கைவிட்ட பி.டி. பருத்தி... நாட்டு ரகங்களைத் தேடி அலையும் பஞ்சாப் பல்கலைக்கழகம்!
*ஒரு கிலோ பி.டி பருத்தி விதை ரூ1,800
*ஒரு கிலோ பல்கலைக்கழக பருத்தி விதை ரூ160
பாரம்பர்ய விதைகளைச் சேமியுங்கள். இன்று பயன்படுகிறதோ இல்லையோ, என்றாவது ஒருநாள் பயன்படும்’ என்று இயற்கை ஆர்வலர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இக்கருத்தை மெய்ப்பித்திருக்கிறது, பஞ்சாப் மாநிலத்தில் அண்மையில் நடந்து வரும் நிகழ்வு.
கடந்த ஆண்டு, பருத்தியில் வெள்ளை ஈ பாதிப்பால், பஞ்சாப் விவசாயிகளுக்கு பெருமளவு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் பருத்தி அதிகமாக பயிர் செய்யப்படும், மானசா, பத்திண்டா, பரித்கோட், முக்த்சர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், பஞ்சாப் மாநில வேளாண் துறை, பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நாட்டுப் பருத்தி ரகங்கள் மற்றும் அதிலிருந்து உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி ரகங்களைப் பரப்பும் பணியில் இறங்கியுள்ளது. இந்த ரகங்கள் வெள்ளை ஈ தாக்குதலை எதிர்கொண்டு வளரக்கூடியதாகவும், அதிக மகசூல் வழங்கக் கூடியதாகவும் இருப்பதால், பஞ்சாப் விவசாயிகள் இந்த ரகங்களைப் பயிர் செய்ய முன்வந்துள்ளனர். ஆனால், வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதைச் சார்ந்துள்ள விதை விற்பனை மையங்களில் இந்த நாட்டு விதைகள் இல்லாததால்... ராஜஸ்தான், ஹரியானா மாநில நாட்டு ரக பருத்தி விதைகளை வாங்கி பயன்படுத்தும்படியும், அவை கிடைக்காத பட்சத்தில் வீரிய ஒட்டு ரகங்களைப் (ஹைபிரீட்) பயன்படுத்தும்படியும் பல்கலைக்கழகம் அறிவுறுத்தி வருகிறது.
“விவசாயிகள் பி.டி விதைகளையே அதிகம் வாங்குவதால், பல்கலைக்கழகம் குறைந்த அளவிலேயே நாட்டுரக விதைகளை வைத்திருந்தது. அவையும் கிசான் மேளாவில் விற்பனை செய்யப்பட்டுவிட்டன. இந்நிலையில் நாட்டுவிதைகளை வாங்க பெருமளவில் விவசாயிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டுக்குள் 25 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில், நாட்டு ரகம் பயிரிடப்பட்டு விடும். இதனால், அடுத்த ஆண்டுக்குள் போதுமான விதைகள் கிடைத்துவிடும். பல்கலைக்கழகமும் 500 இடங்களில் பருத்தி சாகுபடி குறித்து செயல்விளக்கம் அளித்துள்ளது” என்று சொல்லியிருக்கிறார், பஞ்சாப் மாநில வேளாண்துறை இயக்குநர் பரம்ஜித் சிங்.
இதுகுறித்து நம்மிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து.
“இந்தியாவில் மரபணு மாற்றுப் பருத்தி விதைகள் 2002-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. இன்று இந்தியா முழுவதும் பி.டி. பருத்தி விதைகள்தான் பெருவாரியாக விற்பனையாகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் பி.டி பருத்தி அதிகளவில் பயிர் செய்யப்பட்டு வருகிறது.
சென்ற ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பி.டி பருத்திப் பயிரில் காய்ப்புழுக்கள் அதிக சேதத்தை ஏற்படுத்தின. பி.டி பருத்தி உருவாக்கப்பட்டதன் நோக்கமே... பூச்சித் தாக்குதலை சமாளித்து, அதிக மகசூல் எடுக்கவேண்டும் என்பதுதான். ஆனால், அது மாயை என்றாகி விட்டது.
