Monday, May 8, 2017

இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி

❇இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 (Indian Rebellion of 1857) அல்லது சிப்பாய்க் கலகம் என்பது பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் சிப்பாய்கள்  மே 10, 1857 இல் இந்தியாவில் மீரட்என்ற நகரில் தொடங்கிய கிளர்ச்சியைக் குறிக்கும். இக்கிளர்ச்சி பின்னர் இந்தியாவின் பல இடங்களிலும், குறிப்பாக இந்தியாவின் மத்திய மலைப் பகுதிகளில், பரவியது. பொது மக்கள் பலரும் இக்கிளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். முக்கிய கிளர்ச்சி இன்றைய உத்தரப் பிரதேசம், உத்தரகாண்டம், வடக்கு மத்தியப் பிரதேசம், டெல்லி, மற்றும் குர்காவுன் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டிருந்தது. கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியப் படையினருக்கு ஒரு பெரும் சவாலாக விளங்கினர் ஜூன் 20, 1858 இல் குவாலியர் நகரின் வீழ்ச்சியுடன் இது முடிவுக்கு வந்தது. இக்கிளர்ச்சி ""இந்தியாவின் முதலாவது விடுதலைப் போர்", அல்லது "சிப்பாய்க் கலகம்" எனவும் அழைக்கப்படுகிறது.

      வட இந்தியாவில் சிப்பாய் புரட்சி வெடித்தபிறகுதான் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் தீவிரமானது என்பது வரலாறு கூறும் தகவல். ஆனால் அதற்கு முன்பே கிட்டத்தட்ட அதே காரணங்களுக்காக வெள்ளையர்களுக்கு எதிராக நடந்த வேலூர் புரட்சிதான் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்! வேலூரில் 1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் புரட்சி நடந்தது. ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த இந்தப் புரட்சி வரலாற்றில் பதிவு செய்யப்படவே இல்லை!

❇வேலூர் கோட்டையில் திப்புசுல்தானின் வாரிசுகளும், உறவினர்களும் சிறை வைக்கப்பட்டிருந்தனர். கோட்டையை வெள்ளைக்கார சிப்பாய்களும் அவர்களுக்குக் கட்டுப்பட்ட இந்திய சிப்பாய்களும் காவல் காத்தனர். இந்தியச் சிப்பாய்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் அடங்குவர்.
இந்நிலையில், வெள்ளையரைப் போரில் வென்று மீண்டும் திப்புசுல்தானின் வாரிசுகளை மைசூர் அரியணையில் அமர்த்த வேண்டும் என்று திட்டமிட்டனர் திப்பு சுல்தான் குடும்பத்துக்கு விசுவாசமான முகம்மதியர்கள். அதனால் பக்கீர்களைப் போல வேடமிட்டு கிராமம் கிராமமாகச் சென்று பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்குச் சுதந்திர உணர்வை ஊட்டி வந்தனர். விரைவில் பிரெஞ்சுப் படைகள் இந்தியா வரும், வெள்ளையர் ஆதிக்கம் மறைந்துவிடும் என்று நம்ம்பிக்கையூட்டினர்.
இந்தச் சமயத்தில்தான் சென்னை மாநில ஆங்கிலேய படை தளபதி ஜான் ரடாக் என்பவர் சிப்பாய்களுக்கு புதிய தோல் தொப்பியை அறிமுகப்படுத்தினார். அது மாட்டுத் தோலால் செய்யப்பட்டு, மாட்டுக்கொழுப்பு பூசப்பட்டது என்று இந்து சிப்பாய்களும் பன்றித் தோலால் செய்யப்பட்டது என்று முஸ்லிம் சிப்பாய்களும் அந்த ஆணைக்குக் கட்டுப்பட மறுத்தனர். அத்துடன் வீரர்கள் நெற்றியில் விபூதி, நாமம் தரிக்கக் கூடாது, மீசையை ஒரே அளவாக வெட்டிக்கொள்ள வேண்டும், தாடி வளர்க்காமல் ஒட்ட மழிக்க வேணடும் என்றும் கூறப்பட்டது. இது எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தது. தங்களைக் கிறிஸ்துவ மதத்தில் மாற்றவே இந்த முயற்சிகள் என்று சிப்பாய்கள் கருதினர். திப்பு சுல்தானின் மகன்கள் படேல் ஹைதர், இளவரசர்கள் அப்துல் தாலிக், மொகைதீன், மைசுல்தீன், முகமதுயாசில், முகமதுசுபான், ஷேக்கர் அல்லா, சிராசுதீன், இமாலுதீன் உள்ளிட்டோர் சிறையில் இருந்தனர். அவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும் அரச குடும்பத்தின் பணியாளர்களைப் போல் வேடமிட்டு, புரட்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். திப்பு குடும்பப் பாதுகாவலராக லெப்டினெண்ட் கர்னல் மேரியேட் இருந்தார்.

