை ஒரு பேப்பர் tissue இல் வைக்கலாம்.
ஒரு வாணலியில் ஒரு கப் துவரம்பருப்பை வறட்டாக சிவக்க வறுக்கவும். அடுத்து ரெண்டு மிளகாய் வறுக்கவும்.( இஞ்சியில் காரம் இருப்பதால் மிளகாய் குறைவாகவே போதும்) விரும்பினால் ஒரு பிடி கறிவேப்பிலையும் வறட்டாக வறுக்கலாம். உப்பு பெருங்காயப் பொடி சேர்த்து ஆறவைக்கவும்.

காய வைத்த இஞ்சியை நெய்யில் பொரிக்கவும். பொரித்ததும் இஞ்சி வில்லைகளை ஒரு கிட்சேன் பேப்பரில் வைக்க அதிகப்படி நெய் வடிந்துவிடும். (பொடி செய்யும்போது fat இருந்தால் பொடியில் சிக்கு வாசனை வந்துவிடும். நெய்க்கு பதில் எண்ணெய் சேர்ப்பதும் அவரவர் விருப்பம்)

இஞ்சி துண்டுகள் ஆறியதும் முதலில் பருப்பு etc வை பொடித்துக்கொண்டு கடைசியில் இஞ்சி வில்லைகளையும் சேர்த்து பொடிக்கவும். இது சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் தயிர் சாதத்துடன் சாப்பிடவும் ஏற்றது.

மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறுகள் தொடர்ந்து சாப்பிட நீங்கும்.

முருங்கைக்கீரைப் பொடி:

முருங்கை இலைகளை கழுவிக்காயவைத்து எண்ணெய் அல்லது நெய்யில் பொரிக்கவும். வாணலியில் மிளகு, சீரகம், பெருங்காயம் வறுத்து மிக்சியில் பொடித்து கடைசியில் பொறித்த இலைகளையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி உப்பு சேர்த்து சாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிடலாம். இதுவும் இரும்பு சத்து நிறைந்தது. பிரெஷ் ஆக வாரம் ஒரு முறை செய்து சாப்பிடலாம்.

கடுகு சாதப்பொடி:

ஓடாதீங்க.... நிஜமாவே இது நல்லாதான் இருக்கும் (பிடித்தவர்களுக்கு). கொஞ்சம் உடல் சூடு பண்ணும். குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

ஒரு ஸ்பூன் கடுகை வறட்டாக வறுக்கவும். அதே வாணலியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு ரெண்டு ஸ்பூன் உளுத்தம்பருப்பு, ஒரு மிளகாய் வறுக்கவும். மூன்றையும் பெருங்காயம் மற்றும் உப்புடன் பொடித்து வைக்கவும்.

செய்யும் விதம்:
உதிரியாக வடித்த சாதத்தில் கலக்கவும். மேலே ஒரு ஸ்பூன் நெய்யில் கடுகு கறிவேப்பிலை ஒரு ஸ்பூன் வேர்க்கடலை தாளித்து போடவும்.

No comments:

Post a Comment