ஒரு கிலோ, 1,800 ரூபாய் என்ற விலையில் பி.டி பருத்தி விதைகளை வாங்கி விதைத்துள்ளனர், பஞ்சாப் மாநில விவசாயிகள். பல்வேறு பூச்சிக்கொல்லிகள் தெளித்தும் புழுக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிக மகசூல் இழப்பு ஏற்பட்டு, நஷ்டத்துக்குள்ளாகி இருக்கிறார்கள், தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்க... மான்சான்டோ கம்பெனிக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்த பல்கலைக்கழகங்களும் அரசு வேளாண் துறையும் நாட்டு விதைகள் மீது கவனத்தைச் செலுத்தியுள்ளன. ஆனால், அவர்களிடம் இப்போது நாட்டு விதைகளோ, அதிலிருந்து உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி விதைகளோ இல்லை. இருக்கிற விதைகளைப் பயிர் செய்து பெருக்க வேண்டிய நிலைதான் உள்ளது. பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது, நமக்கு ஒரு பாடம். இனிமேலாவது, வேளாண் பல்கலைக்கழகங்கள் அனைத்து பயிர்களுக்குமான நாட்டு விதைகளைச் சேமித்து வைக்க வேண்டியது அவசியம்” என்றார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பருத்தித்துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் குமாரிடம் இதுகுறித்து கேட்டபோது, “இந்தியாவில் 92 சதவிகித விவசாயிகள், பி.டி. பருத்தி விதைகளை வாங்கித்தான் பயிர் செய்கிறார்கள். மீதியுள்ளவர்கள்தான், ஆராய்ச்சி ரகங்கள் மற்றும் நாட்டு ரகங்களைப் பயிர் செய்து வருகிறார்கள். பல்கலைக்கழகத்தில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பருத்தி ரகங்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. இந்த ரகங்கள் வறட்சியையும், பூச்சித்தாக்குதலையும் தாங்கி வளரக்கூடியவை. அதுவும் புதிதாக வெளியிடப்பட்டுள்ள கோ-14 என்ற பருத்தி ரகத்தின் நூலிழை 35 மில்லி மீட்டர் நீளம் வளரக்கூடியது. இதைத்தவிர எம்.சி.யு-5, கே-11, கே.சி-3, டி.சி.ஹெச்.பி-213, எஸ்.பி.பி.ஆர்-2 ஆகிய ரகங்களை விவசாயிகள் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரகங்களின் விலை ஒரு கிலோ 160 ரூபாய்தான்.
தமிழ்நாட்டு விவசாயிகள், பல்கலைக்கழக ஆராய்ச்சி ரகங்களை வாங்கி தாராளமாக பயிர் செய்யலாம். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் போதுமான அளவில் பருத்தி விதைகள் இருக்கின்றன. விதைகள் தேவைப்படுவோர் பல்கலைக்கழகத்தை அணுகினால் வழிகாட்டுவோம்” என்றார்.
தொடர்புக்கு,
பேராசிரியர் மற்றும் தலைவர், பருத்தித் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
செல்போன்: 0422-2456297.
‘நாட்டு ரகம் இருக்க, பி.டி எதற்கு?’