❇1806-ம் ஆண்டு ஜூலை 10-ம் நாள் இரவு இரண்டு மணிக்கு வேலூர் கோட்டையில் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள் சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசிம், சுபேதார் ஷேக் ஹுசைன் போன்றோர் தலைமையில் சிப்பாய்கள் அணிவகுத்து ஆங்கிலேய அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர். ஓரிரு ஆங்கிலேய அதிகாரிகள் மட்டுமே உயிர் தப்பினர். புரட்சியில் சிறு பீரங்கிகளும் பயன்படுத்தப்பட்டன. சில அதிகாரிகள் வாளால் வெட்டி கொல்லப்பட்டனர்.
பிறகு புரட்சியாளர்கள் கோட்டையைக் கைப்பற்றினர். வெடிமருந்து தயாரிப்புக் கிடங்கும் அவர்கள் வசமானது. கட்டாய தலைப்பாகையை அமுல்படுத்திய கர்னல் மிக்கிராஸும் சுட்டுக் கொல்லப்பட்டார். இளவரசர்களும் அவர்களது பணியாட்களும் புரட்சியாளர்களுக்கு இனிப்புகளையும் பானங்களையும் வழங்கினர். திப்புசுல்தானின் புலிக்கொடியை ஏற்ற, பொழுது புலர்ந்தது.
அந்தச் சமயத்தில் புரட்சியாளர்களும் இளவரசர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பணியாளர்களும் கோட்டையிலிருந்த கஜானாவை உடைத்துக் கொள்ளையடிக்க முற்பட்டனர். இதில் புரட்சியாளர்களின் கவனம் சிதறியது. அதற்குள் சென்னையிலிருந்தும் வேறு ஊர்களிலிருந்தும் ஆங்கிலப் படைகள் வந்து கோட்டையை மீண்டும் கைப்பற்றியன. ஏராளமான புரட்சிக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பி ஓடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
புரட்சிப் படை வீரர்களோடு அப்பாவிகளும் கொல்லப்பட்டனர். அன்று மட்டும் வெள்ளை ஏகாதிபத்தியப் படை கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியது. 600 பேர் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை பெற்றனர். வேலூர் புரட்சி வெடித்தபோது சென்னை மாகாண கவர்னராக இருந்த லார்ட் வில்லியம் பென்டிங்கும் மாநில முதன்மை படை தளபதி சர்ஜான் ரடாக்கும் பதவியிலிருந்து பிரிட்டிஷ் அரசால் நீக்கப்பட்டனர். வேலூர் புரட்சி நடந்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு சற்றேறக்குறைய அதே காரணங்களுக்காக வட இந்தியாவில் சிப்பாய் கலகம் மூண்டது.
கலகத்திற்கான காரணங்கள்
1764 ஆம் ஆண்டு பக்சார் போருக்குப் பின் கிழக்கிந்திய வணிகக் குழு இந்தியாவில் ஒரு அரசியல் சக்தியாக எழுச்சியுற்றது. பின் வந்த காலங்களில் இந்தியாவின் வளங்கள் கம்பெனியின் வணிக முன்னேற்றத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. இந்தியர்களின் நலன்கள் பெரிதாக பொருட்படுத்தப்படவில்லை. செல்வச் சுரண்டல், இந்திய கைவினைத் தொழில்களின் நலிவு போன்றவை இந்தியாவில் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தன. தொழில் புரட்சியின் விளைவாக பிரிட்டன் தொழிலகங்களில் இயந்திரங்கள் அதிக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிதாக அறிமுகமான இயந்திரங்களின் உதவியால் உற்பத்திப் பொருட்களும் அதிக அளவில் தயாரிக்கப்பட்டன. ஆங்கிலேயே வணிகர்கள் இவற்றை விற்பனை செய்யும் சந்தையாகவே இந்தியாவை பார்க்கத் தொடங்கினர். அதே நேரம் இந்தியாவில் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட இந்தியப் பொருட்களுக்கு பிரிட்டனில் அதிக வரிகள் விதிக்கப்பட்டன. எனவே இந்தியப் பொருட்களுக்கான தேவை சரிந்து இந்தியத் தொழில்கள் அழிவை நோக்கி சென்றன. இது தவிர ஆங்கிலேயர்கள் நிலவரி மக்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்திருந்தன.

