காவிரிப் பிரச்சினை- இந்திய அரசின் துரோக வரலாறு!
1970 பிப்ரவரியில்அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி கவிரிச் சிக்கலை 1956ம் ஆண்டு தண்ணீர்த் தகராறுச் சட்டப்படி, தீர்ப்பாயத்திற்கு விடுமாறு கேட்டுக்கொண்டு இந்திய அரசுக்கு விண்ணப்பித்தார்.
கர்நாடக அரசு இதை எதிர்த்ததால் இந்திய அரசு தீர்ப்பாயம் அமைக்கவில்லை.
1971ல் தமிழக அரசு(1)தீர்ப்பாயம் அமைக்கும்படி இந்திய அரசுக்குக் கட்டளையிடவேண்டும்.(2)கர்நாடக அரசு காவிரியின் துணை ஆறுகளில் அணைகள் கட்டுவதற்குத் தடை விதிக்கவேண்டும்.மென்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. பின்னர் தஞ்சை மாவட்ட உழவர் சங்கம் அதே கோரிக்கைகளை முன் வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
1972 சூன் மாதம் பேச்சு வார்த்தை மூலம், பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன், வழக்கைத் திரும்பப் பெருங்கள் என்ற, இந்திய தலைமை அமைச்சர் இந்திராகாந்தியின் அறிவுரையை ஏற்று கருணாநிதி வழக்கைத் திரும்பப் பெற்றார்.
16 ஆண்டுகள், பல கட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்விக்குப் பிறகு, 1986 சூலை மாதம் அன்றைய தமிழக முதல்வர் எம் ஜி ஆர் தீர்ப்பாயம் அமைக்கக் கோரி தில்லிக்கு எழுதினார். மறுக்கப்பட்டது. 1986ல் காவிரி னீர்ப்பாசன விளைபொருட்கள், விவசாயிகள் நல உரிமை பாதுகாப்புச் சங்கம் தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. பின்னர் தமிழ்நாடு அரசும் இவ்வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது.
இவ்வழக்கு 1990 பிபரவரியில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ,” 1990 ஏப்ரல் 24- கடைசி வாய்தா அதற்குள் பேசித் தீர்வுகாணாவிட்டால் சிக்கல்களின் தகுதி அடிப்படையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்” என்றார். பேச்சு வார்த்தை தோல்வியுற்றதால், 1990 ஏப்ரல் 24ல் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா”தீர்ப்பாயம் அமைக்க ஆணையிட்டார். ஒரு மாதத்துக்குள் தீர்ப்பாயம் அமைத்து அரசிஹழில் இந்திய அரசு வெளியிடவேண்டும் என்று கட்டளையிட்டார். 1990 சூன் 2ம் நாள் தீர்ப்பாயம் நிறுவப்பட்டது.
1990 சூலை 28ல் முதல் அமர்வு தொடங்கியது. தமிழ்நாடு இடைக்கால நிவாரணம் கேட்டது. 1991 சனவர்-5ல் இம்மனு நதீர்ப்பாயத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சனீதிமன்றம் சென்று, 1991 ஏப்ரல் 26ல் , தீர்ப்பாயம் இடைக்கால நிவாரணம் வழங்கலாம் என்ற தீர்ப்பினைப் பெற்றது.
1991 சூன் 25ல் இடைக்காலத் தீர்ப்பு( 205 டி எம் சி) வழங்கப்பட்டது. கர்நாடகம் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக, 1991 சூலை 25ல் அவசரச் சட்டம் இயற்றியது.. 1991 செப்டெம்பரில் தீர்ப்பாய ஆணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது கர்நாடகம். 1991 சூலை 27ல் இந்திய அரசு, கருத்துக் கேட்டதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் (1) கர்நாடக அவசரச் சட்டம் செல்லாது,(2)தீர்ப்பாயம் இடைக்கால ஆணை வழங்கத் தகுதிபடைத்தது என்று சொன்னது. 1991 டிசம்பர் 11ல் இந்திய அரசு இடைக்கால ஆணையை அரசிதழில் வெளியிட்டது. கர்நாடகத்தில் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம், தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. 1993ல் இடைக்கால ஆணைப்படி தண்ணீர் தர மறுப்பு. அம்மையார் செயா உண்ணாவிரதம். சுக்லா வாக்குறுதி. செயல்படுத்தப்படவில்லை.
2007 பிப்ரவரி 5ல் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.(195 டி எம் சி) . அரசிதழில் வெளியிடாமல் இந்திய அரசு காலம் தாழ்த்தி வந்தது. அதற்கும் தமிழக அரசு உச்சனீதிமன்ற ஆணை பெற்றே, 19.02.2013ல் அரசிதழில் வெளியிடச் செய்தது.தீர்ப்பினைச் செயல்படுத்த, தீர்ப்பாயம் அறிவுறுத்திய பொறியமைவான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இந்திய அரசு காலம் தாழ்த்தியது. தமிழ்னாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டபோது, காமேவா அமைத்திட ஒரு மாதம் காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் 20.09.2016 அன்று தீர்ப்பளித்தபோது அதை ஏற்றுக்கொண்டார் முகுல் ரோத்தகி. 2016 அக்டோபர் 4க்குள் காமே வா அமைத்திடலாம் என்று உச்சநீதிமன்றத்திற்கு உறுதிகொடுத்தார் முகுல் ரோத்தகி. அதே நபர் 03.10.2016 அன்று, காமேவா அமைத்திட ஆணையிட உநீம வுக்கு அதிகாரம் இல்லை என்றும், தீர்ப்பாயத் தீர்ப்பில் உநீம தலையிடமுடியாது என்றும் வாதிட்டார். அதிகாரம் உண்டு என்று உநீம 09.12.2016ல் தீர்ப்புரைத்தது. தற்போது விசாரணையில் உள்ளது. விசாரணை சூலை மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காவிரித் தீர்ப்பயத்தைக் கலைத்துவிட்டு, புதிய ஒற்றைத் தீர்ப்பாயம் அமைக்க, 15.03.2017ல் இந்திய பாசனத்துறை அமைச்சர் உமா பாரதி இந்திய நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து, தமிழர்களின் காவிரி நீர் உரிமையை சவப்பெட்டிக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கிறார்.
No comments:
Post a Comment