வாழையில் ஊடு பயிர்கள்!
வாழையில் ஊடுபயிராக குறுகியகால பயிர்களான கொத்தமல்லி மற்றும் அவரை சாகுபடி செய்தால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.உடுமலை சுற்றுவட்டாரத்தில் தென்னையும், காய்கறி பயிர்களுமே அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கிணற்றில் ஓரளவு தண்ணீர் உள்ளவர்கள் மட்டுமே கரும்பு, வாழை போன்ற அதிகளவு நீர் தேவையுள்ள பயிர்களை நடவு செய்கின்றனர்.
இதில் வாழை, தென்னை போன்ற பயிர்களில் குறிப்பிட்ட காலம் வரை குறுகிய கால பயிர்களான கீரை வகைகள் மற்றும் காய்கறிகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம் என்கின்றனர்
விவசாயிகள். ஓராண்டு பயிரான வாழையில் முதல் ஆறுமதம் வரைக்கும் ஊடுபயிர் சாகுபடியை தாராளமாக மேற்கொள்ளலாம்.குடிமங்கலம் வட்டாரம், வி.வல்லக்குண்டாபுரத்தில் வாழையில் இரண்டு வாழை கன்றுகளுக்கிடையே தழைக்காக கொத்தமல்லியும், பாத்திகளுக்கு இடையே கொத்து அவரையும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தழைக்காக சாகுபடி செய்யப்படும் கொத்தமல்லி விதைக்கப்பட்ட, 40 முதல், 50 நாட்களில் அறுவடை செய்யப்படுகிறது. கீரைவகையை சேர்ந்த கொத்தமல்லி தழைக்கு எப்போதும் தேவை இருப்பதால் நல்ல வருமானம் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. இதற்கு தனியாக பெரிய பராமரிப்பு இல்லாததும், பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருப்பதற்கு இரண்டு மருந்துகள் வரைக்கும் தெளிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோன்று கொத்து அவரையும் நடவு செய்யப்பட்ட, 90 நாளில் அறுவடை தொடங்கி நான்காவது மாதத்தில் பருவம் முடிவடைகிறது.தேவையான தண்ணீர் இருந்தால் ஓராண்டு காலம் மற்றும் நீண்டகால பயிர்களில் விவசாயிகள் கட்டாயம் ஊடுபயிர் சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். கொத்தமல்லி மற்றும் அவரை போன்ற பயிர்களுக்கு பராமரிப்பு குறைவு என்பதோடு இரண்டுமே நல்ல விளைச்சல் தரக்கூடியது.இதனால் வாழைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. அதற்கு மாறாக கூடுதல் வருவாயும் கிடைக்கும்.
வெறும் நிலமாய் இருப்பதற்கு சாகுபடி செய்து வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும். சொட்டுநீர் பாசனம் அமைக்கப்பட்டே தண்ணீர் பாய்ச்சப்படுவதால், குறைந்தளவு தண்ணீரே போதுமானதுடன், களைச்செடிகள் முழுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது. காய்கறி மற்றும் கீரைகளுக்கு எப்போதும் வரவேற்பு குறையாது. இதனால், பயமில்லாமல் சாகுபடியை மேற்கொள்ளலாம். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்
No comments:
Post a Comment