❇ஆங்கிலேயரின் துணை படை திட்டம் மன்னர்களிடையே வெறுப்புணர்ச்சி உண்டாக்கியது
அப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட என்பீல்டு வகை துப்பாக்கிகள் உடனடிக் காரணமாக அமைந்தன. அவ்வகை துப்பாக்கிகளுக்கு வழங்கப்பட்ட தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன. இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்த உறைகள் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பினால் ஆனவை என்று தகவல் பரவியது. இது இந்து மற்றும் முஸ்லிம் சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர். இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர். இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில் தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சிகிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.

⭐புரட்சி தோல்வியுற்றாலும் ஆங்கிலேய

⭐அரசிற்கு பேரதிர்ச்சியை

⭐உண்டாக்கியதாலும், இந்து-முஸ்லிம்

⭐ஒற்றுமையை நிலைநாட்டியதாலும்

⭐இந்தப்புரட்சி வரலாற்றின் பக்கங்களில்

⭐அழுத்தமாக பதிந்துபோனது

⭐ஒரே நாளில் ஒடுக்கப்பட்டாலும் ஒருபோதும்

⭐அழிக்க முடியாத வரலாறாக ஆனது

🌟அந்தக் கிளர்ச்சி!👏👏

Tuesday, May 2, 2017

தர்ப்பை புல்

தர்ப்பை புல் என்றவுடனே ஏதோ சாங்கித்திற்கான புல் என்று என்னவேண்டாம் .ஏனென்றால் இதுவரை நாம் அப்படிதான் அதை பார்த்துள்ளோம் ..அவருக்கு இன்னொரு பக்கம் இருக்கு பயப்படாம வாங்க அதையும் என்னான்னுதான் பார்ப்போம்

தர்ப்பைப் புல்லை நாட்டு மருந்து கடைகளிலும், கிரகணத்தின்போது கோயில்களிலும் பார்த்திருப்போம். இதன் மகத்துவம் ஏராளமானது. தர்ப்பைப் புல் புண்ணிய பூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. தர்ப்பைப் புல் வளர தண்ணீர் தேவையில்லை. தண்ணீல் இல்லாமலும் வளரும் இது, பல நாட்களுக்கு தண்ணீரிலேயே போட்டு வைத்தாலும் அழுகாத தன்மை கொண்டது. சூரிய கிரகணத்தின் போது இதற்கு வலிமை அதிகம்.

இதன் காற்றுப்படும் இடங்களில் தொற்றுநோய்கள் அண்டாது. அதனால்தான் கிரகண காலத்தில் இந்த தர்ப்பைப் புல்லை நாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், குடிநீர்களில் போட்டு வைக்கின்றோம். இந்த புல்லில் காரமும், புளிப்பும் இருப்பதால் செப்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலில் தேய்க்கிறார்கள். அவ்வாறு செய்வதால் அதன் ஓசை திறன் குறையாமல் இருக்குமாம்.

