Sunday, November 27, 2016

விதைக்குள் இருக்கிறது விஷயம் ..!!

விதைக்குள் இருக்கிறது விஷயம் ..!!

"விதை என்பது விதை மட்டுமல்ல; இன்னொரு உயிர்;"

நமது அடுத்த சந்ததிக்கு சேர்த்து வைக்க வேண்டிய மூலப்பொருள். விதை வியபாரம், விவசாயிகளிடமிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் கைக்கு எப்போது சென்றதோ அன்றைக்கே அந்த உயிருக்குள் விஷம் விதைக்கப்பட்டுள்ளது.

இப்போது அதிக அளவில் நோய்கள் தாக்குவதற்கு காரணம் விதைகளே. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் விதைக்கும் நெடிய அரசியல் இருக்கிறது எனக்கூறும், பாரம்பரிய விதை ஆர்வலர்கள், தற்போது அரசு வழங்கும் மாடித் தோட்ட விதைகளின் நம்பகத் தன்மை குறித்து கேள்விகள் எழுப்புகிறார்கள். சமீபத்தில் தமிழக அரசு வழங்கிய விதைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்ற மாடித்தோட்ட ஆர்வலர்கள் பலருக்கும் வீட்டுக்குச் சென்று பிரித்துப் பார்த்ததும் அதிர்ச்சி, வேளாண் பல்கலைக்கழகம் வழங்கிய அந்த விதைகளுடன் இந்தோ அமெரிக்க வீரிய விதைகளும் இருந்ததுதான் இந்த அதிர்ச்சிக்கும் குழப்பத்துக்கும் காரணம்.

இந்த விதிகளால் என்ன ஆகிவிடப்போகிறது என்று அவ்வளவு மெத்தனமாய் எடுத்துக் கொள்ள முடியாது. இவ்வளவு நாட்களாக நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அனைத்துக் காய்கறிகளும் ரசாயன உரபிடப்பட்டவைதான் அவரவர் வீட்டின் மொட்டை மாடியில் தோட்டம் வைக்க ஆரம்பித்தோம். இப்போது அதிலும் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது மறைமுக அரசியல்.

இந்தோ-அமெரிக்க கலப்பின வீரிய விதைகள்னு அரசு வழங்கும் பாக்கெட்லயே எழுதி இருக்கு. அதுலயே பாய்ஸன்னு போட்டிருக்கு. இதை ஏன் வேளாண் அலுவலர்கள் கொடுத்தாங்கனு தெரியல. தேவை அதிகம், உற்பத்தி பெருகும் எடை கூடும், நிறைய காய்க்கும்னு ஹைபிரிட் விதைகள விக்கிறவங்க சொல்றாங்க. அதற்காக உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளும் கொடுக்குறாங்க. ஆனால், இவை வேண்டாம் என்றுதானே உலகம் முழுக்க இயற்கை விவசாயத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்ம பயிரினங்கள் அதிக மழை, அதிக வறட்சி, பூச்சித் தாக்குதல் எல்லாவற்றையும் சமாளிக்கக் கூடியது. நம்ம நாட்டு காய்களுக்கு ஒரு குணமிருக்கு. மண்ணுக்கேத்த குணம், நிலத்துகேத்த குணம், நீரின் குணம் அப்படின்னு அந்தந்தக் குணத்தோட காய்கறிகள் விளைஞ்சது. கலப்பின வீரிய விதைகள்ல வளர்ற காய்கறிகள் அதே நுண்ணூட்டச் சத்தோட வராது.

சமீபத்துல குஜராத்துல ஒரு கண்காட்சிக்கு போயிருந்தேன், அங்கே நாட்டுத் தக்காளி கத்திரிக்காய், கொத்தமல்லி என நாட்டுரகம் ஒன்னுமே கிடைக்கல. வட இந்தியா முழுக்க மரபணு மாற்றப்பயிர்களே வந்துடுச்சு. இப்ப ஒரு புடலங்கா விதை 20ரூபாய், வெள்ளரி விதை 12ரூபாய்னு விக்கிறாங்க. 100கிராம் 300ரூபாய்க்கு விக்குது. இனி போகப் போக 1கிலோ 5000ரூபாய்க்கு மேல விற்கும். ஆனால் இந்த விதையால் உருவாகும் பயிர்ல வர்ற காய்கள்ல இருந்து திரும்ப விதையெடுக்க முடியாது.
மீண்டும் விதைக்காக அவர்களிடம் போய்தான் நிற்கணும்.

" குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் வீடு,பணம்,சொத்து சேத்து வைக்கிறாங்களோ இல்லையோ, கண்டிப்பா நல்ல விதைகளைச் சேர்த்து வைக்கனும்." நமக்கான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்யனும் அப்போதான் பரவலாக்கம் இருக்கும்.

-சூழலியலாளர் அழகேஸ்வரி,
இயல்வாகை சூழலியல் இயக்கம்
.
நன்றி:- புதியதலைமுறை வாரஇதழ்.

No comments:

Post a Comment