‘அப்பச்சி எக்கோ-லாஜிக் காட்டன் நிறுவனம்’ மூலமாக ஒப்பந்த முறையில் பருத்தி சாகுபடி செய்துவருகிறார், பொள்ளாச்சியைச் சேர்ந்த மணி சின்னசாமி. “மகாகவி பாரதியாரின் தந்தையார், தூத்துக்குடி ஜின்னிங் பருத்தி அரவை ஆலையில் பணிபுரிந்த காலத்திலேயே அங்கிருந்து நாட்டுப் பருத்தியில் தயாரிக்கப்பட்ட நூல், துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் வணிகம் புரிவதற்கு வந்த காரணங்களில் நம்முடைய பருத்தியும் ஒன்று. இன்றும் மருத்துவத் துறையில் எளிதில் உறிஞ்சும் தன்மை கொண்ட பஞ்சுகள், காதி ஆடைகள், மிருதுத்தன்மை கொண்ட பஞ்சுகள் தயாரிப்பதற்கும் நாட்டுப் பருத்திதான் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ‘தேசி பருத்திகள்’ (நாட்டுப் பருத்திகள்) என்ற பெயரில் நாட்டுப் பருத்திகள் வலம் வந்தன. ஆனால், விவசாயிகளை ‘விளைச்சல்’ என்னும் மாயவலைக்குள் தள்ளிவிட்டு, ஹை-பிரீட், பி.டி. பருத்தி போன்றவற்றை மட்டுமே விதைக்க வைத்துவிட்டனர். இந்த ரகங்களையெல்லாம், இறவையில் மட்டுமே பயிர் செய்ய முடியும். மானாவாரியில் வெற்றிகரமாக பயிர் செய்ய முடியாது. ஆனால் நாட்டு பருத்தி ரகம் இரண்டுக்கும் ஏற்றது.
நாட்டுப் பருத்தி ரகங்கள் மகசூலுக்கு வர, 160 நாட்களிலிருந்து 180 நாட்களானாலும், இதற்கு பெரிய அளவில் செலவு செய்யவோ, பராமரிக்கவோ தேவையில்லை. ஓர் அடிக்கு ஓர் அடி இடைவெளியில் அடர்நடவில் ஏக்கருக்கு 40 ஆயிரம் செடிகள் வரை நடலாம். இந்த முறையில் களையெடுக்க வேண்டியதில்லை. இதில் 2 ஆண்டுகள் வரை பலன் எடுக்கலாம். ஏக்கருக்கு 20 குவிண்டால் வரை மகசூல் எடுக்கலாம். குவிண்டால் 5 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும்.
பி.டி பருத்தியில் உள்ள பூச்சிக்களுக்கான எதிர்ப்புத்தன்மை ஏற்ப புழுக்களும் தங்கள் எதிர்ப்புத்திறனை வளர்த்துக் கொண்டு விட்டதால், அதிலும் காய்ப்புழுக்கள் அதிகமாகத் தாக்க ஆரம்பித்து விட்டன. ஆனால், மற்ற ரகங்களோடு ஒப்பிடுகையில் வறட்சியையும், பூச்சித் தாக்குதலையும் எதிர்க்கொண்டு குறைந்த பராமரிப்பிலேயே நாட்டுப் பருத்தி ரகங்கள் நன்கு வளரும்தன்மை கொண்டவை.
விவசாயிகள் நாட்டுப் பருத்தி வாங்கும் நுகர்வோரைக் கண்டறிந்து நேரடியாக விற்பனை செய்ய முடிவதில்லை. அதனால், இடைத்தரகர்களிடம் சிக்க வேண்டியுள்ளது. நாட்டுப் பருத்தியின் அருமை தெரியாத வியாபாரிகள் மொத்தமாக விலை பேசி எடுக்கும் சூழல்தான் உள்ளது. நாட்டுப் பருத்திக்கான சந்தை அறிந்து பயிர் செய்தால், நல்ல லாபம் ஈட்ட முடியும். நாட்டுப் பருத்தி விதைகளில் புரோட்டீன் சத்து அதிகமாக இருப்பதால், மாடுகளுக்கு தீவனமாக கொடுத்தால், பால் கறவைத்திறன் அதிகரிக்கும். நாமும் அதை உணவாகப் பயன்படுத்தலாம்” என்றார்.
தொடர்புக்கு: 94863-40638, செல்வம், மேலாளர், அப்பச்சி எக்கோ-லாஜிக் காட்டன் நிறுவனம்
No comments:
Post a Comment