தர்ப்பைப்புல் சுவையில் இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவையுடையது. குளிர்ச்சியான வீரியமுடையது. சீரணத்தின் இறுதியில் இனிப்புச் சுவையாக நிற்க்கக் கூடியது. மூவகை தோஷங்களாகிய வாதபித்தகபங்களை அவற்றின் சீற்றத்திலிருந்து கீழிறக்கி சமநிலைப் படுத்துவதனால் தர்ப்பை ஒரு அருமருந்தாக நாம் குறிப்பிடலாம். சில சர்க்கரை உபாதை நோயாளிகளுக்கு உடலில் எரிச்சலுடன் மஞ்சள் நிறம் கலந்த சிறுநீர் காணப்படும். இதற்கு ஹாரித்ரமேஹம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் சிலருக்கு துர்நாற்றமுள்ளதாகவும், மஞ்சிட்டை (மஞ்சள்நிறம்) கலக்கிய நீர் போன்றதுமாக சிறுநீர் வெளியேறும் நிலையில் அதற்கு மாஞ்சிஷ்டமேஹம் என்றும் துர்நாற்றம், சூடு, இரத்தம் போன்றும் சிறுநீர் வெளியேறுவதும் இரக்தமேஹமென்றும் கூறப்படுகிறது.

இந்த மூன்று வகையான சிறுநீர் உபாதைகள் அனைத்தும் பித்ததோஷத்தினுடைய சீற்றத்தின் விளைவாக ஏற்படுவதால் அதுபோன்ற நிலைகளில் தர்ப்பைக் குடிநீர் அருந்துவது பித்தத்தினால் ஏற்படக் கூடிய சர்க்கரை உபாதையை குறைப்பதுடன் சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று உபாதைகளையும் குணப்படுத்தும் சக்திவாய்ந்த ஒரு குடிநீர் ஆகும்.

சுமார் 15 கிராம் தர்ப்பைப்புல்லை ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும்வரை குறுக்கிக் காய்ச்சி குளிர்ந்தபிறகு வடிகட்டி அந்த தண்ணீரை ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாகப் பருகிவர மேற்குறிப்பிட்ட உபாதைகள் நீங்கிவிடும். சிலருக்கு தர்ப்பை நீரைக் காய்ச்சுவதற்கான நேரம் இல்லாமல் இருப்பதால் தர்ப்பைப் புல்லை நன்றாக இடித்து இரவு முழுவதும் பானைத் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அதைப் பருகுவதன் மூலம் அந்த நீருக்கான மருத்துவகுணங்களை நம்மால் பெற இயலும். இதற்கு "ஹிமகஷாயம்" என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது.

சர்க்கரை உபாதையின் தாக்கத்தையும் நாம் குறைத்துக்கொள்ள முடியும். தர்ப்பைப்புல்லுக்கு மேலும் சில நல்ல மருத்துவகுணங்கள் இருக்கின்றன.

தர்ப்பைப்புல் உடலுக்குக் குளுமையை ஏற்படுத்துவதால் தர்ப்பைப்புல் குடிநீர் வெயில் காலத்தில் அருந்தவேண்டிய ஒரு அற்புதமான பானமாகும்.

தர்ப்பையிலுள்ள நெய்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சியின் காரணமாக தாய்ப்பாலையும், சிறுநீரையும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
சிறுநீரகத்தில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை சீராக்கக் கூடிய தர்ப்பைக் குடிநீரின் உபயோகத்தின் மூலம் இரத்தத்தில் தேங்கும் யூரியா, க்ரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.

