"பாண்டியர் வரலாறு"
பகுதி 4- பாண்டியரின் துறைமுக தலைநகரம் - கொற்கை
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரிலிருந்து ஏரல் செல்லும் வழியில் இருக்கிறது கொற்கை. ஊர் முகப்பில் வீழ்ந்து கிடக்கிறது ஒரு மரம். சுமார் 2000 ஆண்டுகள் பழமையான வன்னி மரம் என்கிறார்கள். அதன் கீழே சில கற்சிலைகள் இருக்கின்றன.
கொற்கையைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் ஏராளம். வெளிநாட்டுப் பயணியான தாலமி, கி.பி.130 வரை கொற்கை பாண்டியரின் துறைமுகமாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். கி.மு. 300 தொடங்கி கி.பி. 500 வரை பழம் பாண்டியர்கள் கொற்கையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். பின்னர் அது மதுரைக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
தாமிரபரணி கடலில் கலக்கும் முன்பு வண்டலுடன் முத்துக்களையும் வாரிக்கொண்டு வந்திருக்கிறது. அந்த முத்துக்களால் பிரசித்தி பெற்றதுதான் கொற்கை. இங்கே கிடைத்த முத்துக்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்றன. கிரேக்கர்களும் அரேபியர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு முத்துக்களை வாங்கிச் சென்றார்கள். “கொற்கையை ஆண்ட பாண்டிய மன்னர்கள், ரோம் நாட்டின் அகஸ்டஸ் மன்னனின் அரசவைக்கு கொற்கை முத்துக்களை பரிசாக அளித்தார்கள்” என்று குறிப்பிடுகிறார் வரலாற்று அறிஞர் ஸ்டிராபோ.
பாண்டிய மன்னர்களின் குதிரைப்படைகளுக் காக ஆண்டுதோறும் கொற்கைத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான பாய் மரக் கப்பல்களில் 16,000 அரேபியக் குதிரைகள் வந்திறங்கின என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆசிரியர் வாசப்.
‘மறப்போர் பாண்டியன் அறத்தின் காக்கும் கொற்கையம் பெருந்துறை முத்து’ என்கிறது அகநானூறு. ‘நற்றிறம் படரா கொற்கை வேந்தே’ என்கிறது சிலப்பதிகாரம். “கி.மு.2500-ம் ஆண்டு உக்கிரப் பெருவழுதியால் நிறுவப்பட்டு, அகத்தியராலும் பிற தமிழ் புலவர்களாலும் தமிழ் ஆய்வு செய்யப்பட்ட இடைச்சங்கம் எழுந்தது கொற்கையில்தான்” என்று தனது ‘கோநகர் கொற்கை’ நூலில் குறிப்பிட்டுள்ளார் வரலாற்று ஆசிரியர் ராகவன் அருணாசல கவிராயர்.
கொற்கை பாண்டியர்களுக்கு அதிக வருவாய் ஈட்டித்தந்த துறைமுகமாகும், இங்கே நாணயங்கள் அடிக்கபட்டிருக்கின்றன, நாணயம் அடிக்குமிடம் தான் அக்கசாலை எனப்படுகிறது, இன்றும் கொல்லர்கள் அதிகம் இப்பகுதியில் வாழ்கிறார்கள், இந்தபகுதியில் கண்டெடுக்கபட்ட செப்புகாசுகளில் வெற்றிவேல்செழியன் என்ற வட்டெழுத்துகள் காணப்படுகின்றன.
சங்க இலக்கியம் மற்றும் வரலாற்றில் ‘மதுரோதய நல்லூர், பாண்டிய கபாடம், கொல்கை, கொல்கை குடா’ என்றெல்லாம் கொற்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
#கடல்_கொண்ட_கொற்கை
பிற்காலத்தில் மார்கோபோலோ மற்றும் கிரேக்கர்களின் குறிப்புகளிலிருந்து கொற்கையை ஆய்வு செய்த பிஷப் கால்டுவெல், அன்றைய ஆங்கிலேய அரசின் உதவியுடன் இங்கே அகழ்வாராய்ச்சி மேற்கொண்டார். அவர் எழுதிய குறிப்பில், ‘இங்கே நிலமட்டத்திலிருந்து எட்டு அடிக்கு கீழே பழங்கால கொற்கைத் துறைமுகம் இருந்துள்ளது. அதில் பாதி கடலிலும் மீதி தாமிரபரணியிலும் புதையுண்டிருக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய காலத்தில் தாமிரபரணி இங்கே வடக்கு நோக்கி ஓடியது. தற்போது நதி திசைமாறி ஏரலை நோக்கி தெற்கு திசையில் ஓடுகிறது. அதை உறுதி செய்யும் வகையில் இங்கே நட்டாத்தியம்மன் கோயில் இருக்கிறது. ஆற்றில் நடுவே அமைந்த அம்மன் கோயில் என்பதே அதன் பொருள். ஆறு இன்று திசை மாறியிருப்பதை இது உணர்த்துகிறது. அதன் பின்பு மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை கொற்கையில் 12 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்து ஏராளமான தொல்பொருள்களை கண்டெடுத்துள்ளது.
தென் தமிழகத்தை கடல்கோள் கொண்டபோது கொற்கை அழிந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அழிவுக்கு இன்னும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், இன்று கொற்கையில் கடல் இல்லை. கடல் அலைகள் இல்லை. கடல் காற்றுகூட இல்லை. ஆனாலும், ஊருக்குள் நடக்கும் போது பாதத்தின் அடியில் சங்குகளும் சிப்பிகளும் மிதிபடுகின்றன. வாழ்வாங்கு வாழ்ந்த தமிழர் வரலாற்றின் எஞ்சிய சாட்சியங்கள் அவை.
#பகுதி 1 - https://goo.gl/ZdLZz3
#பகுதி 2 - https://goo.gl/CymsNp
#பகுதி 3 - https://goo.gl/Jn152R
பின் இணைப்புகள் -
விக்கிபீடியா - https://en.wikipedia.org/wiki/Korkai
தி இந்து தமிழ் செய்தி - https://goo.gl/N4PYLJ
எழுத்தாளர் ராமகிருஷ்ணன் பதிவு - http://www.sramakrishnan.com/?p=3386
No comments:
Post a Comment