சிறுநீரகக்  கற்களை உடைத்து வெளியேற்றும் தன்மை தர்ப்பைப்புல்லுக்கு இருக்கிறது.
தண்ணீர் தாகத்தைப் போக்கும். சிறுநீரகப்பையில் ஏற்படும் வலி மற்றும் அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்குள்ள பெண்களுக்கும் தர்ப்பைக் குடிநீர் மிகவும் நல்லது என்று பாவப்ரகாசர் எனும் ஆயுர்வேதமுனிவர் குறிப்பிடுகிறார்.
மஞ்சள் காமாலை உபாதையில் கல்லீரலில் உள்ள கிருமித்தொற்று மற்றும் அதிகமான பித்தஊறல் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இரத்தத்தில் ஏற்படும் காந்தல் மற்றும் அதன்மூலமாக ஏற்படும் இரத்தமூலம், இரத்தக்கசிவு, வாய்ப்புண் சிறுநீரக எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும்.
நாவிற்கு நல்ல ருசியை ஏற்படுத்தித் தரும். Herpes zoster எனப்படும் நரம்பு தொடர்தோல் எழுச்சியில் தர்ப்பைப் புல் தண்ணீரை வெளிப்புறம் மற்றும் உட்புற உபயோகத்தால் அதில் ஏற்படும் எரிச்சல் மற்றும் குத்தல் வலியை நம்மால் போக்கிக் கொள்ள முடியும் என்று நிகண்டுரத்னாகரம் மற்றும் ராஜநிகண்டு எனும் ஆயுர்வேத புத்தகங்களில் குறிப்புகளாகக் காணப்படுகின்றன.
காஞ்சி மஹாஸ்வாமிகள் தர்ப்பையின் பெருமைகளைப் பற்றி, “தர்ப்பை, துளஸி, வில்வம் என்றிப்படி நம் சாஸ்திர காரியம், பூஜை இவற்றில் பிரயோஜனமாகின்றவற்றுக்கெல்லாம் வைத்ய ரீதியிலோ, மற்ற ஸயன்ஸ்களின் ரீதியிலோ sound basis (அழுத்தமான அடிப்படை) இருக்கிறது எனகிறார்கள். க்ரஹண காலத்தில் எல்லாவற்றிலும் தர்ப்பையைப் போட்டு வைக்க வேண்டுமென்றால் முன்னே பரிஹாஸம் செய்தார்கள். “சூரியனைப் பாம்பு தின்கிறதாம். அதன் நாக்கை அறுப்பதற்கு தர்ப்பை போட்டிருக்கிறார்களாம்!” என்று கேலி பண்ணினார்கள். ஆனால் இப்போதோ க்ரஹண காலத்தில் அட்மாஸ்ஃபியரிலும், அதற்கும் மேலே இருக்கிற ஸ்ஃபியர்களிலும் அநேக contamination (அசுத்தம்) , radiation ஆகியன உண்டாவதாகவும், கர்ப்பத்திலிருக்கிற சிசுவைக் கூட அது பாதிப்பதாகவும், அதனால் “க்ரஹணத் தீட்டு” என்று அந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருக்கணும் என்று வைத்ததில் ரொம்ப அர்த்தமிருப்பதாகவும், இந்த பாதிப்பை counteract பண்ணும் (எதிர்த்துப் போக்கும்) சக்தி தர்ப்பைக்கு இருக்கிறதென்றும் கூறுகிறார்கள்.

இத்தனை சிறப்பு வாய்ந்த தர்ப்பை நீரை தமிழகத்தில் வரப்போகும் கோடைகாலத்தில் பயன்படுத்தி அதன் நிறைவான பலனை அனைவரும் பெற முயற்சிப்பது ஆரோக்கியத்திற்கான ஒரு திறவுகோலாக அமைத்துக் கொள்வோம்

கவலையை விரட்டும் கலப்புப் பயிர்கள்!

கவலையை விரட்டும் கலப்புப் பயிர்கள்!
தண்ணியில்லா காட்டுக்கு மிளகாய்... கூடவே ஜோடி போட சீரகம்...100 கிராம் சீரகம் விதைச்சா, அம்பது கிலோவுல இருந்து நூறு கிலோ சீரகம் வரைக்கும் கிடைக்கும்.. #saringo #saringovivasayam
உணவின் உன்னதம் பசியில் வாடுபவர்களுக்குத்தான் தெரியும். அதேபோல, தண்ணீரின் அருமை, வறண்டப் பகுதி விவசாயிகளுக்குத்தான் தெரியும். அந்த வகையில், தமிழகத்தில் தண்ணீரின் அருமையை உணர்ந்தவர்கள் என்று ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளைத்தான் சொல்ல முடியும். மழை நீரை நம்பி... அல்லது சிலர் அமைத்திருக்கும் குழாய்க் கிணறுகளில் இருந்து தண்ணீரை விலைக்கு வாங்கித்தான் விவசாயம் செய்ய வேண்டும். இதுதான் இம்மாவட்டத்தில் காலகாலமாக நிதர்சனம்.

இத்தகைய கஷ்டமான ஜீவனத்திலும்.... விடாப்பிடியாக விவசாயம் செய்து வருகிறார்கள், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பல விவசாயிகள். மானாவாரி விவசாயியாக இருந்தாலும் சரி... தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயியாக இருந்தாலும் சரி... அவர்கள் ஒரே பயிரை மட்டும் பயிரிடுவதில்லை. குறைந்தபட்சம் மூன்று பயிர்களையாவது சேர்த்து சாகுபடி செய்கிறார்கள். இப்படிப்பட்ட வறட்சியிலும், இவர்களால் தாக்குப்பிடிக்க முடிவதற்கு ஒரே காரணம், இவர்களது இந்த கலப்புப் பயிர் சாகுபடி முறைதான். அந்த வகையில், குண்டு மிளகாய், சீரகம், பருத்தி, அகத்தி, கத்திரி, தக்காளி என கலப்பு முறையில் பயிரிட்டுள்ளனர், போகலூர் வட்டம், காமன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த குருவாண்டி-காளியம்மாள் தம்பதி.

அவர்களின் வயலுக்கு நாம் சென்றிருந்தபோது, வயலில் மிளகாய் எடுத்துக் கொண்டிருந்தார், காளியம்மாள். குருவாண்டி வேலைக்குச் சென்றிருந்தார். வெள்ளந்தி சிரிப்போடு வரவேற்ற காளியம்மாள், தங்களது விவசாய முறைகளை பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

''எங்களுக்கு இருக்குறது, இந்த ஒரு ஏக்கர் பூமிதான். இதை வெச்சுதான் வண்டியை ஓட்டிகிட்டிருக்கோம். 'மனுஷங்க பகைச்சாலும், மானம் (வானம்) பகைக்காது’னு சொல்லுவாக. ஆனா, இந்த வருஷம் அந்த மானமும் பகைச்சிடுச்சு. ஒரச்சி ஒத்த மழை பெய்யாம செத்துக் கிடக்கு சம்சாரி பொழப்பு. இருந்தாலும், 'இப்ப பேஞ்சிடும், அப்ப பேஞ்சிடும்’னு நம்பிக்கையிலதான் மண்ணை நோண்டிக்கிட்டிருக்கோம். இந்தப் பஞ்சத்துலயும் எங்களைக் காப்பாத்தி வெச்சிருக்குறது, மொளகாதாங்க (மிளகாய்). மழை பெய்ஞ்சாலும் பெய்யாட்டியும், காய்ச்சிக் காப்பாத்திடும் மொளகா. எங்களுக்கு இந்த நிலத்தை விட்டா, வேற போக்கிடம் கிடையாது. அதனால, ஒரே பயிரை விதைக்காம பல பயிருங்களைச் சேத்து விதைச்சா... வருஷம் முழுக்க நிலத்துல இருக்கலாம்னுட்டுதான் பல பயிருகளை விதைக்கோம்'' என முன்னுரை கொடுத்த காளியம்மாள், தொடர்ந்தார்.

''புரட்டாசி மாசத்துல ஆறு படி மொளகா விதையோட, 100 கிராம் சீரகத்தை வாங்கி விதைச்சு விட்டோம். சீரக விதைக்காக எங்கயும் அலைய வேண்டியதேயில்ல. மளிகைக் கடைகள்ல விக்குற சீரகத்தை வாங்கி விதைச்சாலே முளைச்சு வந்திடும். நான் மளிகைக் கடையில வாங்கித்தான் விதைச்சேன். நல்லபடியா விளைஞ்சு நிக்குது. மிளகாயையும், சீரகத்தையும் விதைச்ச பிறகு, வீட்டுத்தேவைக்காக அங்கங்க பரவலா கத்திரி, தக்காளியை நட்டோம். வரப்புகள்ல மாடுகளுக்கு தீவனத்துக்காக அகத்தியை நட்டோம்.

அனைத்துப் பயிருக்கும் ஒரே ஊட்டம்தான் !
அங்கங்க மிச்சம் இருந்த இடங்கள்ல பருத்தி விதையை ஊண்டி வெச்சோம். ஆரம்பத்துல தண்ணிய விலைக்கு வாங்கித்தான் பாய்ச்சினோம். இப்ப அங்கயும் தண்ணி இல்ல. மொளகா விதைச்ச பெறகு ஊக்கத்துக்காக ரெண்டு தடவை யூரியா, பொட்டாஷ் வெப்போம். வேறெந்த மருந்தையும் அடிக்க மாட்டோம். மொளகாவுக்கு போடுற ஊக்கத்துலயே மத்தப் பயிருங்களும் வளந்துடும். விதைச்சதிலிருந்து ஆறு மாசத்துல மொளகா மகசூலுக்கு வந்துடும். கடைசி நேரத்துல தண்ணியில்லாததால இந்த வருஷம் மொளகா வெளச்சல் சொகப்படல. மொத்தமே 8 மூட்டைதான் (20 கிலோ மூட்டை) காய்ச்சது. நல்லா காய்ச்சிருந்தா பதினைஞ்சு மூட்டைக்கு மேல காய்ச்சிருக்கணும். ஒரு மூட்டை மிளகாய் 500 ரூபாய்க்கு விக்குது. எங்க நிலத்துல வேலைக்கு ஆளுங்கள வெக்காம, நாங்களே வேலை செஞ்சுகிட்டதால பெருசா செலவில்ல. ஓரளவுக்கு மொளகா முடிஞ்சிடுச்சு.

100 கிராம் விதை... 50 கிலோ மகசூல் !
மொளகாய்க்கு பின்னாலயே சீரகமும் அறுப்புக்கு வந்துடும். இந்த வருஷம் இவ்வளவு வறட்சியிலயும் சீரகச் செடிங்க என் உசரத்துக்கு ஜம்முனு வளந்துடுச்சு. சீரகத்தைப் பொறுத்தவரைக்கும், எந்த பண்டுதமும் தேவைப்படாத பயிரு. விதைச்ச அஞ்சாவது மாசம் மஞ்ச கலர்ல பூவெடுக்கும். ஆறாவது மாசத்துல மஞ்ச பூ பச்சை கலர்ல மாறி நிக்கும். அதுதான் அறுப்புக்கு ஏத்த நேரம்.

சரியான நேரத்துல அறுக்காம விட்டா, பச்சை கலர் மாறி, காஞ்சி போயிடும். பச்சை கலர்ல காய்ச்சி நிக்குற சீரகத்தை கொத்துக்கொத்தா அறுத்து, மொத்தமா காய வெக்கணும். காய்ஞ்ச பிறகு, குச்சியால தட்டியோ, மிதிச்சோ உதிர்த்து, புடைச்சோம்னா... சீரகம் தனியா வந்துடும். 100 கிராம் சீரகம் விதைச்சா, அம்பது கிலோவுல இருந்து நூறு கிலோ சீரகம் வரைக்கும் கிடைக்கும். இந்த முறை 50 கிலோ கிடைச்சுருக்கு. எங்க சொந்த பந்தங்க, தெரிஞ்சவங்களுக்குக் கொடுத்திட்டு... மிச்சத்தை விப்போம். ஒரு கிலோ சீரகம்

150 ரூபாயில இருந்து 200 ரூபாய் வரைக்கும் விக்குது'' என்ற காளியம்மாள் நிறைவாக,

''பருத்தி இன்னமும் மகசூலுக்கு வரல. இந்த ஒரு ஏக்கர் நிலத்துல இருந்து வருஷத்துக்கு எப்படியும் 25 ஆயிரம் ரூபாய்க்கு குறையாம வருமானம் வந்துடும். வீட்டுக்குத் தேவையான காய்கறிக கிடைச்சிடும். அதுபோக அவுக (கணவர்) அப்பப்ப வேற வேலைக்கும் போவாக. தண்ணியில்லங்கிற ஒரு காரணத்துக்காக நிலத்தைச் சும்மா போட்டு வெக்க முடியுமா? நிலத்துல போடுற உழைப்பு, ஒண்ணுக்கு ஆயிரம் மடங்கா திரும்பி வரும். சீரகத்தைப் போல'' என்றபடியே மகிழ்ச்சியோடு விடைகொடுத்தார்.